Quantcast
Channel: சிவகாசிக்காரன்
Viewing all 124 articles
Browse latest View live

50வது பதிவு!!!! - தூர்தர்ஷனில் சிறு வயதில் கவரந்த நிகழ்ச்சிகள்..

$
0
0
பலரும் பிளாக் ஆரம்பித்து மாதத்துக்கு 100பதிவுகள் வரைப் போட்டுக்கொண்டிருக்கும் போது, 3வருடங்கள் கழித்து வரும் 50வது பதிவை பெரிதாக நினைக்கவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சிறு மகிழ்ச்சி. 50 நெருங்கிவிட்டதால். என் பதிவுகள் பலவும் பழைமையையும் பழைய நிகழ்வுகளையும் சார்ந்தே அமைந்திருப்பதை நண்பர்களில் சிலர் அறிந்திருப்பார்கள். எனக்கு எப்போதுமே இனிமையான பசுமையான பால்ய காலத்து விசயங்களை அசை போடப்பிடிக்கும். அந்த வரிசையில் என் 50வது பதிவாக சிறு வயதில் தூர்தார்ஷனில் என்னைக் கவரந்த சில நிகழ்ச்சிகளை (தமிழ் & ஆங்கிலம்) இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஜங்கிள் புக்:




சின்ன சின்ன சிட்டுகளாம் என்று தமிழில் ஆரம்பிக்கும் பாட்டு இது.. என் வயதொத்த அனைவரையும் தன் சந்தோசங்களால் சிரிக்க வைத்த பாலு கரடியையும், பிரிவால் அழ வைத்த மௌக்லியையும், வில்லத்தனத்தால் பயமுறுத்திய ஷேர்கான் புலியையும் எப்படி மறக்க முடியும்? இதன் இரண்டாம் பாகமும் தூர்தர்ஷனில் போடப்பட்டது. மௌக்லி காட்டில் இருந்து ஊருக்குள் வருவது. ஆனால் அது முதல் பாகம் அளவுக்கு என்னைக் கவரவில்லை. அந்தக் காடும் காட்டு விலங்குகளும் சித்திரங்கள் தான் என்றாலும் அவை நம் கண் முன் நின்று நம்மிடமே பேசுவது போல் இருக்கும். ருட்யாட் கிப்லிங் (Rudyard Kipling) இந்தியாவில் நடப்பது போல் இந்தக் கதையை எழுதியிருப்பார். (அவர் இந்தியாவில் பிறந்தவர் தான், ஆங்கிலேயெ ஆட்சியின் போது)


அலிஃப் லைலா:




இந்த நாடகம் ஒவ்வொரு திங்களும் இரவு 9.30க்குப் போடுவார்கள். அரேபிய இரவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மர்மத்தொடர். எனக்கு இதில் வரும் கதாநாயகன் முகம் மட்டுமே நினைவில் உள்ளது இப்போது வரை. பார்ப்பதர்க்கு கண்ணாடி போடாத பாக்கியராஜையும் அனில் கபூரையும் கலந்த கலவை போல் இருப்பார். அவர் கோபப்படும் போது இடது மேல் உதடை உயர்த்தி கோபப்படுவர். இப்போது வரை நான் அதை தினமும் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் வலது உதடை மட்டுமே உயர்த்த முடிகிறது. இடது உதடு சொல் பேச்சு கேட்கவில்லை. அதே போல் இந்தத் தொடரில் வரும் இன்னொரு பாத்திரமும் மனதில் உள்ளது. அது கதாநாயகனின் தோழனாக வரும் ஒரு மந்திரவாதி. அவர் ஒரு தோல் பையை எப்போதும் வைத்திருப்பார். தன் உள்ளங்கையை மடக்கி அதில் ஒரு முத்தமிட்டு, கையை விரித்து இவர் உரிய ஆரம்பித்தால் சுற்றி இருக்கும் அனைத்தும் அந்தப் பைக்குள் வந்துவிடும். அதே போல் இவர் ஊதினால் அந்தப் பையில் இருந்து இவர் எது வர வேண்டும் என நினைக்கிறாரோ அது வந்து விடும். ஒரு முறை அவர் தண்ணீரை வெளியிட்டு எதிரிகளை சுற்றிவழைத்து கதாநாயகனைக் காப்பார். அப்போது நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பக்கத்து வீட்டு அக்கா சொன்னது, "பாவிங்க, தண்ணிய இப்படி செலவழிக்குராய்ங்க பாரு" என்று.


சந்திரகாந்தா:


வாராவாரம் ஞாயிறு காலை 9 மணிக்குப் போடப்பட்ட நாடகம். "சந்திரகாந்தா சந்திரகாந்தா அவள் கதையே..." என்று வரும் அருமையான பாடல். சுடச்சுட இட்லி தின்று கொண்டே பார்ப்பதால் டபுள் சந்தோசம். (அப்போதெல்லாம் வாரத்தில் ஞாயிரில் மட்டும் தான் இட்லி, தோசை, பூரி போன்ற டிபன் ஐட்டங்கள்.) பிற நாடகங்களைப்போல் இதில் ஆரம்பத்திலேயெ பாடல் வராது. முதலில் ஒரு சிறு முன்குறிப்பு கொடுப்பார்கள், சந்திரகாந்தாவைத் தேடிச்செல்லும் இளவரசன் பற்றி. இடை இடையில் பாடல் வரும். "இந்த சூழ்நிலையிலே இளவரசனின் நினைவிலே உருகுகின்றாள் சந்திரகாந்தா.. உருகுகின்றாள் சந்திரகாந்தா" என்கிற வரியை இப்போதும் முனுமுனுத்து உருகிக்கொண்டிருக்கிறேன். இதில் வரும் எஃகு என்னும் வில்லனும், பண்டிதரும், மறக்க முடியாதவர்கள். அதே போல் சேட்டக் என்னும் குதிரையும் மறக்கவே முடியாத ஒன்று. பல நேரங்களில் நல்லவர்களை எதிரிகளிடம் இருந்து காக்க தக்க சமயத்தில் வந்து நம் வயிற்றில் பாலை வார்ப்பது இந்த சேத்தக் தான்..

சுரபி


ஞாயிறு இரவு 9.30க்குப் போடுவார்கள். அரை மணி நேர நிகழ்ச்சி. பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி. மிகவும் ஆச்சரியமான பல விசயங்களைப் பற்றி பேசுவார்கள். நம் இந்திய நாட்டின் வரலாறு, கலாசாரம், பழக்க வழக்கங்களைப் பிரதானமாகக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி. சில நேரங்களில் வெளிநாட்டுத் தகவல்களும் வரும். அப்படித்தான் நான் Dead Sea பற்றி அறிந்து கொண்டேன், அங்கே யாரும் மூழ்கிவிட முடியாது என்று. டைட்டிலில் வரும் இசை மனதை மிருதுவாக வருடக்கூடியது., இதைத் தொகுத்து வழங்கிய ரேணுகா ஷஹானேவிற்கு (Hum aapke hain kaunல் மாதுரி தீக்ஸித்தின் அக்கா) நான் தீவிர ரசிகன். தொகுத்து வழங்கும் ஆணின்  பெயர் சித்தார்த் என்று நினைக்கிறேன். இப்போது மதுரை வானொலியிலும் கோடை எப்.எம்.லும் இருக்கும் சுந்தர ஆவுடையப்பனின் குரலுக்கு நான் இவரின் முகத்தையே கற்பனை செய்து கொள்வேன். ரேணுகா மற்றும் அந்த ஆணின் சிரித்த முகமும் அதற்கு கொடுத்த எளிய தமிழ் மொழி மாற்றமும், அவர்களின் உடைகளும் மறக்கமுடியாதவை.

மகாபாரதம்:


இந்த நாடகத்தைப் பற்றி நினைத்தாலே எனக்கு முதலில் நினைவு வருவது எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் நான் போட்ட சண்டை. அவள் அந்த சண்டைக்குத் தண்டனையாக தனது வீட்டிற்கு இனி மகாபாரதம் பார்க்க வரக்கூடாது என்று சொன்னாள். நானும் அதற்குப் பின் இதைப் பார்த்தது இல்லை. எங்கள் வீடும் ஆச்சி வீடும் பக்கத்துப் பக்கத்து தெருவில் இருந்தன. ஞாயிறு காலையில் என்னை எழுப்பி விட வருவார் இந்த நாடகம் பார்ப்பதற்கு. எழுத்துப் போட ஆரம்பிக்கும் போது கேட்கும் சங்கொலி, நாடகத்தின் இடையிடையில் அண்ட வெளியில் ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கும் பின்னணியில் ஒரு கம்பீரக்குரல் கேட்கும். அந்தக் குரல் சொல்லும் கருத்துக்கள் எதுவும் புரியாது என்றாலும், அந்தக் குரல் நம்மை வசீகரித்து 'என்ன தான் சொல்றாய்ங்க?' என்று கவனிக்க வைக்கவல்லது..


மேலும் சாந்தி, யுக், ஷக்திமான், ஸ்ரீகிருஷ்ணா போன்ற பலவும் மறக்க முடியாதவை. அதிலும் ஷக்திமானில், இரண்டு கைகளையும் குறுக்காக ஒன்றின் பின்புறத்தை மற்றொன்று பார்ப்பது போல் வைத்து "இருள் நீடிக்கட்டும்" என்று சொல்லும் வசனம் அப்போது எங்கள் பள்ளியில் பிரபலம். தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் ஆச்சியிடம் என்றைய சாந்தி மற்றும் யுக் கதைகளைப்பற்றி கேட்பேன். சாந்தி கதையை மட்டும் சொல்லுவார். யுக் அவருக்குப் பிடிக்காது. ஏனென்றால் அது சாந்தி போல குடும்பக்க்கதை  (ஏக் கர் கி ககானி என்று ஹிந்தியில் நாடகம் போடும் போது சொல்வார்கள்) இல்லை. சுதந்திரப் போராட்ட கதை. இன்னொரு முக்கியமான விசயம், 3மணி அவர் தூங்கும் நேரம். 2.30க்கு சாந்தி ஆரம்பித்து 3 மணிக்கு முடிந்து விடும். ஆச்சியும் சாந்தி முடிந்ததும் 4 மணி வரைத் தூங்கிவிடுவார். அதனால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததா இல்லையா என்பதே எனக்கு கடைசி வரைத் தெரியாமல் போனது. !

இதெல்லாம் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. தமிழிலும் பல நல்ல நாடகங்கள் வந்தன. காத்தாடி ராமமூர்த்தி இயக்கி நடித்த "ஸ்ரீமான் சுதர்சனம்" என்னும் குடும்ப சிக்கனத்தை வலியுறுத்தும் நாடகம், விவேக்கின் "மேல்மாடி காலி" என்னும் நகைச்சுவை நாடகம். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் போன்று ஒன்று வருமா? வெள்ளிக்கிழமைகளில் பள்ளியில் இருந்து அழைத்து வரும் அம்மாவிடம் "எம்மா இன்னைக்கு ஒலியும் ஒலியும்ல என்ன பாட்டுலாம் போடுவாங்க?" என்பேன். அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொல்லுவார் "வால் போஸ்டர் எல்லாம் பாத்துக்கிட்டே வா, இன்னைக்கு என்ன படம்லாம் வந்துருக்குன்னு. அதுல இருந்து தான் பாட்டு போடுவாங்க" என்பார். 

ஆனால் ஒரு முறை கூட அவ்வாறு எங்கள் ஊரில் ஓடும் படத்தின் பாடலை ஒளியும் ஒலியுமில் போட்டதில்லை.. அதே போல் புதன் கிழமைகளில் இரவு 7.20 க்கு ஒளிபரப்பப்படும் "சித்ரகார்" மூலம் தான் "பர்தேசி, பர்தேசி - ராஜா ஹிந்துஸ்தானி", "தூ ச்சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த் - மொஹ்ரா"  போன்ற பல ஹிந்திப்படப் பாடல்களும் பிரியமான பாடல்கள் வரிசையில் வந்தன.. தொடர்ந்து பல வாரங்களாக அவர்கள் முதல் பாடலாக பர்தேசி பாடலைத்தான் போட்டார்கள். இப்போது வரை அந்தப்பாடல் ஒரு எவர்கிரீன் தான். தூர்தர்ஷனைப் பற்றி இன்னும் நிறைய இப்படி பேசிக்கொண்டே போகலாம்..

டிஸ்கி : தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது என்ன மாதிரி நிகழ்ச்சிகள் இருந்தது என்று பாருங்கள். வரலாறு மற்றும் அதன் புனைவுகள், இதிகாசங்கள், இலக்கியங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட நாடகங்கள், பொது அறிவு சார்ந்த விசயங்கள் என்று நமக்குக் கற்பிக்க பலவும் இருந்தன. ஆனால் இப்போது கேபிள் சேனல்களில் போடப்படும் நாடகங்களைப் பார்த்தால்........... சரி விடுங்க, அதப் பத்தி பேசுனா வாயில் ரொம்ப அசிங்க அசிங்கமா வரும்..

யானை - சிறுகதை

$
0
0
எத்தனை முறை பார்த்தாலும் எவ்வளவு தொலைவில் பார்த்தாலும் எப்போதுமே சலிக்காத விசயங்கள் உலகில் உண்டு.. கடல், ரயில், கவர்ச்சி, ஊழல். இந்த வரிசையில் யானையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். நாம் பார்த்து அதிசயிக்கும் மிகப்பெரிய உயிரினம். மனிதனைப் புரிந்து கொண்ட மனிதனால் புரிந்துகொள்ளப்படாத உயிரினம்.

ராஜபாளையம் - பழைமையும் கட்டுப்பாடும் சமுதாயத்திற்குத் தேவையான சில நல்ல பிற்போக்குத்தனங்களும் வரைமுறைக்குட்ப்பட்டு வாழும் மக்களும் நிறைந்த ஊர் இது. அந்த ஊரை மிகப்பெரிய வியாபார மையமாக மாற்றிய, மறைந்த தொழிலதிபர் ஒருவரின் பிறந்தநாள். ஊர் மக்களே கலை நிகழ்ச்சி, கோயில் பூஜை, என்று முன்னின்று செய்யும் ஒரு சிறு திருவிழா.

மூன்று நாட்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும். கர்னாடக சங்கீதத்திற்கும், கிளாசிக்கல் நடனத்திற்கும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாய் வருவதை நீங்கள் காணலாம். கடைசி நாளில் கோயிலில் பூஜை நடக்கும். அப்போது ஒரு யானை வந்து நிற்கும். ஏன் வந்திருக்கிறோம்? எதற்கு நிற்கிறோம்? என்று தெரியாத பல மனிதர்களுடன் அதுவும் நிற்கும் தான் வந்திருக்கும் வேலை அறிந்து. 

எனக்கு அங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் பூஜைகளைக் காண்பதை விட அந்த யானையைக் காண்பதே போதுமானதாய் இருந்தது. என்னை விடக் கொஞ்சமே கொஞ்சம் கறுப்பு! தீயில் கருகிப்போன பெரிய காகிதம் போல் காது. நாயக்கர் மஹாலின் தூணை பெயர்த்துக்கொண்டு வந்து சொறுகியது போல நான்கு கால்கள். எதையும் உவமைக்கு அழைக்க முடியாத அதன் நீண்ட மூக்கு. வாய்க்கும் தும்பிக்கைக்கும் இடையில் ஒழுகிக்கொண்டிருக்கும் தந்தம். அதன் கரிய பெரிய உருவத்திற்கு finishing touch கொடுக்கும் அதன் வால், அதன் நுனியில் வெட்டுவதற்கு பாக்கி இருக்கும் 4,5 முடி. ஒரு அழகான பெண்ணை ரசிக்கும் அதே உணர்வோடும் ஆசையோடும் தேடுதலோடும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த யானையும் ஒரு பெண்ணைப்போல் என்னை சட்டை செய்யவே இல்லை!

அந்த யானை தன் இடப்பக்க பின்னங்காலை ஊனாமல் தூக்கி வைத்துக்கொண்டே நின்றது. ஒவ்வொரு முறையும் அதை ஊன்ற முயற்சி செய்து முடியாம்லே போனது. அதோ இப்போது கூட ஊன்றுவது போல் வந்து வெடுக்கென்று காலை தூக்கிக்கொண்டது, கவனித்தீர்களா? ஏதாவது வலியாயிருக்கும். உடல் எடை பிரச்சனையோ? அப்போது தான் அதன் மேல் அமர்ந்திருக்கும் பாகனைக் கண்டேன். அவன் மேல் புரியாத ஒரு கோபம் வந்தது. கால் வலியில் அவதிப்படும் யானை என்று கூட பார்க்காமல் அதன் மீதே ஏறி அமர்ந்திருக்கிறானே? அதிலும் தெனாவட்டாக அதன் கழுத்தைச் சுற்றி இருகியிருக்கும் கயிற்றில் இவன் கால்களை நுழைத்துக் கொண்டு, அங்குசத்தை செங்குத்தாக அதன் பின்னந்தலையில் வைத்துக்கொண்டு இருந்தான். 

நான் அவனையே முறைத்துக்கொண்டிருப்பதை கவனித்துவிட்டான். என் பார்வையை வேறு பக்கம் திருப்புவது போல் பாசாங்கினேன். சில நொடிகளில் மெதுவாக மீண்டும் யானையைப் பார்க்க திரும்பினேன். அவன் என்னையே இன்னும் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்தவன் திடீர் என்று யானையில் இருந்து இறங்க ஆரம்பித்தான். 'யான நின்னா யாருனாலும் பாத்துக்கிட்டு தான் இருப்பாங்க. அப்போ மேல இருக்குற உங்க மேலயும் பார்வ படத்தான் செய்யும்' அவன் என்னை எதாவது கேட்டால் இதையே பதிலாக சொல்ல முடிவெடுத்தேன். இறங்கியவன் என் அருகில் வராமல் யானைக்கு அருகிலேயே நின்று கொண்டான். நல்ல வேளை என்று நினைத்துக்கொண்டேன். அவன் இறங்கியது சிறப்பு விருந்தினர்கள் வருவதைப் பார்த்து என்பது உள்ளே நுழைந்த இரண்டு பி.எம்.டபிள்யூ கார்களைப் பார்க்கும் போதே தெரிந்தது. அந்தப் பாகன் மிகவும் பவ்வியமாக நின்றான்.

சிறுவர்கள் அந்த யானையைத் தொடுவதும், அது அசையும் போது விலகி பயந்து ஓடுவதுமாக இருந்தனர். காரில் இருந்து இறங்கிய அந்தக் குடும்பத்தின் மூத்தவர் யானையை நெருங்கினார். பாகன் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை விரட்டினான். யானையில் தும்பிக்கையில் பூஜை செய்யப்பட்ட மாலை கொடுக்கப்பட்டது. பெரியவர் யானைக்கு அருகில் வந்து வணங்கி நின்றார். பாகன் யானையின் காலை லேசாகத் தட்டினான். அது உடனே அந்த மாலையைப் பெரியவரின் கழுத்தில் போட்டது. பெரியவர் யானையை ஒரு முறை கும்பிட்டு விட்டு சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களும் வரிசையாக யானையைக் கும்பிட்டனர். அந்தப் பெரியவரின் குடும்பக்குழந்தைகள் யானையைக் கண்டு துள்ளிக்கொண்டிருந்தனர். பாகனிடம் வந்து, "இது கடிக்குமா?" என்றது ஒரு இரண்டடி பட்டுப்பாவாடை. "அதுக்கு பல்லே இல்ல. கோவம் வந்தா மிதிச்சுரும்" என்றான் அவளை விடக் கொஞ்சம் பெரியவன். "இது நல்ல யான, ஒன்னும் பண்ணாது" என்றான் பாகன். 'யே அங்க என்ன செய்றிங்க? இங்க வாங்க" தாயாரின் குரல் கேட்டு அவரிடம் ஓடின குழந்தைகள். 

பெரியவர் வீட்டினர் வந்து பார்த்த யானை ஆதலால், இப்போது ஒவ்வொருவராக வந்து அந்த யானையை கும்பிட்டனர். பாகனால் முதலில் பத்தி விடப்பட்ட குழந்தைகள் மீண்டும் யானையை தொட்டு விளையாடினர். ஒவ்வொருவரும் யானையைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டனர். குழந்தைகளைத் தவிர யாரும் அந்த யானையை யானையாகப் பார்க்கவில்லை. பாகன் முகத்தைப்பார்க்கும் போது அவன் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. யானை தன் வாலையும் தும்பிக்கையையும் உடம்பில் அடித்துக்கொண்டே இருந்தது. இடமும் வலமும் அதன் பெரிய உடல் குலுங்கிகொண்டிருந்தது. அதன் உடம்பில் கட்டியிருந்த மணிகள் குலுங்குவதைக்கேட்கும் போது ஒரு சந்தோசமும் இனிமையும் வந்தது.

எல்லோரும் கோயிலுக்குள் சென்றுவிட்டனர். பாகனும் தன் அங்குசத்தை யானையின் பார்வையில் படுமாறு வைத்து எங்கோ சென்றுவிட்டான். யானை இப்போது வரை தன் பின்னங்காலை ஊன்றவே இல்லை. அதன் வாலையும் பின் பகுதியையும் பார்க்கும் போது, ஒரு பெருச்சாலியை லென்ஸ் கொண்டு பார்ப்பது போல் இருந்தது. யானை தன் வலதுபுற முன்னக்காலின் நகத்தை ஒட்டியிருக்கும் தோலை தும்பிக்கையின் துணையுடன் இழுத்தது. ஒரு இழுப்புக்கும் இன்னொரு இழுப்புக்கும் சிறு இடைவெளி. அப்போது தான் கவனித்தேன். அதன் முன்னங்காலின் நகத்தில் காயம் பட்டு இன்னும் ஆராமல் இருந்தது. அந்தத் தோலை தான் யானை பிய்த்துக்கொண்டிருந்தது. இப்போது பாகன் வந்தான். யானை காலை நோண்டுவதைக் கண்டு, அவனும் அதற்கு உதவினான்.

அவன் மெதுவாக அந்தத் தோலை யானையின் உடம்பில் இருந்து பிய்த்துவிட்டான். யானை மண்டையை வேகமாக ஆட்டிக்காட்டியது. மீண்டும் பழையபடி தன் உடம்பை தும்பிக்கையாலும் வாலாலும் தட்டிக்கொண்டே இருந்தது. பூஜை முடிந்து எல்லோரும் வந்தனர். பெரியவர் குடும்பம் சென்றது. அவரை தொடர்ந்து, ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர். இப்போது கோயிலில் நான், யானை, பாகன் உட்பட ஒரு சிலர் மட்டுமே.

பாகனும் கிளம்பத்தயாராகத்தான் இருந்தான். ஆனால் கிளம்பவில்லை. மெதுவாக அவனிடம் பேச்சுக்கொடுத்தேன். "அதான் பூஜ முடிஞ்சுபோச்சில்ல? இன்னும் கெளம்பாம இருக்கிங்க?"

"எங்க ஓனர் வந்து வாடகை வாங்குனதும் தான் போவோம்" என்றான் யானையைத் தடவிக்கொடுத்துக்கொண்டே.

"அப்போ இது உங்க யான இல்லயா?"

"எனக்கு சம்பாரிக்கவே என்னால முடியல. இதுல யானய வேற சொந்தமா வச்சுருக்கணுமாக்கும்?" ஒரு வித எரிச்சலுடன் சொன்னான். இப்போது யானையைத் தடவுவதையும் நிறுத்திக் கொண்டான்.

ஓனரை எதிர் பார்த்து கோயில் வாசலைப்பார்த்துக் கொண்டிருந்தான். கைலி கட்டிக்கொண்டு நீண்ட தாடியுடன் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தார். பார்த்தவுடன் தெரிந்து விடும் அவர் ஒரு இசுலாமியர் என்று. நேராக எங்களை நோக்கி வந்தார். "என்னடா முடிஞ்சதா?" என்றார் பாகனிடம்.

"அப்பதையே முடிஞ்சுரிச்சி. உங்களுக்கு தான் வெயிட்டிங்"

"சரி இரு. நான் கூலி வாங்கிட்டு வந்துறேன்", என்னைப்பார்த்து "ரமேஷ் உள்ள தான இருக்காரு?"

"ஆமா". அவர் சென்றவுடன் பாகனிடம் "இதுக்குலாம் எவ்வளாவுங்க கூலி?"

"தெரியாது. எவ்வளவு வந்தாலும் எனக்கும் யானைக்கும் அது சேராது. இவங்க குடுக்குறது பாயிக்கு பத்தாது. பாயி குடுக்குறது எனக்கும் யானைக்கும் காணாது"

"ஓ.. உங்களுக்கு பாய் சரியான காசு குடுக்க மாட்டாரா?"

"அவரும் என்னங்க செய்வாரு? பாவம்"

பாய் வந்தார். அவர் முகத்தில் ஒரு வித கடுகடுப்பு தெரிந்தது. "காலைல எத்தன் மணிக்கு வந்த?"

 "6மணிக்கு"

"பேசுனதுல பாதி காசு கூட தரல. 'அடுத்த திருவிழால பாத்துக்கலாம்'னு சொல்றாய்ங்க. இந்த நெலமேல போனா அடுத்த திருவிழாவுக்கு நம்ம 3பேருமே இருக்க மாட்டோம்"


பாகன் ஒன்றும் சொல்லாமல் யானையையும் முதலாளியையும் பார்த்தான். "இந்தா 40ரூவா. யானைக்கு இந்தா 200 ரூவா"

"முதலாளி நேத்துல இருந்து ரெண்டு பேருமே சரியா சாப்பிடல" தயங்கினான்.

"கோயிலு சாமி இருக்குற எடம், புண்ணியம், அது இதுன்னு நீ தான நேத்து சொன்ன? இப்ப அனுபவி." முதலாளி அவனை வையவில்லை, ஆற்றாமையில் தான் பேசினார். "ஒன்னு பண்ணு நாளைல இருந்து திரும்பவும் இத தெருவுக்குள்ள கூட்டிட்டு போயி யாவாரம் பாரு. கைச்செலவுக்காச்சும் காசு மிஞ்சும்"

"அது நல்லா இருக்காதுன்னு தான மொதலாளி இங்க வந்தோம்?" பிச்சை எடுக்க முடியாது என்பதை நாசூக்காக சொன்னான்.

"நீயும் நானும் இந்த சனியனும் ஒழுங்கா தின்னு உசுரோட இருக்கணும்னா அதான் வழி. நீயே முடிவு பண்ணிக்கோ. ஒனக்கு விருப்பம் இல்லாட்டி, சொல்லிரு இத வித்துரலாம்" சொல்லிக்கொண்டே முதலாளி நடக்க ஆரம்பித்தார். பாகன் தொடர்ந்தான், அவன் பின் கடவுள் சாமி என்று சில நிமிடங்கள் முன்பு வரை கும்பிடப்பட்ட யானை என்னும் சனியன் தன் மணிச்சத்தத்தை ஒலிக்கவிட்டுக்கொண்டே நாளைய பிழைப்பை நோக்கி செல்கிறது.

சலூன் கடை - கவிதை

$
0
0
இருக்கும் தொல்லைகளில் பெரிய தொல்லை
ஞாயிற்றுக்கிழமையில் முடி வெட்ட செல்வது தான்..
விடுமுறை தினங்களில்
திரையரங்கிற்கு அடுத்த படியாக
கூட்டம் கூடி - காத்திருத்தலில்
நமக்கு எரிச்சலைத் தருவது
இந்த சலூன் கடைகள் தான்..

சிறு வயதில் இருந்து
'ஒரே அம்பட்டன் கிட்டத்தான்
மசிர குடுக்கணும்' என்பார் அப்பா..
அவருக்குத் தெரியாமல் சென்ற
திருமுருகன் சலூன் - எங்கள் ஊரின்
முதல் குளிரூட்டப்பட்ட ஆண்கள்
அழகு நிலையம்! - ஆம்
அது சலூன் இல்லை.

சுவரில் ஒட்டியிருந்த
கையில் மைக்கோடு
வெள்ளை ஆடை அணிந்த
கறுப்பு மைக்கெல் ஜாக்சனும்
காதிலிருந்து வாய்க்கு நீட்டப்பட்ட மைக்கோடு
கறுப்பு ஆடை அணிந்த
வெள்ளை மைக்கெல் ஜாக்சனும்
வேறு வேறு என்றே நினைப்பேன் அப்போது..

பெரும்பாலும் யார் என்றே தெரியாத
வேற்று மொழி நடிகர்களும்
நடிகைகளுமே சுவரில் - ஆனால் தெரிந்த
முகங்களை விட அழகாக..
அங்கு இருக்கும் இரண்டே தெரிந்த முகம்
சச்சினும் சலூன்காரனும்..
புசு புசுவென்று வெட்டாத (வெட்ட முடியாத)
முடியைக் கொண்ட சச்சினுக்கு
இந்த சுவரில் என்ன வேலை
என்றெல்லாம் யோசித்ததில்லை அப்போது..

தலையில் முடிவெட்டுபவர் தண்ணீரை
ஸ்ப்ரே பண்ணும் போது - மனதில்
ஒரு சின்ன சந்தோசம் அந்த
கொஞ்சமான குளிர்ந்த நீரின் கிளர்ச்சியில்..
'டேய் தண்ணி விடாதடா பிள்ளைக்கு
சளி பிடிச்சுரப்போகுது'
தடுத்துவிடுவார் அப்பா..
கோவம் வரும் அவர் மேல்
தண்ணீர் கிளர்ச்சியை நிப்பாட்டியதற்காக
மட்டும் இல்லை - முடிவெட்டுபவரை
'டேய்' என்று விளித்ததாலும்..

சைக்கிளில் வீடு வரும் போது
'ஏன்ப்பா அந்த அண்ணன
டேய் வாடா போடானு சொல்றிங்க?'
என்னிடம் கோபமாக 'என்னது அண்ணனா?'
பிடரியில் வலிக்குமாறு தட்டினார்.
'அவனலாம் அப்படித்தான் சொல்லணும்
என்ன புரிஞ்சதா?' என்பார்
அப்பாவிற்கு பயந்தா இல்லை
வயதில் மூத்தவரை மரியாதை
இல்லாமல் கூப்பிடுவதில்
இருக்கும் ஒரு குரூர சந்தோசமா
தெரியாது - நானும் அன்றில் இருந்து
'யோவ் ஒட்ட வெட்டிராத'
என்று ஒருமையில் அழைக்க ஆரம்பித்தேன்.

இன்று வரை அப்படித்தான்
இதோ இப்போது தாடியை
எடுக்கும் போது என்
மூக்கின் அருகில் இரண்டு
கன்னங்களிலும் விரல்களைப்
பதித்தவாறு அவனின்
உள்ளங்கை அதில் ஒருவித
அசிங்கமான பலரின்
புழுக்கம் கலந்த ஈர வாடை.
'யோவ் கைய எடுய்யா
ரொம்ப நாறுது' கையை தட்டிவிட்டேன்.

'தெரியாம தம்பி' என்றார்.
பக்கத்து இருக்கையில் ஒரு
கல்லூரி மாணவன் போன்றவன்.
அவனுக்கு முடி வெட்டும்
பள்ளி மாணவன் போன்றவன்.
"கைய தூக்குங்க அண்ணே
கம்மங்கூட்டில் முடி எடுக்கணும்" என்றான்.
'இருக்கட்டும் தம்பி
வீட்ல நானே எடுத்துக்கறேன்' என்று
சிரித்த முகத்தோடு கூறிச்சென்றான்.
அவமானத்தோடு நானும்
பொறாமையோடு
எனக்கு முடி வெட்டிய அண்ணனும்..

வண்டிச்சக்கரம் - சிறுகதை

$
0
0
"என்னது? டிராக்டர் ஓட்டிக்கிட்டிருந்த பயலுக்கு வெற்றிவிலாஸ்ல லாரி ஓட்டுற வேலையா?" வாயைப்பிளந்தார் மாயாண்டி, நம்ம குருவம்மா புருஷன் செல்லப்பாண்டியின் மாமனார். ஆமா குருவம்மாவோட அப்பான்னும் சொல்லலாம்.

"ஆமாப்பா. இது வயக்காடு வேல மாதிரி இல்லயாம். தெனமும் வேல இருக்குமாம். மாசம் 3000ரூவா சம்பளம், அது போக தெனப்படி 100ரூவா வரைக்கும் வருமாம்" ஏற்கனவே திறந்திருந்த தன் அப்பனின் வாயை இன்னும் கொஞ்சம் பிளக்கவைத்தாள் குருவம்மா.
"எப்படியோ உருப்பட்டா சரி தான்" வாயை மூடி இயல்புக்கு வந்துவிட்டார் மாயாண்டி. "உன்ன எப்ப கூட்டிட்டு போறானாம்?"

"எப்பா கொஞ்சம் மரியாதயா பேசுங்க, அவர் உங்க மருமவன்". மகளைநேராகப் பார்த்து முறைத்தார் மாயாண்டி.. பிறகு என்ன, நேற்று வரை அவருக்குக் கூட தெரியாத புதுப்புது கெட்ட வார்த்தையில் புருசனை வைதுவிட்டு இன்னைக்கு அப்பனிடம் மரியாதை பற்றி பாடம் எடுத்தால் அவனுக்கு பற்றிக்கொண்டு வராதா?

'நேத்து வரைக்கும் அந்த நாபகம் எங்கம்மா போச்சி?' மனதுக்குள்ளே கேட்டுக்கொண்டார் நக்கலான கோபமுடன். ஆனாலும் அவருக்கு மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. கிட்டத்தட்ட 2மாதம் ஆகிறது அவள் கணவனுடன் சண்டை போட்டு கைக்குழந்தையுடன் வந்து. ஒரு பெண் (கர்ப்பம்) உண்டானதில் இருந்து குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகும் வரை மட்டும் ஏன் இவ்வளாவு சண்டைகள்? தினமும் ஒப்பாரி, வாரம் இரண்டு முறை செல்லப்பாண்டி வந்து சண்டை என்று அவர்கள் தெருவிற்கே சில காலம் பொழுதுபோக்காய் இருந்தவள் இன்று முதல் ஒழுங்காக வாழப்போகிறாள் புருசனுடன் என்கிற திருப்தி அவருக்கு லேசான சந்தோசத்தை கொடுத்தது.

சந்தோசம் என்பதை விட நம்பிக்கை என்று சொல்லலாம். பின்ன, வெற்றிவிலாஸில் வேலை கிடைப்பது கவர்மென்ட்டில் வேலை கிடைப்பது போன்றது. இனிமேலாவது புருசனும் பொண்டாட்டியும் நன்றாக வாழ்வார்கள் என அவர் நம்புவதற்கு வெற்றிவிலாஸ் தான் வெற்றிகரமான காரணம். மாலையில் அவன் வந்தான். வழக்கமாக கையில் பீடியோடும், உடம்பில் சாராய நெடியோடும் இடுப்பில் இருந்து அவிழ்ந்து விழும் நிலையில் போனாபோகட்டும் என்பது போல இருக்கும் ஒரு கைலியோடும் வரும் செல்லப்பாண்டி இப்போது வெளுத்த வேட்டி கட்டி கலையாக வந்தான். கடைசியாக அவன் தன் பெண்ணுக்கு தாலி கட்டிய தினத்தில் தான் வேட்டி கட்டியதாக ஞாபகம் மாயாண்டிக்கு.

"மாமா....... எப்படி இருக்கீய?" சிரித்துகொண்டே வந்தான்.

'போன வாரம் வந்து தான மானத்த வாங்குன, எப்படி நல்லா இருப்பேன்?'.. "வாங்க மாப்ள நல்லா இருக்கேன்" இவருக்கும் பதிலுக்கு எப்படித்தான் சிரிப்பு வந்ததோ! குருவம்மா அதற்குள் தன் பிள்ளையை தூக்கிகொண்டு அந்த சாக்குப்பையுடன் செல்லப்பாண்டி அருகில் வந்து நின்றுகொண்டாள் முகத்தையே மறைக்கும் சிரிப்புடன். பல நாளைக்கு அப்பறம் இப்போது தான் அங்கு மகிழ்ச்சி. டீ குடித்து விட்டு "போய்ட்டு வாரேன் மாமா, போய்ட்டு வாரேன் அத்த" மாறாத சிரிப்புடன் விடைபெற்றான் செல்லப்பாண்டி.

"ஏங்க இந்தத் தீவாளிக்கு பட்டுச்சேல கண்டிப்பா வாங்கித்தருவீகல்ல?" சைக்கிளின் பின்புறம் இருந்து மெதுவாக எட்டிப்பார்த்துக்கேட்டாள்.

"மொத கடன அடைச்சுக்கிறேன்டீ பொறவு பாக்கலாம். புள்ளய கீழ விழாம பிடிச்சிக்கோ"

உம்மென்று ஆகிவிட்டாள் குருவம்மா. இந்த தீவாளிக்கும் பட்டுச்சேல இல்லேனா எப்படி? அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். வீட்டை நன்றாக நோட்டம் விட்டாள். "இப்படியா வீட்ட குப்ப மாதிரி வச்சுருப்பிங்க?"

"யாத்தா திரும்ப ஆரம்பிச்சுறாத. நீ கம்முனு அங்கிட்டு உக்காந்திரு, நானே தூத்துவிட்டுட்டு உன்ன கூப்பிடுறேன்" இவனுக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டதா? இவ்வளவு பொறுப்பாக பேசுகிறானே என்ற ஆச்சரியத்தோடு "வேணா வேணா நானே தூத்துவிடுறேன், பிள்ளய பிடிங்க" அவன் கையில் இருந்த விளக்குமாறை வாங்கிக்கொண்டாள். அவள் தூத்துக்கொண்டிருக்கும் போது சொன்னான், "உனக்கு இந்த தீவாளிக்கு கண்டிப்பா பட்டுச்சேல தான்". அவள் ஒன்றும் சொல்லவில்லை. கவனிக்கவில்லையா இல்லை கவனிக்காதது போல் நடிக்கிறாளா? 

"ஏய் உன்ன தான் சொல்றேன். கண்டிப்பா பட்டுச்சேல தான், சரியா?"

"எதுக்கு உங்களுக்கு செரமம்? நீங்க மொத கடன அடைங்க" நக்கலாக எங்கோ பார்த்துக்கொண்டு செல்லக் கோபத்துடன் சொன்னாள்.

"கடனலாம் ரெண்டே மாசத்துல அடச்சுரலாம், சரியா? ஆனா பட்டுசேல வாங்கணும்னா ஒரு கண்டிசன்"

"என்ன கண்டிசன்? எங்கப்பா கிட்ட குடுக்க இனிமே பத்து வெரல் தான் இருக்கு"

"யே ச்சீ அதெல்லாம் இல்ல. இந்தச்சேல உனக்கு நல்லால்ல. பட்டுச்சேல வாங்கித்தாரேன் இத இப்போ கழட்டலாமா?" குழந்தையை கீழே வைத்துவிட்டு அழுந்தான்.

"மொத குளிச்சிட்டு வேலைக்கு போற வழியப்பாருங்க. சாந்தரம் 5மணிக்கு அங்க இருக்கணும். நாபகம் இருக்குல?" நெருங்கி வந்தவனை லேசாக தள்ளிவிட்டு அடுப்பு வேலையை கவனிக்க சென்றாள்.

"சரி போயிட்டு வந்து கவனிச்சுக்கிறேன்" வேறு வழியில்லாமல் சிரித்துகொண்டு கிளம்ப ஆயத்தமானான்.

"என்னையா ஒழுங்கா ஆக்ஸிடண்ட் பண்ணாம ஓட்டுவியா? இல்ல நீயும் தாலி அறுப்பியா?" வெள்ளை வேட்டி சட்டையுடன் இடது கையில் பிரேஸ்லட்டும் வலது கையில் தங்க நிற கடிகாரத்துடனும் பணத்தை எண்ணி பாங்க சலானில் நிறப்பிக்கொண்டே பேசினார் முதலாளி.

"அதெல்லாம் நல்லா ஓட்டுவேன் அண்ணாச்சி"

"எல்லா பயலும் ஆரம்பத்துல இப்படித்தான் சொல்றான், கடைசில எங்கயாவது முட்டிக்கிட்டு வந்து நம்ம தாலிய அறுப்பாய்ங்க" அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்க செல்லப்பாண்டிக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.

 "என்னத்த ஓட்டுவியோ. இந்தா பிடி சாவிய" சாவியைத் தூக்கி மேஜை மீது போட்டார். "அண்ணே செல்லப்பாண்டியண்ணே கரும்பு லோடு ஏத்தணும் கொஞ்சம் டிராக்ட்டர் எடுத்துட்டு வாங்கண்ணே" - ஏனோ பழைய ஞாபகம் வருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. "வெளிய கணக்குப்பிள்ள கிட்ட கேட்டுக்கோ எங்க போணும்னு"

சாவியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியில் வந்தான். எவ்வளவு பெரிய மில்? பேசாம இந்த ஆளுக்கு மருமகன் ஆகியிருக்கலாம் என்று ஒரு நொடி யோசித்தான். "எலேய் அங்க என்ன பார்வ? இங்கவா" கணக்குப்பிள்ளை குரல் வந்த திசை நோக்கி நடந்தான். "அப்படி ஆகிருந்துச்சினா இந்த கணக்குப்பிள்ளலாம் என்ன வைவானா? ஏன், அந்த மொதலாளியே என் கிட்ட பம்மிக்கிட்டு தான பேசுவான்?" கணக்குப்பிள்ளை அருகில் வந்ததும் கற்பனை கடிவாளம் போட்டு நின்றது. இன்னைக்கு நைட்டு நீ நம்ம செவாசி ராலி செட்ல இருந்து.." செல்லப்பாண்டி சிரித்துவிட்டான்.

"ஏம்லே சிரிக்குற?"

"இல்லண்ணாச்சி, அது ராலி இல்ல லாரி"

"கொழுப்புடா ஒனக்கு. சரி அங்க இருந்து லோடு ஏத்திட்டு அருப்புக்கோட்ட போகணும். நைட்டு 10மணிக்கு வந்துரு, சரியா?"

"சேரிண்ணாச்சி" விடை பெற்றான். "எலேய் சாவிய  குடுத்துட்டு போ"

"அய்யயே ஒங்க லாரிய ஒன்னும் பண்ணிட மாட்டேன். இந்தாங்க ஒங்க சாவி" கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

இரவு வண்டியை எடுத்துக்கிளம்பும் போது  அவன் கையில் ஒரு செல்போன் கொடுக்கப்பட்டது. "இந்தா போன். எதும் பிரச்சனனா கூப்டு"

"சரிண்ணே" சாமி கும்பிட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினான். 10 மணி என்பது இவர்கள் பாசையில் இரவு 1மணி போல. மெதுவாக சென்றான். போன் மணி அடித்தது. "டேய் பாண்டி, காலைல 6மணிக்கு தான் குடவுன் தெறப்பாய்ங்க. நீ வழில வண்டிய போட்டுட்டு தூங்கிட்டு போ"

"த்தாளி மொதயே சொல்லித் தொலஞ்சுருந்தாய்ங்கன்னா வீட்ல இருந்து மெதுவா கெளம்பிருக்கலாம்" முன்முனுத்துக்கொண்டே வண்டியை ஆள் அரவம் இல்லாத சாலையின் மரத்தடியில் ஓரம் கட்டினான். அலாரம் வைத்தது போல் 4மணிக்கு எழுந்து வண்டியைக் கிளப்பினான்.


விருதுநகரைத்தாண்டி வில்லிபத்திரியில் போய்க்கொண்டு இருந்தான். 'டம்' என்று ஒரு சத்தம். வண்டி வலது புறம் எதிலோ ஏறியது போல் லேசாக குழுங்கியது. செல்லப்பாண்டிக்கு திக்கென்று ஆகிவிட்டது. கண்ணாடியில் பார்த்தான் ஒரு வண்டி நசுங்கிக்கிடந்தது. ஆள் தெரியவில்லை. உடம்பெல்லாம் வியர்த்து கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. தன் கவனக்குறைவா வந்தவனின் அலட்சியமா தெரியவில்லை. முதல் நாளே இப்படியா ஆண்டவா என்று விதியை நொந்து கொண்டு வண்டியை நிறுத்தாமல் வேகமாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தை நோக்கிப்போனான்.

அந்த நிலையில் அவனுக்கு வேறு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. வண்டியில் முன் பக்கம் இருந்து மிக மெலிசாக 'டக் டக்' என்று ஏதோ தட்டப்படும் சத்தம் கேட்டது. வழியில் வரும் ஒன்றிரண்டு பேரும் இவன் வண்டியைப்பார்த்து கையைக் காட்டி நிறுத்தச்சொன்னார்கள். மிகுந்த பதற்றத்துடன் வேகமாக மல்லங்கிணறு  காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தினான். 

வெளியில் நின்ற காவலர் "யோவ் யோவ் மெதுவா நிறுத்துயா" வண்டியின் கீழே பார்த்துவிட்டு அவனும் பதறினான். வண்டியை காவல் நிலையம் ஒட்டிய அந்த இறங்குமுகமான சாலையில் நிறுத்தினான். போலிஸ்காரன் வண்டியின் முன்பக்கம் எதையோ நோக்கி ஓடினான். இவன் இறங்க ஆயத்தமான போது சாலையில் சருகலில் வண்டி இறங்கியது. ஏதோ ஒன்றின் மீது நசுக்கி ஏறுவது போல் தோன்றியது செல்லப்பாண்டிக்கு. போலிஸ்காரன் தலையில் அடித்துக்கொண்டான். "டேய் எறங்குடா கீழ" கழுத்தைப்பிடித்து கீழே இறக்கப்பட்டான்.

அப்போது தான் அதை செல்லப்பாண்டி பார்த்தான். இத்தனை நேரம் இடி பட்டவன் வண்டியின் முன்புறம் பிடித்துக்கொண்டு தட்டிக்கொண்டே வந்திருக்கிறான். இவன் அதை உணராமல் இப்போது அவன் மீதே ஏற்றி விட்டான். நல்ல லேசான ஊதா நிற சட்டை அணிந்து அதை கறுப்பு நிற பாண்டிற்குள் நேர்த்தியாக விட்டிருக்கிறான். காலில் ஷூ இடுப்பில் பெல்ட்டில் சொருகியிருக்கும் செல்போன் கூடு. தலை மட்டும் தான் இப்படி எதுவும் சொல்ல முடியாத படி ரோட்டோடு ஒட்டியிருந்தது. செல்லப்பாண்டிக்கு வாந்தியும் அழுகையும் ஒரு சேர வந்துவிட்டது. வாயை பொத்திக்கொண்டு காவல் நிலையத்திற்குள் சென்றுவிட்டான்.

காவல் நிலையம் முன் ஒரு காவலரின் கண் எதிரிலே அது ஒரு சுத்தமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விபத்தாக மட்டுமே நடந்தது. சாலையிலும் வண்டி இவன் லாரியின் வலதுபுறம் வந்தே மோதியதால் இவன் மீது குற்றம் இல்லை என்பதை எப்படியோ நிரூபித்து கொண்டுவந்துவிட்டார் இவன் முதலாளி. வேலையை விட்டு தூக்குவார் என்று பார்த்தால் அவரே ஜாமினும் எடுத்து விடுதலை பெறவும் உதவி செய்தார். "டிரைவர் வேலைக்கு ஆளே கெடைக்க மாட்டெங்குதுல, அதான்" என்று காதைக் கடித்தார் கணக்குப்பிள்ளை.

"ஏன்டா கைல தான் போன் இருக்குல, ஏத்துனவொடனே என்ன கூப்ட வேண்டியதுதான?"

"ஒங்க நம்பர் தெரியாது அண்ணாச்சி, அதான். பதட்டத்துல வேற இருந்தேனா அதான் கையும் ஓடல காலும் ஓடல"

"சரி என் நம்பர வாங்கிக்கோ.  இதெல்லாம் தொழில்ல சகஜம். இதுக்கு பயந்துட்டு வேலைக்கு வராம போயிறாத. சரியா?"

உண்மையில் வேலைக்கு வரவில்லை என்று சொல்லத்தான் அங்கு வந்தான் செல்லப்பாண்டி. முதலாளியே சொல்லியவுடன் வேலையை விட்டு செல்லும் முடிவை தூக்கிப்போட்டான். "இனிமே இது மாரி எதும் ஆச்சின்னா என்ன கூப்டு, என்ன?"

"சரிண்ணாச்சி"

வீட்டில் வேலை போய்விடும் பயத்தில் இருந்த குருவம்மாளுக்கு இது இனிமையான செய்தியாக இருந்தது. "இனிமேலாவது பாத்தி வண்டி ஓட்டுங்க. உங்களுக்கு எதாவது ஆயிருந்திருச்சினா?"

"அதெல்லாம் நாம் பாத்துக்கிறேன்"

அன்றிலிருந்து பல விபத்துகளை செய்துவிட்டான். எல்லாமே ஸ்பாட் மரணங்கள். குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொலைகள் அவனுக்கு பழகிப்போயின. அவன் செய்த முதல் விபத்தைத் தவிர வேறு எதுவும் குருவம்மாளுக்கு தெரியாது. முதல் விபத்தை மட்டும் முதலாளியிடம் சொல்லாமல் விட்டவன் அதற்குப் பின் அவருக்குத் தெரியாமல் ஒருவன் கதையையும் முடித்ததில்லை.

"மொதலாளி ஒருத்தன் கால்ல ஏத்திட்டேன். இன்னும் உசுரோட தான் இருக்கான். அப்டியே வழக்கம் போல வேமா வந்துரவா?"

"எலேய் அடிபட்டு  செத்துப்போனா மட்டும் தான் வேமா வரணும். இவன் சாகலேல?"

"என்னைய கைய காட்டி காப்பாத்த கூப்டுறான் மொதலாளி"

"பொழச்சான்னா நம்ம தாலி தான் அறுபடும். அவன ஏத்திட்டு வேமா வந்துரு. செத்துரணும்டா அவன், பாத்துக்கோ" இவன் சரி என்று சொல்வதற்குள் முதலாளி போனை வைத்துவிட்டார்.

வண்டியில் ஏறினான். சாவியைப்போட்டு ரிவர்ஸ் கியருக்கு மாற்றினான். தன் ரப்பர் செருப்பு அணிந்திருக்கும் கால்களால் அந்த மஞ்சள் நிற எமனை பின்னோக்கி செலுத்தினான். கண்ணாடியில் அடிபட்டு இருப்பவன் 'வேண்டாம் வேண்டாம்' என்று செய்கை செய்வது தெரிந்தது. கண்ணாடியில் தூரமாக தெரிந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் சாவை அருகில் பார்த்துக்கொண்டிருந்தான். வண்டி பூப்போல மெதுவாக அவன் உடலில் ஏறி இறங்கியது இரண்டு முறை.

முதன்முதலாக விபத்தையே கொலை என்று பயந்த செல்லப்பாண்டியின் மனம் இப்போது ஒரு கொலையை விபத்தாக மாற்றிக்கொள்ளும் பக்குவத்தை பெற்றுக்கொண்டது. ஒரு வருடம் ஆகப்போகிறது இவன் லாரி ஓட்ட ஆரம்பித்து. அதற்குள் 6விபத்துகள், உண்மையில் 2விபத்துகள் 4 கொலைகள்.

ஆனால் குருவம்மாளுக்கு எதுவும் தெரியாது. தன் புருசன் மிகவும் ஒழுங்காக வண்டி ஓட்டுவதாக நினைத்துக்கொண்டிருந்தாள். கடனை அடைத்துவிட்டான். அவளுக்கு ஒரு கம்மலும் புது மூக்குத்தியும் வாங்கிக்கொடுத்துவிட்டான். இன்னும் பட்டுச்சேலை மாட்டும் தான் பாக்கி. இன்னும் இரண்டு மாதத்தில் தீபாவளி. ஆனால் எப்படியும் வாங்கிக்கொடுத்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை இருவருக்கும்.

தீபாவளி போனஸ் 6000ரூபாய் வாங்கிக்கொண்டான். முதலாளி இரவில் மதுரைக்கு வரச்சொல்லி கொடுத்தார். இந்த இரண்டு மாதங்களில் ஒரு விபத்து கூட நடக்கவில்லை. செல்லப்பாண்டிக்கு ஒரு விதமான சலிப்பு வந்துவிட்டது, கொலையே செய்யாமல். ஆனால் மனதில் ஒரு நிறைவு இருந்தது சட்டை நிறைந்ததால். பட்டுச்சேலை எடுக்க வீட்டிற்கு விரைந்தான் வண்டியில்.

திருமங்கலம் தாண்டி நான்குவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தான். இவ லாரியை பைக்காரன் சைட் எடுத்து முந்தினான். தலையை சாய்த்துக்கொண்டு செல்போனில் பேசியபடி வண்டியில் போனான் அவன். லாரிக்கு முன்புறம் இன்னொரு லாரி செல்வதை அவன் கனிக்காமல் சைட் எடுத்தான். திடீரென்று அதை உணர்ந்தவன் பதட்டத்தில் தள்ளாடி செல்லப்பாண்டியின் சக்கரத்தின் பல நாள் பசிக்கு இரையானான். வண்டியை நிறுத்திய செல்லப்பாண்டி மெதுவாக இறங்கி வந்தான். தலை நசுங்கியிருந்தவன் அழகாக இருந்திருக்க வேண்டும் என்பதை அவன் உடலின் மற்ற பாகங்கள் கூறின. மெதுவாக கொஞ்சம் தள்ளி விழுந்திருந்த செல்போனை எடுத்து காதில் வைத்தான்..

"என்னங்க என்னங்க, என்ன ஆச்சி" எதிர் முனையில் ஒரு பெண்குரல். இவன் மனைவியாக இருக்கலாம்.

"ஏய் அறிவில்ல உனக்கு? வீட்டுக்கு வரதுக்குள்ள என்னடீ அவசரம்? வண்டில போறவன போன் போட்டு கொன்னுட்ட. என் லாரில விழுந்து செத்துப்போயிட்டான். வந்து சொரண்டி எடுத்துட்டுப்போங்க. சந்தோசமா தீவாளி கொண்டாடு"

"...த்தா வந்து வாய்க்குறாய்ங்க பாரு நம்ம வண்டில விழுந்து சாகணும்னே" போனை தூக்கி எறிந்து சென்றுவிட்டான்.

மறுநாள் குருவம்மாள் மற்றும் விஷாலுடன் - ஆமா அவன் மகன் பேரு தான் - சைக்கிளில் தீபாவளிக்கு துணிமணி எடுக்க சென்றுகொண்டிருந்தான். புது ஜவுளி, பலகாரம் எல்லாம் வாங்கிக்கொண்டு சாயந்திர வேளையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். விஷால் நிறுத்தமாட்டாமல் அழுதுகொண்டிருந்தான். சைக்கிளில் சரியாக உட்காராமல் துருத்ருத்துக்கொண்டிருந்தான். குருவம்மாவால் அவனை அடக்க முடியவில்லை. இவனுக்கும் சைக்கிள் லம்பியது. அவன் ஊருக்கு போகும் பாதைத்திருப்பத்தில் மூவரும் விழுந்தனர். இவர்களுக்குப்பின் வந்த கார் டக்கென்று வெலகியது. ஆனால் காரைத்துரத்தி வந்த லாரிக்கு  இதைக்கவனிக்க எல்லாம் நேரம் இல்லை.

என்ன நடந்தது என்று உணர்வதற்குள் எல்லாம் முடிந்தது. முனகல் சத்தம் கேட்ட செல்லப்பாண்டியால் கண் திறக்க முடியவில்லை. லேசாக சத்தம் காதில் விழுந்தது. "மொதலாளி மூனு பேரு யாரும் சாகல, ஆனா கை காலு நஞ்சுபோயிருக்கு. " இரு இடைவெளிக்குப் பின் "சரி முதலாளி"

செல்லப்பாண்டியின் காதில் மனைவியின் கதறலும் குழந்தையின் அழுகையையும் மீறி அந்தப் பின்னோக்கி வரும் லாரியின் சத்தம் நிறைந்து ஒலித்தது...

குத்துங்க எசமான் குத்துங்க..

$
0
0
'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது?' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24வயசுல கல்யாணம் பண்றதுனா சும்மாவா?) கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு மாட்டுத்தாவணியில் நின்று கொண்டிருக்கிறேன். 'இந்த வெயில் காலத்துல கல்யாணம் பண்ணி இவைங்கலாம் என்ன பண்ணப்போறாய்ங்க?' என்று அவனுக்கு இன்று இரவு வரப்போகும் தலையாய பிரச்சனையை தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே வந்தது நம்ம சிவகாசிக்குப் போற பஸ்ஸு. இன்னும் ரெண்டரை மணிநேரம் கொதிக்கும் தார் டின் பயணம். ஒரு அரை லிட்டர் 7அப் பாட்டிலுக்கு தண்டம் அழுதுவிட்டு பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடிக்கலாம்னு பாத்தா ரெண்டு ஜன்னல் பக்கமும் வெயில். சாயந்திரம் ஆரம்பிக்கும் வேளையில் இது தான் தொல்லை. சரி காற்றோட்டமாவது இருக்குமே என்று ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன்.

'இந்த வேக்காடுல எவனாவது பக்கத்துல உக்காந்தான்னா தாங்க முடியாது' - பையை எனக்கு அருகில் சீட்டில் போட்டு "ஆள் வாராங்க" என்று  யாரையும் உட்கார விடவில்லை. 'அதான் அத்தன சீட் காலியா இருக்குல? இங்கேயே வந்து மொக்கிறாய்ங்க'. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று கேட்ட அழகான பெண்ணுக்குக்கூட என் பதில் "ஆள் வாராங்க". என் இருக்கையைத் தவிர அனைத்தும் நிரம்பி விட்டன. கண்டக்டர் சீடியை போட்டுவிட்டு டிக்கெட் கொடுக்கவும் டிரைவர் காலரை தூக்கி விட்டு வண்டியை ஆன்செய்யவும் தான் மனதில் ஒரு சந்தோசம்.

"யெய்யா யெய்யா ஏறிக்கிறேன், நிறுத்துயா" கண்டக்டர் விசிலில் வண்டி நின்றது. ஒரு கிழவி ஏறியது வண்டியில். என் ஒரு சீட் மட்டுமே காலி. கண்டக்டரும் டிரைவரும் என் ஜென்ம விரோதி போல் தோன்றினார்கள். கிழவி ஏறியவுடன் முன்பக்கம் சென்றது. "எம்மா அந்த ரெண்டாவது சீட்ல எடம் இருக்கு பாரு" கண்டக்டர் சொன்னார். சொன்னார் என்ன சொன்னார், சொன்னான் படுபாவி. அது மெதுவாக என்னை நெருங்கியது. என் அருகில் வந்ததும் "என்னயா ஆம்பளயாள் கிட்ட ஒக்கார சொல்ற? நான் நின்னுகிட்டே வாரேன்" என்றது அந்த பேரழகுப் பாட்டி. நான் சீட் கொடுக்க மறுத்த அந்தப்பெண் கிக்கிபிக்கி என்று சிரித்தாள். என் வாழ்வின் உச்சகட்ட அவமானம். இப்போது யாரையாவது என் அருகில் அமர வைத்துக்கொண்டால் தான் ஓரளவாவது சமாளிக்கலாம். இல்லேனா அடுத்து ஒரு பொம்பள வந்தா என்ன எந்திரிக்க சொல்லிருவாய்ங்க.

மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் ஒரே ஒருவன் ஏறினான். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. 'அடச்சே அவன் தானா?' என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு "டேய் மாப்ள" என்று கை காட்டினேன். முதலில் என்னை சரியாக அடையாளம் தெரியாமல் பின் சில மைக்ரோ செகண்டுகளில் தெரிந்து கொண்டது அவன் முகத்தில் ஓடியது. சிரித்துக்கொண்டே "டேய் மச்சீ" என்றான். அது என்னவென்று தெரியவில்லை. ஊரில் ஒழுங்காக கைலி கட்டிக்கொண்டு இருக்கும் வரை மாப்ளன்னு பேசுறாய்ங்க.. மெட்ராஸ் போயி முக்கா டவுசர் போட்டதும் வாயில இவைங்களுக்கு "மச்சீசீசீ"னு வந்துருது. ப்ளடி பாஸ்கர்ஸ்.

அருகில் வந்து அமர்ந்து கொண்டான். பல நாள் கழித்து பார்த்துக்கொண்டதால் நாங்கள் ஒன்னும் பின்னிப்பிணைந்து கொள்ளவில்லை. எனக்கு என் சீட் தப்பித்தது என்ற சந்தோசம், அவனுக்கு சீட் கிடைத்த சந்தோசம் அவ்வளவு தான். மூனு வருசம் ஒன்னாப் படிச்சதெல்லாம் எவனுக்கு வேணும்? படிச்சப்போ பிட் கொடுத்து காப்பாத்தினானோ இல்லையோ இப்போது என் சீட்டை காப்பாத்திட்டான். "அப்பறம் மச்சி, லைஃப்லாம் எப்டி போகுது?"

"நல்லா போகுதுடா. ஒனக்கு?"

"சூப்பரா போகுது மச்சி"

மச்சினு சொல்லாதடா மானங்கெட்டவனே. "என்னடா மதுரப்பக்கம்? நீ மெட்ராஸ்ல தான வேல செய்ற மாப்ள?"

"இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன் மச்சி. நம்ம சோபாவோட கல்யாணம்டா! ஒனக்கு சொல்லல? நீ என்ன இங்க?"

"எனக்கும் ஒரு கல்யாணம்டா. ஸ்கூல் ஃபிரண்ட் கல்யாணம். சோபாக்கும் இன்னைக்குத் தான் கல்யாணமா? சொல்லவே இல்லையேடா? ஹிம் செம ஃபிகர். எவனுக்கோ குடுத்துவச்சுருக்கு பாரேன்"

"அதப்பத்தி ஒனக்கென்ன? நம்ம செட்ல என்னத்தவிர யாருக்குமே சொல்லலடா" பெருமையாக சொல்கிறான் என்று பார்த்தால் முகம் சோகமாக இருந்தது.

"ஏன் யாருக்கும் சொல்லல?" முகத்தை அவன் பக்கம் திருப்பி கேட்டேன். அவன் என்னை சட்டை செய்யாமல் வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தான்.

என் தொடையில் ஏதோ உறுத்தியது. ஆஹா வைப்ரட்டரில் வைத்திருந்த ஃபோன். இவ்வளவு களேபரத்தில் அதை விட்டுவிட்டேன். வேகமாக எடுத்துப்பார்த்தேன். என் செல்லம் தான். 11மிஸ்டு கால்ஸ். 7எஸ்எம்எஸ். முதல் இரண்டு எஸ்.எம்.எஸ் சாதாரணமாக அடுத்த இரண்டு கெஞ்சல் தொனியில் கடைசி மூன்று 'என் மூஞ்சிலேயே முழிக்காத' என்னும் ரேஞ்சில்.

பதறிப்போய் ஃபோன் செய்தேன். கட் செய்தாள். மீண்டும் மீண்டும் கால் செய்தேன். அட்டண்ட் செய்து உடனே கட் செய்தாள். 'என்ன நெஞ்சழுத்தம்டீ ஒனக்கு!' கால் செய்வதை நிறுத்திவிட்டு எஸ்.எம்.எஸ் டைப் செய்தேன்.

"பொட்டச்சி சாகவாசம் மட்டும் வச்சுக்கிடாதடா மச்சி" அழுத்தமாக கலக்கமாக அவனிடம் இருந்து வார்த்தைகள் வந்தன. எஸ்.எம்.எஸ். டைப் செய்றத பாத்துருப்பானோ என்று பதறி ஃபோனை என் மடியில் கவுத்தி வைத்து  அவனைப் பார்த்தேன். அவன் அப்போது பார்த்த திசையிலே இப்போதும் பார்த்துக்கொண்டிருந்தான். நல்ல வேள எஸ்.எம்.எஸ்அ பாக்கல.

"என்ன மாப்ள சொன்ன?"

"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டுறத மொத நிறுத்துறா"

"எனக்குக்கூட தான் நீ மச்சின்னு கூப்டுறது கேவலமா இருக்கு"

"மெட்ராஸ்லயே அப்டித்தான் கூப்டுறாய்ங்க தெரியும்ல"

"யெப்பா ராசா இது மதுர. சரி மேட்டர சொல்லு. எதுக்கு 'பொட்டச்சி சவகாசம் வச்சுக்காத'ன்னு சொன்ன?"

"நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்"

"நான் என்னடா கேட்டேன்? ஓ ஒனக்கு மட்டும் சோபா பத்திரிக்கை வச்சதப் பத்தி கேட்டதா? அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?" ஏதோ காதல் தோல்வி கசமுசா என்று தெரிந்தது. ஆனாலும் எந்த விதமாகத் தோல்வி என்று தெரிந்துகொள்வதில் ஒரு ஆனந்தம் தானே? அதுவும் இவன மாதிரி ஒரு அப்பிராணி சிக்குனா எந்தப் பொண்ணு தான் விடுவா? ஆனாலும் மனதில் சோபா மேல் இருந்த பழைய கிரேஸ் கொஞ்சம் குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். போயும் போயும் இவன! அய்யோ ஆண்டவா. 


இவன் கறுப்பு. அவா தமன்னாவ விட செகப்பு. இவன் ஒடிஞ்சு விழுற விளக்கமாத்து குச்சி மாதிரி ஒல்லி. அவா தள தளன்னு பால்கோவா மாதிரி. இவன் குட்டை. அவா ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய சராசரி உயரம். அந்தக் கூந்தல்? அடர்த்தியாக அவள் இடுப்புவரை தொங்கிக்கொண்டிருக்கும். வெள்ளிகிழமையானால் நாங்கள் எல்லாம் செத்துவிடுவோம், அவளின் ஈரமான பின்னாத நீண்ட கூந்தலைப் பார்த்து. ஹோம்லி கேர்ள்னு சொல்லுவாய்ங்களே அது அவளுக்கு தான் பொருந்தும். அவ்வளவு அடக்கஒடுக்கமான அமைதியான பெண். ஒரு பெண் எப்படி இருந்தால் ஆணுக்குப் பிடிக்குமோ அதை விட அதிகமாகவே அவளிடம் எல்லாம் இருந்தன. ஆனால் இவன்? சரி வேண்டாம். சோகமாக இருப்பவனப் பத்தி தப்பா நெனைக்கக்கூடாது. அவனே ஆரம்பித்தான்.


"நாங்க காலேஜ் டேஸ்க்கு அப்புறம் சென்னைல ஒரு  இன்டர்வியூ நடக்கும் போது மீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பழக்கம்டா. மொத ஒரு வருசம் ஃபிரண்ட்ஸா தான் இருந்தோம். அப்பறம் தான் நாங்க லவ் பண்றோம்னு எங்களுக்கே தெரிஞ்சது." ஏதோ கேன்சர் இருப்பதை டாக்டர் கண்டுபிடித்தது போன்ற சோகத்தில் சொன்னான்.

"சரி இப்போ எதுக்குடா இன்னொருத்தன கல்யாணம் பண்றா? எதுவும் சண்டையா?"
"ஹிம்" விரக்தியாகச்சிரித்தான் "இப்போ வரைக்கும் நான் அவகிட்ட ஒரு தடவ கூட சண்ட போட்டது இல்ல" ஒரு பெருமூச்சோடு ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டான்.

"மாப்ள என்ன தான்டா பிரச்சன? ஏன்டா இந்த கல்யாணத்துக்கு அவா ஒத்துக்கிட்டா?"

"நானும் அவளும் வேற வேறயாம்"

"வேற வேறனா? வேற வேறயா இருந்தாத்தான்டா எல்லாம் சரியா நடக்கும்" என் புத்திசாலித்தனமான ஜோக்கை அவன் ரசிக்கவில்லை. பேசாமல் இவனைத் தள்ளிவிட்டு அந்தப் பாட்டியை உட்காரச்சொல்லலாமா என்று யோசித்தேன்.


"வேற வேற ஜாதிடா. அவங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்களாம்" அவன் சொல்லும் தொனியிலேயே தெரிந்தது சோபா இவனை கழட்டி விட சொன்ன வார்த்தை தானே அன்றி அதில் ஒன்றும் உண்மை இல்லை என்று. சோபா மட்டுமா எல்லாப் பெண்களுக்கும் இது ஒரு நல்ல ஆயுதம் தானே. இந்த ஜாதிங்குற ஒன்னு இல்லாமலே இருந்திருந்தா பொண்ணுங்கல்லாம் என்ன காரணம் சொல்லுவாளுக?
"சரி மாப்ள, அது நீ லவ்வ ப்ரொபோஸ் பண்ணும் போதே தெரியாதா அவளுக்கு? அப்ப சொல்ல வேண்டியது தானடா?"

"மொத ப்ரொபோஸ் பண்ணதே அவா தான்டா" குண்டைத்தூக்கிப் போட்டான்.

"டேய் என்னது அவா ப்ரொபோஸ் பண்ணுனாளா? அவள அமைதியான பயந்த சுபாவம் உள்ள பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம் எல்லாரும்?"

"ஆமாடா. அத நானும் லவ்வுன்னு தான் நம்பிக்கிட்டு இருந்தேன். மொத எல்லார்கிட்டயும் என்ன பெஸ்ட் ஃபிரண்ட் பெஸ்ட் ஃபிரண்ட்னு சொல்லியே பேசிட்டு இருப்பா. லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பெறகும் நான் மத்தவங்க முன்னாடி அவளோட பெஸ்ட் ஃபிரண்ட் தான். லவ்வர்னு சொன்னா அவளப்பத்தி தப்பா நெனைப்பாய்ங்களாம். நானும் சரி நம்ம ஆளோட பேர் கெட்டுப்போயிறக்கூடாதேன்னு கம்முனு இருந்தேன்டா" என் முகம் பார்க்கவேயில்லை அவன். இந்தப் பசங்க எல்லாவனுமே இப்படித்தான். தைரியம் கெடையாது. இதே ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமைனா இந்நேரம் முகத்துக்கு நேரா பாத்து தைரியமா அழுதுகொண்டோ கோவத்தோடோ நியாயம் கேட்பாள். இவனுங்க ஒன்னத்துக்கும் ஆக மாட்டானுங்க.

"இப்படித்தான்டா ஒரு தடவ, என் கூட பாஸ்கர்னு ஒருத்தர் வேல செய்யுறாரு. அவர் கிட்ட இவள லவ் பண்றதப் பத்தி சொன்னேன். அவரும் 'வாழ்த்துக்கள் பாஸ், கலக்குங்க'ன்னு சொன்னாரு. இத அவாகிட்ட சந்தோசமா சொன்னேன்டா. அதுக்கு என் கூட எப்படி சண்ட போட்டா தெரியுமா?"

"ஆமா நீ பாட்டுக்க அவளுக்கு முன்னப்பின்ன தெரியாதவங்க கிட்ட சொன்னா அந்த்ப்பொண்ணுக்கு கோவம் வரத்தான செய்யும்?" என்னால் அவனிடம் எப்படியெல்லாம் கரக்க முடியுமோ அந்த மாதிரியெல்லாம் பேசினேன்.

"டேய் டெய்லி பேசும் போதே அவா சொல்ற கண்டிஷன் என்ன தெரியுமா? 'நாம லவ் பண்றது யாருக்குமே தெரியக்கூடாது'னு தான் சொல்லுவா" எனக்கு ஏதோ கள்ளக்காதல் கதையைக் கேட்பது போல் இருந்தது. "ஒனக்கே தெரியும் நானும் கண்ணனும் எப்படி பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்னு. நான் அவன் கிட்ட கூட இப்போவரைக்கும் சொல்லலடா. இந்த மேட்டர் தெரிஞ்ச ரெண்டாவது ஆளே நீ தான்"

கொஞ்சம் பெருமையாக இருந்தது. சுடச்சுட நண்பர்களோடு அரட்டை அடிக்க ஒரு விஷயம் கிடைத்ததால். "சரி அவளுக்கு யாருனே தெரியாத ஆள் கிட்ட சொன்னதுனால அவளுக்கு என்னப் பிரச்சனையாம்?"

"அதுக்கு அவா சொன்ன காரணம் தான்டா என்ன ரொம்ப வருத்தப்பட வச்சது மச்சி" சாகப்பொற நேரத்துலையும் இவன் மச்சியை விட மாட்டான் போல "அதாவது நாளைக்கு இவளுக்கு மாப்ள பாக்கும் போது அந்த மாப்ள வீட்டுக்காரங்க அவருக்கு சொந்தக்காரங்களா இருந்து அவரு இவளப் பத்தி அவங்க கிட்ட தப்பா சொல்லிட்டா என்ன பண்றதுன்னு கேட்டாடா!"

 "டேய் அவா ஒன்னத்தானடா லவ் பண்ணிக்கிட்டு இருந்தா? பெறகு ஏன்டா அப்டி சொன்னா?"

"நானும் அதத் தான்டா கேட்டேன். 'நாளைக்கே என்னவேணும்னாலும் நடக்கும்'னு சொன்னாடா"

எனக்கு அவன் மீது லேசாக பச்சாதாபம் வந்தது. "டேய் நம்ம சோபாவாட இப்படியெல்லாம் பேசுனது? ரொம்ப நல்ல பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம்"

"எவளையும் அப்டி மட்டும் நெனைக்காதடா. அவளுக தேவைக்கு மட்டும் நம்மள யூஸ் பண்ணிட்டு ஒரு டிஸ்ஸு பேப்பர் மாதிரி தூக்கிப்போட்டுட்டு போயிடுவாளுக" என்னால் அவன் சொன்ன உவமையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

'இதாவது பரவாயில்லடா. ஒரு தடவ என்ன நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல வெயிட் பண்ண சொன்னா. சாந்தரம் 4 மணிக்குப் போனேன். ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன். அவா வரவே இல்ல. கால் பண்ணா அட்டண்ட் பண்ணல, எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை வரல. எனக்கு ரொம்ப பயம் ஆகிருச்சி. வீட்டுக்குப்போகவும் மனசு இல்ல. 8மணிக்கு மேல எனக்கு கால் பண்ணாடா."

"நீ அப்போ வரைக்கும் ஸ்டேஷன்லயா இருந்த?"

"ஆமா' அவன் முகம் மாறியது. "போன் பண்ணி 'ஸாரி செல்லம் கொஞ்சம் லேட் ஆகிருச்சி. இந்தா வந்துறேன்'னு சொல்லிட்டு என் பதிலுக்குக் கூட வெயிட் பண்ணாம ஃபோன வச்சுட்டா. நான் நாய் மாதிரி எவ்ளோ நேரம் ஆனாலும் அங்கேயே இருப்பேன்னு அவளுக்குத் தெரியும். 8.30க்கு வந்தா"

"நல்லா நாலு கேள்வி கேட்டியாடா?"

"அப்படி கேக்கணும்ன்னு தான் இருந்தேன். ஆனா அவளப்பாத்ததும் அவா மேல இருந்த கோவம் எல்லாம் போயிருச்சி"

"அதான்டா இவளுக நம்ம தல மேல ஏறி ஆடுறாளுக" என் கோவம் எனக்கு. கால் கட் பண்ணிய என்னவள் இப்போது வரை திரும்ப என்னை அழைக்கவும் இல்லை, ஒரு எஸ்.எம்.எஸ் கூட இல்லை.

"உண்மை தான்டா. நான் அமைதியா இருந்ததப் பாத்துட்டு 'நான் இப்போ சொல்றத கேட்டு நீ கோவப்படக்கூடாது'னு சொன்னா. இனிமேல் கோவப்படுறதுக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னேன்."

"ஆமா இதுக்கு மேல என்னடா நடக்கணும் நம்மள அவமானப்படுத்த? சரி அப்டி அவா என்ன சொன்னா?"

"ஹா ஹா" சோகத்தில் சிரிப்பவனின் நிலையை அவன் வலியை உணர்ந்தேன். "பெருசா ஒன்னும் சொல்லலடா. 'ஸாரி செல்லம், என்ன பொண்ணு பாக்க வந்திருந்தாங்க, அதான் லேட்டு'ன்னு சொன்னா. அவா எதுக்கு சாரி சொல்றான்னு பாத்தியா? லேட் ஆனதுக்கு ஸாரியாம், பொண்ணு பாக்க வந்தது ஏதோ சாதாரண விசயம் மாதிரி சொன்னாடா"

எனக்கு சோபா இவ்வளவு கொடூர எண்ணம் படைத்தவளாக இருப்பாளா என்று தோன்றியது. அதுவும் அவள் வாயில் இருந்து இவனையெல்லாம் 'செல்லம்' என்று சொல்லியிருக்கிறாள் என்றால் இது காலக்கொடுமை தான். "அடுத்து என்ன தான்டா ஆச்சு? நீ என்ன சொன்ன?"

"ஓஹ் அப்டியா? நீ என்ன சொன்னனு கேட்டேன். அதுக்கு அவா 'மாப்ள வீட்ல எல்லாருக்கும் என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. எங்க அப்பாவுக்கும் மாப்ளைய புடிச்சிருக்கு'னு சொன்னா."

"டேய் என்னடா இது? அவா கல்யாணம் இப்போ வேண்டாம்னு கூட வீட்ல சொல்லலையா?"

"எதுக்கு சொல்லணும்னு கேட்டாடா! 'நான் தான் முன்னாடியே சொல்லிருக்கேனே நம்ம லவ்வுக்குலாம் எங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்கன்னு, இப்போ எனக்கு மாப்ள வேற பாத்துட்டாங்க. என்னால எப்டி வீட்ல சொல்லமுடியும்டா? என்னப் பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்களா? என்ன ஆனாலும் நீ தான்டா என்னோட பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னா. அன்னைக்குல இருந்து மச்சி, யார் 'பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னாலும் எனக்கு யாரோ என் பொறப்ப பத்தி தப்பா பேசுற மாதிரி இருக்கு"

"டேய் இப்படியெல்லாமாடா அவா நடந்துகிட்டா? அதான்டா சிம்பு எதோ ஒரு படத்துல சொல்லுவானே ஜீன்ஸ் போட்டவயெல்லாம் கெட்டவ இல்ல. அடுத்து என்னதுடா சுடிதார் போட்டவளா இல்ல சேல போட்டவளா?" என்னை அவன் முறைத்தான். "ஸாரி மாப்ள"

"அவான்னு இல்லடா எல்லாப் பொண்ணும் அப்படித்தான். அதான் பொட்டச்சி சகவாசம் வச்சுக்கிடாதன்னு சொன்னேன். அவளுக்கு நான் ஒரு மோதிரம் வாங்கிக்கொடுத்தேன்டா. ஹிம் இன்னைக்குக் கூட அவ கைல இருந்தது. கல்யாணத்துகு ஒரு மாசத்துகு முன்னாடி ஃபோன் பண்ணா. ரொம்ப நாளைக்குப் பிறகு கூப்டுறாளேன்னு சந்தோசமா அட்டண்ட் பண்ணேன். 'GRT கடை எத்தன மணி வரைக்கும் தொறந்து இருக்கும்? நீ கூட எனக்கு ஒரு தடவ ரிங் வாங்கிகுடுத்தேல'னு கேட்டா. எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லு?"

"சரி விட்ரா. எதுக்கு டென்ஷன் ஆகுற? அதான் உன்ன விட்டு போயிட்டால? இன்னும் எதுக்கு வருத்தப்படணும்?"

"இல்லடா இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, இவளுக எல்லாருமே இப்படித்தான்டா. கல்யாணம் ஆகுற வரைக்கும் சப்ஜெக்ட்ல டவுட் க்ளியர் பண்றதுல இருந்து, ஊர் சுத்திக்காட்டி, துணிமணி எடுத்துக்கொடுத்து, அடிக்கடி கிஃப்ட் வாங்கிக்கொடுத்து, நல்லா கவனிச்சி, டெய்லி வாட்ச்மேன் வேல பாக்குறதுக்கு ஒருத்தன் வேணும் இவளுகளுக்கு. அவனுக்குப் பேரு லவ்வர். அது கூட அவன் கிட்ட மட்டும் தான் சொல்லுவாளுக. மத்தவங்களுக்கு அவன் ஒரு பெஸ்ட் ஃபிரண்ட். ஒரு காலத்துல லவ்வரும் ஃபிரண்ட் புருஷன் இது எல்லாத்துக்குமே வேற வேற அர்த்தம்டா. ஆனா இன்னைக்கு புருஷன் லவ்வர் பெஸ்ட் ஃபிரண்ட்னு பேரு மட்டும் தான் வேற வேற. ஆனா எல்லாருக்கும் வேல என்னமோ ஒன்னு தான்"

அனுபவப்பட்டவன் சொல்வது எல்லாமே எனக்கு சரி என்று தோன்றியது. மீண்டும் ஆரம்பித்தான். "அது எப்டிடா லவ் பண்றவன் கிட்டயே தைரியமா 'நாம லவ் பண்றத வெளிய சொல்லாத'ன்னும், 'எனக்கு மாப்ள பாக்குறாங்க'னும், சொல்ல முடியுது? ஏன்னா இவளுக பொம்பளைகளாம். கெட்ட பேர் எடுத்தா குடும்பத்துக்கே அசிங்கமாம். நம்மல மட்டும் என்ன ரோட்லயாடா பெத்துவிட்ருக்காய்ங்க? நம்ம குடும்பத்துக்குலாம் மானம் ரோஷம் கெடையாதா?" கோவத்தில் மிகவும் சத்தமாகப் பேச ஆரம்பித்தான்.

"மாப்ள பைய பேசுடா" அவன் தொடையில் கையை வைத்து அழுத்தினேன். அதற்குள் வண்டி விருதுநகர் வந்துவிட்டது.

"காதல்னாலே எல்லாரும் தப்பா புரிஞ்சு வச்சுருக்காங்கடா. காதல்னா என்னன்னு தெரியுமா?"

எனக்கு பயமாகிவிட்டது. இவ்வளவு நேரம் வருத்தம் இனிமேல் தத்துவமா என்று பயந்துவிட்டேன். "மாப்ள நான் இங்க தான் எறங்கணும். உன்கிட்ட ஃபோன்ல பேசுறேன்டா"

"சிவகாசில தானடா ஒங்க வீடு?"

"இல்ல மாப்ள சித்தி வீட்ல வேல இருக்கு"

"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டாதடா"

"சரி மாப்ள வரேன்" என்று ஒரு வழியாக இறங்கி அவன் மொக்கையில் இருந்து தப்பித்து அடுத்த சிவகாசி பஸ்ஸுக்கு காத்திருந்தேன். தொடையில் ஒரு நமநமப்பு. ஆஹா போன் அடிக்குது. எடுத்துப் பார்த்தேன். என்னவள். அட்டண்ட் செய்தேன்.

"என்ன செல்லம் கோவமா? நான் நெறையா மெசேஜ் அனுப்பியும் கால் பண்ணியும் நீ கண்டுக்கவே இல்லையா, அதான்டா உன் கால கட் பண்ணிட்டேன். சாரிடா எரும. அதுக்காக என் கூட பேசாம இருந்திருவியாடா?"

"இட்ஸ் ஓகேடா செல்லம். ஒம்மேல எனக்கு கோவம் வருமாடா? பஸ்ல பழைய ஃபிரண்ட் ஒருத்தன பாத்தேன். அவன் கூட பேசிக்கிட்டே..."

"அப்போ உன் ஃபிரண்ட்ட பாத்தா என்ன மறந்துருவல்ல?"

"இல்லமா இது கொஞ்சம் சீரியஸ் விசயம்டா.... " முழு கதையையும் அவளிடம் சொன்னேன். 

"சே இப்டியெல்லாமாடா பொண்ணுங்க இருப்பாங்க?" என்றாள் என்னவள். நல்லவள்.

"ஆமா கண்ணு. அதானாலத் தான் அவன் இப்போ எல்லா பொண்ணுங்க மேலையும் வெறுப்பா இருக்கான்"

"சரி நீ நம்ம மேட்டர இன்னும் யார்கிட்டயும் சொல்லலையே? உன் ஃப்ரண்ட் கிட்ட சொல்லிட்டியா? நீ பாட்டுக்க ஓட்ட வாய் மாதிரி யார் கிட்டயும் சொல்லிறாதடா"

நினைத்துக்கொண்டேன் 'குத்துங்க எசமான் குத்துங்க'..

சரத்குமாரும் நாடார்களும் ஜாதியும் பின்ன ஞானும்..

$
0
0
இன்று சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிறந்த நாளாம். எங்கள் ஊர் பக்கம் எங்கு திரும்பினாலும் ப்ளக்ஸ் போர்டுகள் தான். அந்த ப்ளக்ஸ்களில் காமராஜர் உப்புக்கு சப்பானியாக மேலே ஒரு ஓரத்தில் ஒரு வளையத்திற்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார், கீழே வரிசையாக நாடார் குல விடிவெள்ளிகள் (அதான் எங்க ஊர் பயபுள்ளைக, ஸ்கூல் பசங்க கூட இதுல இருக்கிறது தான் மிகவும் அபாயகரமான விஷயம்), நடுவில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் நமது நாடார் குல நாயகன், சின்ன காமராஜர் சரத்குமார் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறார்.

என்னோட டவுட்டெல்லாம் யாருய்யா இந்த சரத்குமாரு? எதுக்கு அவரையும் காமராஜரையும் இணைத்து இப்படி அட்டூழியம் செய்கிறார்கள் என்பது தான். சிறு வயதில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது சக மாணவன் ஒருவன் சொன்னான், "யே சரத்து எங்க சொந்தக்காரு, தெரியும்ல? எனக்கு அதான் அவரப்புடிக்கும்" என்றான். 'பார்ரா இவனுக்கெல்லாம் ஒரு நடிகன் சொந்தக்காரரா இருக்கான். சே நமக்கு யாரும் இல்லையே? போன வாரம் கூட 'ரஜினி நமக்கு சொந்தக்காரன் எல்லாம் இல்ல. இனிமேல் ரஜினி மாமான்னு சொன்ன வாயில சூடு வச்சுருவேன் ரஸ்கல்' என்று அம்மா வஞ்சதை நினைத்துக்கொண்டேன். அப்போது அருகில் உள்ளவன் என்னிடம் கேட்டான். "நீங்க நாடாராடா?" என்று. "தெரிலடா" என்றேன். "நீ நாடாருன்னா சரத்து ஒனக்கும் சொந்தம் தான்டா" என்றான். 4ம் வகுப்புப் பையனின் பேச்சு இது.

'சாந்தரம் வீட்டுக்குப்போனவுடனே அம்மாகிட்ட..... வேணாம் வேணாம் அப்பா வந்ததும் கேப்போம், அம்மா அடிப்பாங்க' என்று முடிவு  செய்துகொண்டேன். சாந்தரம் வெளியில் அப்பா சைக்கிள் நிறுத்தும் ஓசை கேட்டது. வேகமாக வெளியில் சென்று அவர் வாங்கி வந்திருந்த பக்கோடா பொட்டலத்தை பிரித்துக்கொண்டே அப்பாவுக்கு கேட்காதவாறு மெதுவாகக் கேட்டேன், "அப்பா நாமா நாடாரா?"

"அத ஏன்டா கண்ணு இவ்ளோ மெதுவா பயந்துக்கிட்டே கேக்குற? தைரியமா சத்தமா கேக்கணும்" இவர் அம்மாவிடம் அடி வாங்கியதில்லை, அதான் இவ்ளோ தைரியம். இதே நான் சொல்லிருந்தா இந்நேரம் என் முதுகு வீங்கியிருக்கும். "நாமெல்லாம் நாடார் தான்டா" என்றார்.

அம்மாவுக்கு கேட்டுவிட்டது. "என்னது நாடாரா? பிள்ளைய கெடுத்து குட்டிசுவராக்குறதே நீங்க தான். டேய் இனிமேல் அப்பாகிட்ட போயி நாடாரு, ரஜினின்னு எதாவது கேட்ட தொடையில புடிங்கி வச்சுருவேன். ஹோம் வொர்க் நோட்ட எடு" அம்மாவின் கண்கள் பயமுருத்தின.

நைட்டு எல்லோரும் தூங்கிய பிறகு மெதுவாக அப்பாவை எழுப்பினேன். "என்னப்பா கண்ணு?"

"யெப்பா சரத்து நமக்கு சொந்தக்காரனாப்பா?"

"இல்லடா கண்ணு யாரு அப்டி சொன்னது?"

"என் கிளாஸ்காரன் சொன்னியான்ப்பா. நம்ம நாடாரு தான? சரத்து நாடாரு எல்லாருக்கும் சொந்தக்காரன்னு அவன் தாம்ப்பா சொன்னியான்"

"இந்தா யே எந்திரி" அப்பா அம்மாவை எழுப்பிவிட்டார். போச்சி இன்னைக்கு நைட்டு அடி தான் என்று முடிவு செய்துவிட்டேன். அம்மா எழுந்தார். "மொத, நாளைக்கு பிள்ளைய ஸ்கூல்ல விடும் போது டீச்சர் கிட்ட சொல்லி வேற எடத்துல ஒக்கார சொல்லு"

"எதுக்குங்க?"

"எவனோ இவேன்கிட்ட சரத்குமாரு நாடாரு, நம்ம சொந்தக்காரன் தான்னு சொல்லிருக்கான். நாலாப்பு படிக்குறவன் பேசுற பேச்சாடீ இது? இந்த வயசுலயே சினிமாக்காரன ஜாதிய வச்சு பிரிக்குறாய்ங்க? நான் சொன்னத மொத செய்யி" என்னைப்பார்த்துச் சொன்னார் "கண்ணு, கண்ட கண்டவன எல்லாம் சொந்தக்காரன்னு சொல்லக்கூடாதுடா' என்று சொல்லி என்னைத் தூக்கி சுவரில் தொங்கும் காமராஜரின் படத்திற்கு அருகில் கொண்டு சென்று  "இவரு தான் நம்ம சொந்தக்காரரு, ஒனக்கு தாத்தா, சேரியா?" என்றார்.

எனக்கு அந்த வயசான ஆளைப்பிடிக்கவில்லை அப்போது. இப்போது விவரம் தெரிந்தவுடன் காமராஜரைப் பிடிக்கிறது, ஆனால் அப்பா அன்று சொன்னதும் தவறு என்றே படுகிறது. காமராஜர் வேறு ஜாதியாய் இருந்திருந்தால் என் அப்பாவிற்கு இந்த அளவிற்குப் பிடித்திருக்காது. நடிகனை ஜாதி வைத்து பிரிக்கக்கூடாது என்றவர் காமராஜரை மட்டும் அப்படி பார்த்தது எனக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் என் அப்பா அளவிற்குக் கூட யோசிக்காத பல அரைவேக்காடுகள் படித்தும் விவரம் தெரிந்தும் இந்த மாதிரி நடிகர்களை ஜாதிவாரியாகப் பிரித்துக்கொண்டு தேவையில்லாமல் பேனர் கட் அவுட் என்று வைத்து உயிரை வாங்குகிறார்கள். இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள ஒரு பதிவு.இந்த சரத்குமார் தனது ஆரம்ப கால சினிமா வாழக்கையில் ஜாதியை காட்டிக்கொண்டதில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் சேர்ந்ததும் தனக்கும் கட்சியில் நடிகன் என்கிற ஒரு நிலையைத் தாண்டிய அந்தஸ்து கிடைப்பதற்காக தன் ஜாதியை காட்ட ஆரம்பித்தார்.

அப்போது அந்த இன மக்களும் இவருக்கு கொஞ்சம் ஆதரவாக இருந்தனர். ஆனால் நக்மாவுடன் சுற்றிக்கொண்டும் தன் மனைவியை விவாகரத்து செய்த போதும் இவரை "எங்க ஆள்" என்று சொல்லிக்கொள்ள பலரும் கூச்சப்பட்டது உண்மை. பின்னர் தான் இவர் தி.மு.க.விற்கு வந்து தீவிர அரசியலில் இறங்கினார். அப்போதும் ஒன்றும் நாடார்கள் இவருக்குப் பெரிதாக ஒன்றும் ஆதரவளித்துவிடவில்லை. நாடார்களின் செல்வாக்கு மிகுந்த நெல்லையிலே தான் இவர் தோற்றார். அப்போதும் கூட இவருக்குப் புரியவில்லை ஜாதியில் பெரும்புள்ளியாக இருப்பது மட்டுமே அந்தக் குறிப்பிட்ட ஜாதிக்குத் தன்னை தலைவனாக்கப் போதுமானது இல்லை என்பது. இவரை தங்கள் ஜாதி என்று தான் கூறிக்கொண்டார்களே தவிர தங்கள் தலைவன் என்று யாரும் கூறிக்கொள்ளவில்லை.

அவர்களுக்கும் தெரியும், இந்த ஆளை தலைவன் என்று ஏற்றுக்கொண்டால் தன்னை அடுத்த காமராஜராக நினைத்துக்கொண்டு விடுவார் என்பது. ஏற்கனவே சென்ற வருட இறுதியில் சிவகாசியில் நடந்த நாடார் சங்க நூற்றாண்டு விழாவில் இவர் பேச்சுக்கு மட்டுமே எதிர்ப்பு இருக்கிறது இப்போது வரை மக்களிடம். எந்தத் தலைவனும் தன்னை தானே தலைவன் என்று  சொல்லிக்கொண்டது இல்லை. மக்கள் தான் தலைவர்களை அடையாளம் கண்டு தலைவன் ஆக்குகிறார்கள். ஆனால் இந்த ஆள், ஒரு சமுதாயத்தில் அந்த சமுதாயத்திற்காக இப்போது வரை பாடுபடும் மூத்தோர்களும் நல்ல தலைவனை எதிர் பார்த்து நிற்கும் மக்களும் நின்று கொண்டிருக்கும் ஒரு மேடையில், அந்த நிகழ்ச்சிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிக்கூட போடாமல் சொகுசாக 10நிமிடங்கள் மட்டும் வந்து மேடை ஏறி "நான் தான் உங்கள் தலைவன்" என்று சொன்னால் அதை உடனே நம்பி கைதட்ட மக்கள் ஒன்னும் எம்.ஜி.ஆர் காலத்தில் இல்லையே?!

இவர் இப்போது கூட தென்காசி தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் நாடார் வாக்கு வங்கியை மட்டும் நம்பி நின்றிருந்தால் வழக்கம் போல இன்னொரு தோல்வி தான் மிஞ்சியிருக்கும். மக்களை இவர்கள் இன்னும் இளிச்சவாயர்களாக நினைத்துக்கொண்டு, தான் சார்ந்த ஜாதியை எதாவது ஒரு பெரிய கட்சியில் அடையாளமாகக் காட்டி எதாவது ஒரு பதவியை அடைந்துவிடுகிறார்கள். இவர்களுடைய விசிட்டிங் கார்டை அன்றோடு மறந்துவிடுகிறார்கள்.

இப்போது வரை எனக்கு உண்மையிலேயே இவரது பிறந்த நாள் ஜூலை 14ல் தானா என்று ஒரு சந்தேகம் உண்டு. தன் ஜாதி மக்கள் உயிரையே வைத்திருக்கும் மறைந்து போன ஒரு தலைவரின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளை தன் பிறந்த நாளாக அறிவித்துக்கொண்டால் இவருக்கு அது மக்கள் மத்தியில் தலைவன் என்று கூறிக்கொள்ள சென்ட்டிமெண்ட்டாக உதவும் என்கிற நோக்கோடு கூட இருக்கலாம் அல்லவா?

ஆனால் நாடாரின மக்களையும் சும்மா சொல்லக்கூடாது. ஓரளவிற்கு விவரமானவர்கள் தான். இதை உணர்ந்ததால் தான் சரத்குமாருக்குத் தனியாக நிற்கும் தைரியம் இல்லை. இப்போதும் கூட விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை சரத்குமாருக்கு கணிசமான அளவில் ரசிகர் மன்றங்களும் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் எல்லாருக்கும் திரையில் காணும் நடிகனை நேரில் காண்கிறோம் என்கிற ஆசை மட்டும் தான் உண்டே தவிர தலைவனாக்கும் ஆசையெல்லாம் என்றுமே இருந்ததில்லை. ஆனால் காமராஜரோடு இணைத்து இந்த ஆளை வைத்து போஸ்டர் ப்ளக்ஸ் வைப்பது தான் அசிங்கமாக உள்ளது.

மற்ற இன மக்களும் இப்போது இப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். திரையில் கனவுத்தொழிற்சாலையில் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் தங்கள் பங்குக்கு இருக்கிறான் என்கிற சந்தோசம் அவர்களுக்குப் போதும். அவனே தலைவனாக நினைக்கும் போது தான் மக்களும் தங்கள் பவரை காட்டுகிறார்கள். அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பது மட்டுமே தலைவனாகத் தகுதி இல்லை என்பதையும் மக்களும் உணர்ந்துள்ளனர். 

ஆனாலும் ஜாதி என்பது அனைத்தில் இருந்தும் தூக்கி எரியப்பட வேண்டும். ஒரு நடிகன் என்பவன் அவனுடைய நடிப்பாலும், தலைவன் என்பவன் நீதி தவராத நடுநிலையான தலைமையாலுமே நம்மைக் கவர வேண்டுமே ஒழிய ஜாதி மூலமாகவோ மதம் மூலமாகவோ கவர நினைத்தால் அது அவனின் முட்டாள் தனம் என்பதையே கார்த்திக்கும் சரத்குமாரும் இன்றைய தேதி வரை நமக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி முதலில் சொன்ன அந்த ஸ்கூல் மேட்டரை சொல்லி முடிக்கிறேன். மறுநாள் பள்ளி சென்ற போது வேறு இடம் மாறி உட்கார்ந்து கொண்டேன். அந்தப் பையன் ரீசஸ் பீரியடில் வந்து கேட்டான், "என்னடா நீங்க நாடாரா?"

"ஆமா"

"அப்ப சரத்து ஒனக்கும் சொந்தம் தான்"

"இல்ல எனக்கு காமராஜர் மட்டும் தான் சொந்தம்" வேகமாகத் திரும்பி ஓடினேன் ஒன்றுக்கு அடிக்க..

இலங்கையில் உயிரை எடுத்தோம், தமிழகத்தில் மானத்தை வாங்குவோம் - அழியட்டும் தமிழன்..

$
0
0
தினமும் எதாவது ஆங்கில அல்லது ஹிந்தி - பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் வடநாட்டு - செய்தி சேனல்களைப் பார்க்கும் போது தோன்றியது தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு. எந்த சேனலைத் திருப்பினாலும் "தமிழ் அமைச்சரின் ஊழல்" என்றே இந்த ஸ்பெக்ட்ரம் என்னும் விசயம் சொல்லப்படுகிறது. 

இன்று வரை இதில் எவ்வளவு பணம் ஊழல் செய்யப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. 1.76லட்சம் கோடி வருமான இழப்பு. இப்படி இழப்பு ஏற்படுத்த சாதாரண மந்திரிக்கு மட்டும் லஞ்சம் கொடுத்தால் போதுமா? இதை ஏன் வடநாட்டு மீடியாக்கள் சொல்வதில்லை? தெரிந்தும் சொல்ல மறுக்கின்றனவா? அவர்கள் அங்கே சொல்வதை இங்கே நமது அடிவருடிகளும் ஏதோ ராசாவும் தயாநிதி மாறனும் தான் ஊழல்வாதிகள் என்பதைப் போல் சித்தரிக்கிறார்கள்.
நேரடியாக ஊழல் மற்றும் லஞ்சம் நிகழ்ந்த காமன்வெல்த், ஆதர்ஷ் போன்றவை பற்றி இப்போது எந்தத் தொலைக்காட்சியிலும் ஆங்கில நாளிதழ்களிலும் செய்தியே வருவதில்லை. வராத மாதிரி பார்த்துக்கொள்ளப்படுகிறது என்றும் சொல்லலாம். ஏன் என்றால் காங்கிரஸுக்கு அது கெட்ட பெயரை உண்டு பண்ணிவிடும் நேரடியாக அந்தக் கட்சிக்காரர்களே அதில் ஈடு பட்டிருப்பதால். ஆனால் இந்த அரசு ஊழலை எதிர்ப்பது போலவும் காட்டவேண்டுமே, அதற்கு என்ன செய்வது?

'சிக்குனான்டா அடிம' என்பது போல் ராசாவை தேர்தல் நேரத்தில் அமுக்கினார்கள். அது ஒன்றை மட்டுமே வைத்து இன்று வரை இதை தேய் தேய் என்று தேய்க்கிறார்கள். கூட்டணியில் இருக்கும் கட்சி என்றாலும் நாங்கள் ஊழலை ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம் என்பது தான் இவர்கள் சொல்ல வருவது. அதிலும் செய்திகளில் தமிழ் அமைச்சர்கள், தமிழ்நாட்டு அமைச்சர்கள் என்று குறிப்பிட்டு கூறும் போது இதில் ஏதோ உள்அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.

தன்னை வெறுத்த மாமியாரைக் கொன்ற சீக்கிய இனத்தவரை பிரதமராக்கி அழகு பார்ப்பவர் தான் அன்னை சோனியா (த்தா வச்சுருக்கான் பாரு தெளிவா. 'அன்னை சோனியா', 'புரட்சித்தலைவி அம்மா'னு). தன் கண்வனைக் கொன்றவர்கள் இலங்கையில் தமிழ் பேசுபவர்கள் ஆதலால் அந்த இனத்தையே வேரோடு அழித்தாகிவிட்டது அங்கே. இன்னும் கொஞ்சம் நஞ்சம் அங்கே மிச்சம் இருப்பதும் சிங்களவனோடு கலந்து தமிழ் என்பது இலங்கையில் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும். 

அந்த அன்னைக்கு ஒரு இனத்தையே அதன் கலாச்சாரத்தையும் வேரையும் அழித்தும் தன் ரத்தவெறி அடங்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம்? தமிழ் பேசுபவன் எங்கு இருக்கிறான் என்று தேடினால் இதோ தான் வாழ்க்கைப்பட்ட இந்திய நாட்டின் காலடியில் இருப்பது தெரிந்துவிட்டது. சொந்த நாட்டிலே போர் தொடுக்க முடியாது, இலங்கையில் செய்தது போல் பேடித்தனமாக பின் இருந்து தாக்க முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவு தான் இந்த "தமிழர்களின் ஊழல்".

உயிரைத்தான் வாங்க முடியவில்லை. மானத்தை வாங்கலாம் அல்லவா? ஒரு காலத்தில் நாம் பிஹாரிகளையும் ஜார்கண்ட்காரர்களையும் ஊழல்வாதிகள் என்று எள்ளினோம். இன்று லட்சம் கோடி ஊழல் என்று உலகமே வாயைத் திறந்து பார்க்குமாறு செய்தாகிவிட்டது.

சரி, அந்த லட்சம் கோடி ஊழலும் தமிழன் செய்தான் என்றே வைத்துக்கொள்வோம். ஊழல் பணம் எங்கே என்று கேட்டால் 'அது ஊழல் இல்லை வருமான இழப்பு' என்றார்கள். எல்லா அமைச்சர்களும் அப்படித்தானே செய்தார்கள், பின் எதற்கு கைது? என்றால், "அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்தார்" என்கிறார்கள்.

இன்று வரை அந்த லஞ்சப்பணத்தையும் சரி, லஞ்சம் கொடுத்தவர்களையும் சரி இந்த அரசாங்கமும் வடநாட்டு மீடியாக்களும் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் காரணம் நீரா ராடியா என்னும் வடநாட்டுக்காரி தானே? ரிலையன்ஸுக்கும் சம்பந்தம் உள்ளதே? டாடா கூட பேசினாரேப்பா? அவர்கள் மேல் எல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன?

இன்றைய தேதியில் ரிலையன்ஸ் மீதும் டாடா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், மறுதினமே இந்த அரசு (எந்த அரசாக இருந்தாலும்) கவிழ்ந்துவிடும். அவர்களைப் பற்றி எல்லாம் இரண்டு நாட்கள் செய்தி போட்டுவிட்டு அப்படியே மறந்தாகிவிட்டது. ஆனால் கனிமொழி, தயாநிதி என்று ஒவ்வொருவராக கைது செய்யப்படுகின்றனர். "Tamil Minister Arrested" என்று செய்திகள் வேறு.

இதை எல்லாம் பார்க்கும் மக்கள் சிரிதும் யோசிப்பதே இல்லையா? ஒரு அமைச்சர் எப்படி அத்தனையும் செய்ய முடியும்? "எனக்கு ஒன்னுமே தெரியாது"ன்னு ஒரு பிரதமர் சொல்றாரு. அமைச்சரவையில் வேறு யாருக்குமேவா தெரியாது? சரி ஊழல் நேரடியாகத் தெரிந்த ஆதர்ஷ், காமன்வெல்த் பற்றியெல்லாம் ஏன் யாருமே பேசுவதில்லை? மீடியாக்களும் மறந்துவிட்டனவா?

ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும் தமிழனும் மற்ற ஊழல் பற்றி பேசுகிறானா? ஏதோ ஊழல் என்றாலே தமிழ்நாடு தான் என்றாகிவிட்டது. வடநாட்டுக்காரன் எல்லாம் நம்மை நக்கலாகத்தான் பார்க்கிறான். இப்போது கூட கட்சிக்கு நாயை விட அதிகமாக விசுவாசமாக இருக்கும் சிதம்பரத்துக்கு அவர் தமிழன் என்கிற காரணத்தால் தான் செக் வைக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் வருகிறது.

"தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கு குணமுண்டு"
தமிழனையும் அழித்தாகிவிட்டது, அவன் குணத்தையும் மானத்தையும் அழித்துவிட்டு அவனை தலைகுனியச் செய்ய இப்போது அடுத்த மூர்க்கத்தனம் நடக்கிறது. நாம் நம் அடையாளத்தை இழக்கப் போகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக. நம் மானம் போகப்போகிறது. இதற்கு இலங்கையைப் போல் செத்துப்போய்விடலாம்.


மயிர்நீப்பின் வாழா கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

12வது காதலியும் சில நல்லவர்களும் - சிறுகதை

$
0
0
"நான் தான் படிச்சி படிச்சி சொன்னேன்லடா பொட்டச்சி சகவாசம் வேணாம் பொட்டச்சி சகவாசம் வேணாம்னு, கேட்டியா நீயி?” - என் நண்பன் ராம் எரிந்து விழுந்தான். ஒரு லவ் ஃபெயிலியரிலேயே மொத்த பெண் இனத்தையும் எதிரி போல் பார்ப்பவன். கான்ஃபிடன்ட் இல்லாத பாய்.

“நான் என்னடா பண்ண? திடீர்னு கோச்சுக்கிட்டு ஃபோன ரெண்டு நாளா அமத்தி வச்சுட்டாடா. நம்பர கூட மாத்திருப்பாளோனு பயமா இருக்குடா” - நெஜம்மாவே இந்த காதலும் டி.ஆர். பட கிளமைமாக்ஸ் மாதிரி ஆகிருமோன்னு பயந்துக்கிட்டே பேசுனேன்..

”ரெண்டு நாளாவா? இப்ப வந்து சொல்ற? ஒனக்கு என் ஞாபகம் இப்போவாவது வந்ததே..”

“ஃபேஸ்புக் ஐடியும் இல்லடா”

“இதுக்காடா அவன் ஃபேஸ்புக் கண்டுபுடிச்சான்?” - ஆமா வேற எதுக்கு கண்டுபுடிச்சான்? இதுக்குத்தான? இந்த லூசுப்பய ராம் இப்படித்தான் எதையாவது ஒளரிக்கிட்டு இருப்பான்.

“என்னடா யோசிக்குற? இந்த பொட்டச்சிங்க எல்லாருமே இப்படித்தான்டா. பேசாமா எதாவது சந்தானம் ஜோக் பாத்துட்டு தூங்கிரு காலைல சரியாகிடும்” - இவன் சீரியஸா பேசுறானா இல்ல அவன மாதிரியே என் லவ்வும் புட்டுக்கிச்சின்னு சந்தோசத்துல பேசுறானானே தெரில..

“டேய் நான் என் லவ்வருக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம பதட்டத்துல இருக்கேன், என்ன காமெடி பாக்க சொல்ற?”

“சரி நீ அவ நம்பர தேடி ரோடு ரோடா அல.. எனக்கு வேல இருக்கு நான் ஃபோன வைக்குறேன். ஆனா மறுபடியும் சொல்றேன் பொட்டச்சி சகவாசம் வேணாம்” - என் பதிலுக்கு கொஞ்சம் கூட காத்திராமல் வைத்துவிட்டான்.

சே என்ன உலகம் இது? அவனோட பெஸ்ட் ப்ரண்ட் நான்.. லவ் ஃபெயிலியர்னு சொல்றேன், கொஞ்சம் கூட ஆறுதல் சொல்லாம எடுத்தெறிஞ்சி பேசுறானே? சரி நம்ம தலைவிதி அவ்ளோ தான்” நொந்து கொண்டே அடுத்து யாருக்கு கால் செய்து பொலம்பலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

எம்.பி.ஏ.ல ஆறு மாசம் மட்டும் படிச்சிட்டு ஓடிப்போனானே, அவனுக்கு கால் பண்ணலாமா?
அடங்கோ நைட்டு பன்னெண்டு மணிக்கு வெயிட்டிங் கால் வருது.. ஹிம் சரி, இன்னும் கொஞ்ச நாள்ல அவனே நமக்கு கால் பண்ணுற காலம் வரும்னு மன்ச தேத்திக்கிட்டேன். நமக்கு ஒரு பிரச்சனை வரும் போது தான் எல்லா நண்பனும், ஞாபகம் வராய்ங்க.. காதல் எல்லாருக்கும் லைஃப்ல எத்தன தடவ வரும்னு தெரியாது.. ஆனா எனக்கு இது வரைக்கும் 12 தடவ வந்திருக்கு.. இந்த டசன் காதல்களிலும் நான் புரிந்து கொண்ட மிகப்பெரிய விசயம், காதல் செலவு வைக்கும் என்பதை மட்டும் தான். புரிந்து கொள்ளாத ஒரே விசயம் பொம்பளைகளுக்கு எப்போ கோவம் வரும் என்பதைத் தான்.
என் காதலி, ஆமா இப்போ இருக்குற 12வது காதலி தான்.. அவ பேரு, சரி விடுங்க பேரு எதுக்கு? கழுத நாளைக்கு இத அவ ப்ரண்ட் ப்ரொஃபைல் மூலமா படிச்சான்னா அதுக்கும் ஒரு சண்ட போடுவா. கடவுள் எதுக்கு ஆம்பளைகளுக்கு பொம்பளைய ஜோடி ஆக்குனான்? பேசாம பொம்பளைய பொம்பளை கூடவே ஜோடியாக்கியிருக்கலாம்.. ஆம்பளைங்களாவது நிம்மதியா இருந்திருப்பாய்ங்க..

அய்யோ இப்படி கண்டத ஒளற வச்சுட்டாளே?! எவனுக்காவது ஃபோன் போட்டு அணத்தனுமே? கல்லூரியின் கடைசி நாளுக்குப்பிறகு என்ன ஆனான்னே தெரியாத ஜானுக்கு ஃபோன் அடித்தேன்.

“கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்”னு பாட்டு பாடுது ஃபோன்ல.. சிரிப்பே கண்ணீராகும்டா சீக்கிரத்துல என்று சொல்லி மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேன்..

“ஹல்லோ”

“ஜானா?”

“ஆமா நீங்க யாரு?”

“டேய் நான் தான்டா.....” வழக்கமான கல்லூரிக்கால மொக்கைகளையும் வேலை பழுவையும் பேசி மேனேஜரை சைக்கோ லூசு என்று வைதுவிட்டு மேட்டருக்கு பயலை மெதுவாக இழுத்து வந்தேன்.

“அப்பொறம், எப்ப கல்யாணம்?”

“ஏ அதுக்கெல்லாம் இன்னும் ரெண்டு வருசம் ஆகுமப்பா” அவன் பேச்சிலேயே வெக்கம் தெரிந்தது. பய வசம்ம்ம்ம்ம்மா ஒரு வலையில சிக்கி இருக்கான் போல, “ஒனக்கு எப்போடா?” எனக்கே பதில் கொக்கி போட்டான்.
கிடைத்துவிட்டான் ஒருவன் புலம்ப என்கிற தைரியத்தில் ஆரம்பித்தேன். “எனக்கெல்லாம் நடக்கவே நடக்காதுடா” இவ்வளவு நேரம் நார்மலா இருந்த என் குரல் இப்போது எனக்கே தெரியாமல் சோகம் ஆகிவிட்டதை உணர்ந்தேன். முகம், விக்ரமன் பட ஹீரோ கிளைமேக்ஸில் இருப்பது போல் தொங்கிப்போய் இருந்தது.

“டேய் மாப்ள என்னடா ஆச்சி? ஏன் சோகமா பேசுற?” திடீர் உரிமையுடன் பேசினான்.

“இல்லடா சீரியஸா(!) ஒருத்திய (!!!!) லவ் பண்ணுனேன். திடீர்னு சண்ட போட்டுட்டு போயிட்டாடா. பைத்தியம் பிடிக்குற மாரி இருக்கு”

“அடச்சே இத்துக்கு தான் இவ்ளோ பில்ட்-அப்பா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்” ரொம்ப அசால்ட்டா சொன்னான்.

“டேய் என் லவ்வு ஒனக்கு பில்டப் மாதிரி தெரியுதாடா?”

"அதில்லடா இதுக்கெல்லாம் இவ்ளோ வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்ல”

“டேய் லவ்வுடா.. ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் ஒருத்தி என்ட பேசிக்கிட்டு இருந்தா, ஆனா இப்போ அவ என்ன ஆனான்னே தெரில. ஒனக்கு என்னோட ஃபீலிங்க்ஸ் புரியல மாப்ள”

“நீ மேட்டர முடிச்சிட்டியா?”

“என்னதுரா” அதிர்ச்சியில் கேட்டேன்

“மேட்டர்.. மேட்டர்.. மேட்டர முடிச்சுட்டியான்னு கேட்டேன்” நான் காது கேக்காமல் திரும்ப கேக்குறேன்னு அவன் அழுத்தி சொல்றான். லூசுப்பய..

“டேய் இது லவ்வுடா”

“அதுவும் லவ்வு தான்.. டேய் மேட்டர் முடிச்சிரணும்டா.. அப்போ தான் இவளுக நம்ம கண்ட்ரோல்லயே இருப்பாளுக”

“ஓ, மேட்டர் முடிச்சிட்டா சண்டையே வராதாடா?” பன்னெண்டு முறை மிஸ் பண்ணிவிட்ட விரக்தியில் கேட்டேன்.

“சண்ட வரும்.. பேசாமலும் இருப்பாளுக.. கழட்டியும் விட்ருவாளுக”

“பெறகு எதுக்குடா மேட்டர முடிக்க சொல்ற”

“இந்த அளவுக்கு வருத்தப்பட மாட்டடா. மேட்டர் முடிச்சுட்டா ஒனக்கு ‘சே இவ்ளோ தான் லவ்வா?’னு அதப்பத்தின உண்மை தெரிஞ்சிரும். அதுக்குப்பெறகு நீ லவ்வ ப்ரேக்டிக்கலா அப்ரோச் பண்ணுவ”

“டேய் அந்த பொண்ணோட வாழ்க்க?”

“எலேய் அவளுக்கும் சேத்து தான். மேட்டர் முடிச்சிட்டு பிரிஞ்சி போனவைங்க
தான் உருப்படியா இருக்காய்ங்க.. ஒன்ன மாதிரி முரளி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணுறவன் தான் கொல பண்றது, கல்யாணத்த நிறுத்துறது, தற்கொலை பண்ணுறதுன்னு திரியுறாய்ங்க. மேட்டர் முடிச்சுட்டா சந்தோசமா அவ கல்யாணத்துக்கே போயி அவ புது புருஷனுக்கு கை குலுக்கிட்டு வரலாம்”

“அந்தப்பொண்ணையே கல்யாணம் பண்ணக்கூடாதா மேட்டர் முடிச்சிட்டா?”

“அதான் மேட்டர் முடிச்சாச்சில்ல, பெறகு எதுக்கு அதே பொண்ணு?”

“டேய் காதலிச்சா அவளையே கல்யாணம் பண்ணணும்லடா?”

“எதுக்குடா கல்யாணம் பண்ணணும்? கல்யாணத்துக்கு பெறகு பண்ண வேண்டியதே காதலிக்கும் போதே பண்ணிட்டா எதுக்கு கல்யாணம் பண்ணணும்?”

எனக்கென்னமோ இவன் சொல்வது லேசாக சரி எனப்பட்டது. “நீ யாரையாவது லவ் பண்றியாடா?”

“ஆமா இப்போ ஒன்னு லைன்ல ஓடிக்கிட்டு இருக்கு” ஏதோ ஸ்டிடீ பூத்தில வரிசையில் நிற்பது போல் சொன்னான்.

“என்ன தான் நாம உருகி உருகி லவ் பண்ணுணாலும், வீட்ல மாப்ள பாக்க ஆரம்பிக்கும் போது நமக்கு டாட்டா காட்டிறாளுகளே?”

“டேய் திரும்ப மொத இருந்தா? ஒரே பிரச்சனைய வேற வேற மாதிரி கேட்டாலும் பதில் ஒன்னு தான்.. மேட்டர முடி, வருத்தம் இருக்காது” - தலைவலி ஜலதோசம் உடல்வலி அனைத்திற்கும் விக்ஸ் ஆக்‌ஷன் என்பது போல் எல்லாத்துக்கு மேட்டர் தான் ஒரே வழி என்று சொல்லிவிட்டான்.
மேட்டர் என்று நினைக்கும் போது சந்தோசம் வந்தாலும் லேசாக ஒரு பயமும் உள்ளே ஒளிந்துகொண்டிருந்தது. எனக்கு என் 12வது காதலி மேல் தான் கோவம் வந்தது. அவ மட்டும் சண்ட போடாம இருந்திருந்தா நான் இப்படி தப்பு தப்பா யோசிச்சிருப்பேனா?

இவளுக எதுக்கு சண்ட போடுறாளுகன்னே தெரிலையே? ஞாயமா பாத்தா வீட்ல அவளுக்கு வரன் பாக்க அவ சம்மதம் சொன்னதுக்கு நான் தான் அவ மேல கோவப்படணும்.. ஆனா அவ என் மேல கோச்சுக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம ரெண்டு நாளா இருக்கா, அதுவும் ஃபோன ஆஃப் பண்ணி வச்சுக்கிட்டு. சரி கடைசியா என் தம்பிக்கு கால் பண்ணி அவனோட ஐடியாவையும் கேக்கலாம்னு முடிவு செஞ்சேன்.

“அண்ணே யூரோ கப்பு இந்த தடவையும் ஸ்பெயின் தான் ஜெயிச்சாய்ங்க பாத்தியா?”

அந்த ஞாயித்துக்கெழம நைட்டு தான் அவ என் கூட சண்ட போட்டா.. “இல்லடா அது பாக்கலாம் நேரம் இல்ல”

“ஏன்ணே டல்லா பேசுற?”

“ஒனக்கே தெரியும்ல சகோதரர், நான் ஒருத்திய லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன்ல?” கலகலப்பு படம் வந்தப்போ காமெடியா சகோதரர்னு கூப்பிட ஆரம்பிச்சி இப்போ அவன சீரியஸாவே அப்படித்தான் கூப்பிடுறேன்.

“யாருண்ணே? உன் ஸ்கூல்மேட்டா?”

“டேய்” என் மொத லவ்வர நானே மறந்துட்டேன். இவன் இன்னும் ஞாபகம் வச்சிருக்கான்.

“சாரி சாரி அந்த இந்திக்காரியா?”

“நீயும் நக்கல் பண்ற பாத்தியா அண்ணன?”

“ஆமா நீ தான் வருசத்துக்கு எட்டு பேர லவ் பண்றேன் லவ் பண்றேன்னு சொல்ற.. அப்புறம் எனக்கு அது யாருன்னு தெரியும்?”

“இல்லடா இது இங்க நான் வேல செய்யுற எடத்துல”

“ஓ அப்படியா? சரி என்னாச்சி? சொல்லு சொல்லு” என் தம்பி கேக்கும் தொனியிலேயே தெரிந்தது நாளைக்கு அவன் நண்பர்கள் மத்தியில் நான் தான் காமெடி பீஸ் என்று.. இருந்தாலும் எனக்கு பொலம்ப ஆள் இல்லயே.. ஆரம்பித்தேன்.

“சகோதரர் இந்த பொண்ணுங்க எதுக்கு சண்ட போட்டுக்கிட்டே இருக்காங்க?”

“சண்ட போட்டாத்தானடா ஒன்ன மாதிரி பசங்க எல்லாம் அவள தாங்கிக்கிட்டே இருப்பிங்க?”

“அட ஆமா..  ஆனா தப்பு அவளுக மேல இருந்தாலும் நம்ம மேல தான் கோவப்படுறாளுக சகோதரர்.. கொடுமையா இருக்கு”

“சகோதரர்னு கூப்பிடுறத நிறுத்துரா நீ மொத.. பொண்ணுங்க, சண்ட வர மாதிரி இருக்குற சமயத்துல அவங்களே மொத ஆரம்பிச்சுருவாங்க சண்டைய.. அப்போ தான் அவங்க மேல தப்பு இருந்தாலும் நாம் அவங்கள தாஜா பண்ண இறங்கி வருவோம்னு”

“இதெல்லாம் ஒங்களுக்கு எப்படி தெரியும் சகோதரர்?”

“சரி நான் ஃபோன வச்சிரட்டுமா?”

“டேய் டேய் டென்சன் ஆகாத.. சொல்லு”

“நீ அவளுகள செல்லம் கொஞ்சுற வரைக்கும் தாங்கிக்கிட்டு இருக்குற வரைக்கும் தான் உன்ட்ட பேசுவாளுக.. இல்லேன்னா வேற யாராவது நல்லா பேசுனா அவன் கூட”

“அப்போ உணமையான் காதல் எங்கேயுமே இல்லையா சகோதரர்?”

“டேய் ஒனக்கு எத்தன வயசாச்சி?”

“ஏன் சகோதரர்?”

“சொல்றா எத்தன வயசாச்சி?”

“29 ஆகுது”

“டேய் இந்த வயசுல நீ முரளி மாதிரி ஒன் சைடு லவ்வுக்கு அழுதுக்கிட்டு இருந்தின்னா என் வாழ்க்கை என்னடா ஆகும்”

“என் லவ்வுக்கு ஒங்க லைஃபுக்கும் என்ன சம்பந்தம் சகோதரர்?”

“டேய் நீ காலாகாலத்துல கல்யாணம் செஞ்சா தானடா என் லைன் க்ளியர் ஆகும்? எனக்கும் 26 வயசு ஆகுதுடா”

“ஓ அப்படி ஒன்னு இருக்கோ? சாரி சகோதரர்”

“ஆனா ஒன்னு சொல்றேன்டா.. நீ என்னைக்கு என்ன சகோதரர்னு கூப்பிடுறத நிறுத்துறியோ அன்னைக்கு தான்டா ஒனக்கு ஃபிகர் செட் ஆகும். அது வரைக்கும் நீ அடுத்தவன் ஜோடியா சுத்துறத பாத்தே வயிறு எரிஞ்சு சாவடா”
சம்பந்தமே இல்லாமல் என் தம்பியும் கோவத்தில ஃபோனை வைத்துவிட்டான். வேறு வழியில்லாமல் திரும்பவும் அவனையே கூப்பிட்டேன்.

“என்னடா வேணும்?”

”உண்மையான லவ்வுக்கு இது தான் மரியாதையா சகோதரர்?”

“எதுடா உண்மையான லவ்வு? ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் செல்லம் அம்மு டார்லிங்னு கொஞ்சிக்கிடு இருப்பிங்க.. யாராவது ஒருத்தருக்கு கல்யாணம் நிச்சயம் ஆன ஒடனே அவங்கள பத்தி எல்லார்கிட்டயும் கொஞ்ச நாளைக்கு அசிங்க அசிங்கமா பேசி, வெக்கமே இல்லாம அவங்க கல்யாணத்துக்கே போயி சோத்த தின்னுட்டு அதே கல்யாணத்துல இன்னொரு ஃபிகர செட் செய்யுறதுக்கு பேர் தான் உண்மையான லவ்வா? அந்த வார்த்தையெல்லாம் சொல்றதுக்கே ஒனக்கு அருகத இல்ல.. பேசாமா ஓடிப்போயிரு”

“என்ன சகோதரர் இப்படி பேசுற?”

“இது தான்டா நெஜம். இங்க யாருக்கும் யாரும் நிரந்தரமா தேவை இல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இல்லேன்னா ஒரு குறிப்பிட்ட காரியம் முடியுற வரைக்கும் தான் தேவ. பெத்த அம்மா அப்பான்னாலும் அப்படித்தான். அந்த காரியம் முடிஞ்சதும், இல்லேன்னா முடியாதுன்னு தெரிஞ்சதும் யார் மூலமா அது முடியுமோ அவங்க கிட்ட போயிட வேண்டியது தான். இது ஒரு materialistic world அண்ணே. பாசத்துக்கெல்லாம் மதிப்பே கிடையாது.” - அவன் அண்ணே என்று சொல்லி பேசும் போதே தெரிந்தது அக்கறையாக seriousஆக பேசுகிறான் என்று. “நீயும் பாசத்துக்கும் லவ்வுக்கும் நெஜமாவே மதிப்பு கொடுத்திருந்தா, மொத ரெண்டு லவ் ஃபெயிலியர் ஆனாலும், அட்லீஸ்ட் உன்னோட மூனாவது லவ்வர எப்படியாவது கஷ்டப்பட்டாவது கல்யாணம் பண்ணிருப்ப, ஒரு வேள முடியலேன்னா ‘காதலே வேணாம்’னு முடிவு பண்ணிட்டு எல்லாத்தையும் அடக்கிக்கிட்டு வீட்ல பொண்ணு பாக்குற வரைக்கும் அமைதியா இருந்திருப்ப. ஒனக்கு பொண்ணுங்க கிட்ட பேசுறது ஒரு சொகமா, பெருமையா இருந்தது. அதனால ஒருத்தி போனா இன்னொருத்தின்னு நீ இருந்த. சரி விடு இனிமேல் சொல்லி ஒரு பிரேயோஜனமும் இல்ல. பேசாம கம்முனு இருந்தின்னா இன்னும் ஒரு வருசத்துல ஒனக்கு வீட்ல பாத்து............”

அவன் சொல்வதை அதற்கு மேல் கேட்கும் சூழ்நிலையில் நான் இல்லை.. ஏன்னா என் 11வது காதலி கிட்டத்தட்ட ரெண்டு மாதம் கழித்து என்னை அழைக்கிறாள். அதனால் சகோதரரை இப்போதைக்கு தொடர்பு எல்லைக்கு வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டேன். “என் லைஃப்ல எத்தனையோ பேர் வந்து போயிட்டாங்க, ஆனா உன் அளவுக்கு யாரும் பொறுமையா என் மேல கேர் எடுத்து அன்பா கவனிச்சுக்கல ரேவதி”

”ரேவதியா? அது யாரு?”

”அது அது வந்து இங்க பக்கத்துல.. ப்ரண்ட் டிவில வர நடிகைய பாத்து பேரு என்னன்னு கேட்டான் அத சொன்னேன்டா கண்ணு” - அய்யோ என் 11வது காதலி பேர் மறந்து போச்சே.. நான் என்ன பண்ண? சரி அடுத்த சண்டை வர வரைக்கும் சமாளிப்போம்.. “அப்புறம் செல்லம், ஏன்டா இத்தன நாளா என் கூட பேசல? நான் எப்படி ஏங்கிப்போயிட்டேன் தெரியுமா?..........................”

என் தம்பிய யாராவது பாத்திங்கன்னா தயவு செஞ்சி என்னப்பத்தி மட்டும் கேக்காதிங்க.. அப்புறம் பச்ச பச்சையா வசவு வாங்கினா நான் பொறுப்பு இல்ல..

அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?

$
0
0
இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அனுகியிருக்கிறேன். பார்க்கலாம்..

சுமார் எட்டு வருடங்களுக்கு முன், அதாவது அஜித்தின் ஜனா என்கிற படம் ரிலீசான மே 1, 2004, விஜய்யின் கில்லி ரிலீசான ஏப்ரல்17, 2004ம் நாளில் இருந்து ஆரம்பிப்போம். வில்லன் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியா கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சனேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். வில்லன் படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் வசீகரா, பகவதி என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது திருமலை வெற்றி. திருமலை ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ஆஞ்சநேயா.. ‘வில்லன்’ பட வெற்றியை அஜித்துக்கு தக்க வைத்துக்கொள்ளத்தெரியவில்லை. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.

பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. அதே வருடத்தில் விஜய்க்கு உதயா என்றொரு ஃப்ளாப் வந்தாலும், கில்லியின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 3 படங்களும் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) வெற்றி பெற்றன. சச்சின் சுமாரான வெற்றி தான். ஏன்னா அது சந்திரமுகியோடு போட்டி போட்டது.  அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட ஆட்டம் காண ஆரம்பித்தது.

2006ல் இருவரும் தைப்பொங்களில் பரமசிவன், ஆதி என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ஆதியை விட பரமசிவன் நன்றாக ஓடியது. 2006ன் ஆதியே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த திருப்பதி ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார்.

ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.

இந்த சூழலில் தான் சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்களுக்கு வந்த வேல் என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது.

அஜித் வருடத்தின் முடிவில் பில்லா என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ஆனால் விஜய் அழகிய தமிழ் மகன் என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார். 

2008, 2009, 2010ல் வரிசையாக குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய்க்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை சுறா மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல பில்லா வெற்றியை தக்க வைக்க முடியாமல் ஏகன், அசல் என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்.

இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும் அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு,  குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமா அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார். 


ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழ் உடைய ஆரமபித்தது. அவரே அதற்கு காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”,  என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2011 தீபாவளிக்கு நடித்த ஏழாம் அறிவு எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், காவலன் என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், வேலாயுதம் மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு சென்றது.

கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த சிறுத்தை அனைவரையும் கவர்ந்து அவரையும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது. 

கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று நியூஸ் வாசிக்கும் பெண் “இன்றைய முக்கியச்செய்திகள்” என்று சொல்வதை போல் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் சிறுத்தை நடித்திருந்தார். ஆனால் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் மங்காத்தா, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது.

விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வந்தன. மங்காத்தாவில் அஜித்தின் இமேஜ் பார்க்காத நடிப்பும், அவரின் இயல்பான உண்மையான சுபாவமும் பலருக்கும் பிடித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை பேச ஆரம்பித்தார்கள். அதை ஒவ்வொருவரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. இது அவருக்கும் பொது மக்களிடம் இருந்து கூட மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. 

ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் திமிராக இருக்கிறார் என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. பில்லா 2 ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள். அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை. அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது.. அஜித் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை. ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்களே, இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது. அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். நீ எப்பவும் டாப் தான் ‘தல’....


நான் ஈ - ராஜமௌலி சொல்லி அடித்த கில்லி..

$
0
0
 ஒரு இயக்குனர், தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் தன் பெயர் கொண்ட முத்திரையை குத்தி தைரியமாக வெளியிடும் கெத்து யாருக்காவது இருக்கிறதா? தெலுங்கில் ஒருவர் இருக்கிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி.. 2001ல் இருந்து இதுவரை 9 படங்கள் இயக்கியுள்ளர். ஒரு படம் கூட சோடை போனதில்லை. நமக்கு தெரிந்த மாதிரி சொல்ல வேண்டுமானால், சிபிராஜ் அறிமுகமான ஸ்டூடண்ட் நம்பர்1, விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, கார்த்தி கர்ஜித்த சிறுத்தை, ராமநாராயணன் வெளியிட்ட மாவீரன் போன்றவை இவர் தெலுங்கில் இயக்கிய படங்கள். ஜூனியர் என்.டி.ஆருக்கு இருக்கும் மாஸும் இமேஜும் இவர் படங்களால் தான் வந்தது. அனைத்து படங்களும் பால்கனியில் அமைதியாக படம் பார்ப்பவனில் இருந்து 10ரூ தரை டிக்கெட்டில் விசில் அடிப்பவன் வரை திருப்திபடுத்தும் விதமாக கொடுப்பது தான் இவர் ஸ்பெஷல். இன்று இவர் இயக்கத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வந்திருக்கும் நான் ஈ படம் பார்த்தேன். விக்ரமார்குடு (தெலுங்கு சிறுத்தை) பார்த்த போது என்னை கவர்ந்த இயக்குனர்களுள் ஒருவராக இருந்த ராஜமௌலி இன்று முதல் என் மனதில் தனி சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார்.

தின்பண்டங்கள் மீது ஈ அமர்ந்திருந்தால் நீங்கள் அதை விரட்டக்கூட இனி யோசிப்பீர்கள். “அய்யோ பாவம்” விட்ரலாம் என்று உங்கள் பெண் தோழி சொல்லுவார். வெறும் ஈயாக மட்டும் நீங்கள் அதை இனி பார்க்க மாட்டீர்கள் “நான் ஈ” பார்த்துவிட்டால். சாதாரண முக்கோண காதல் கதை தான். பணக்கார வில்லன், அப்பாவி ஹீரோ, அழகான ஹீரோயின். அதில் மறுபிறவி, ஈ என்று தனது முத்திரையை இன்னும் அழுத்தமான மையினால் திரையில் பதித்திருக்கிறார் ராஜமௌலி.

 



காதலனிடம் தன் காதலை காதலி வெளிப்படுத்தும் போது அவன் வில்லனால் கொல்லப்படுகிறான். செத்தவன் ’ஈ’யாக பிறந்து காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றி, வில்லனைக் கொன்று, நம்மையும் சந்தோசப்பட வைக்கிறான் கடைசி ஃப்ரேம் வரை. படத்தின் பல காட்சிகள் இப்படியெல்லாம் நடக்குமா என்று கூட உங்களை யோசிக்க விடாமல், “அய்யோ நானி எப்படியாவது தப்பிச்சிரு, எப்படியாவது வில்ல கொன்னுரு” என்று உங்களை அறியாமல் நீங்களே வேண்டுவீர்கள்.

இண்டெர்வெல் ஆக்ஸீடண்ட் காட்சி ஹீரோயிசத்தின் உச்சம் என்றால், அதற்கு அடுத்து “நான் தான் நானி, மறுபடியும் பொறந்திருக்கேன்” என்று ஈ ஹீரோயினிடம் சொல்லும் காட்சியில், எந்தக் கொம்பனுக்கும் புல்லரிக்கும். ஈ உடற்பயிற்சி செய்வது, மாஸ்க் மாட்டிக்கொள்வது, விஷமருந்து தாக்கி உயிர் பிழைப்பது என்று செண்டிமெண்ட்டும் ஃபேண்டசியும் சரி விகிதத்தில் கலந்து ஜெட் வேகத்தில் 101% கமர்ஷியல் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நானி (படம் பேரு இல்ல, ஹீரோ பேரு) முதல் கொஞ்ச நிமிடங்களே வந்தாலும், ‘மௌன ராகம்’ கார்த்திக் மாதிரி மனதில் ஒட்டிக்கொள்கிறார். சமந்தாவிற்கு டப்பிங் பேசிய பெண் மெனகெட்ட அளவுக்கு கூட சமந்தா நடிப்பில் மெனக்கெடவில்லை. அழகு மட்டும் போதாது அம்மணி. சுதீப் - கதையின் நாயகன் இவர் தான். கொடூரமான வில்லனாக, ஈக்கு பயந்து ஒவ்வொரு விசயத்திலும் சொதப்புவது ஆகட்டும், கடைசியில் சமந்தாவிடம் குண்டூசியை வைத்துக்கொண்டு மிரட்டுவது ஆகட்டும், ஆள் மிரட்டி எடுத்துவிட்டார். அடுத்து அந்த ஈ.. யாருப்பா ஒரு சின்ன இத்துனூண்டு ஈக்கு இவ்வளவு எக்ஸ்பிரஷன்கள் கொடுத்தது? கொஞ்சம் அசந்தாலும் கார்டூன் போலவோ, விட்லாச்சார்யா படம் போலவோ ஆகிவிடக்கூடிய கதையில், இந்த ஈ நம்மை ஒரு ஆக்‌ஷன் ஹீரோ போல் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது.

இரண்டு காட்சிகள் மட்டுமே வந்தாலும் சந்தானம் கிச்சி கிச்சி மூட்டுகிறார். சாம்பிளுக்கு,
திருட வந்த இடத்தில் அவர் அசிஸ்டண்ட் ஃபோன் அடித்து, “இந்த தெருவுல 4ம் நம்பர் வீடு பூட்டியிருக்கு அங்க ஆளே இல்ல. அங்க திருடவா?”
“மூதேவி, அது என் வீடுடா”. படம் முடிந்து விட்டது என்று யாரும் கிளம்பிவிடாதீர்கள். அதற்கு பின் அலப்பறையான சந்தானம் காமெடியும், ஈயின் ”ஜிந்தா ஜிந்தா”, “எல்ல புகழும் ஒருவன் ஒருவனுக்கே” டான்ஸும் கண்டிப்பா பாருங்கள்.

மூன்று பாடல்கள். மூன்றுமே அருமை. பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கிறது. கே.கே. செந்தில்குமாரும் (கேமரா), கீரவானியும் (இசை) ராஜமௌலிக்கு மிகுந்த பக்க பலமாக இருந்திருக்கிறார்கள். ’என்னப்பா இது மறுஜென்மம், ஈ, அது இதுன்னு? லாஜிக்கே இருக்காது போலயே!’ என்றும்,’ஒரு ஈயால் மனிதனை பலி வாங்க முடியுமா?’ என்றும் கேள்வி எழுகிறவர்கள் தியேட்டருக்கு தைரியமாக வரலாம். முதல் அரை மணி நேரம் முடிந்ததும் நீங்களே உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வீர்கள் “கண்டிப்பா அந்த ஈ வில்லன கொல்லணும்” என்று. அதான் ராஜமௌலி.. வாங்க ரெண்டேகால் மணி நேரம் கவலை மறந்து என்ஜாய் பண்ணலாம். இனிமேல் வெட்டியா இருக்கும் போது எவனாவது நம்மள, “என்ன ஈ ஓட்டுறியா?”னு கேட்டா, சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க, “இல்ல, என் ஃப்ரண்ட் கூட விளையாடிக்கிட்டு இருக்கேன்”னு..

2G ஸ்பெக்ட்ரம் - ஒரு சாதாரண குடிமகனாக என் பார்வையில்..

$
0
0
எப்போ எந்த பத்திரிகை, செய்தித்தாள், டி.வி திருப்பினாலும் ரெண்டு, மூனு வருசமா ஒரு செய்தி தவறாமல் எதாவது ஒரு பக்கத்தில் இடம் பெற்றுவிடும்.. அது தான் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்.. 1.76லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்புன்னு ஒருத்தர் கத்துறாரு.. நாட்டின் மேல் மட்ட தலைமையில் இருந்து அமைச்சரின் நண்பர்கள் வரை 30,000கோடி ஊழல் செய்யப்பட்டதுன்னு டிவியில குதிக்குறாங்க.. இது ஒரு சாதாரண, அடுத்த நாள் சோறுக்கு இன்னைக்கு நாய் மாதிரி வேல செய்யுற ஒரு குடிமகனுக்கு எந்த அளவுக்கு முக்கியம், அவன் வாழ்க்கையில எந்த அளவுக்கு பாதிப்பை கொண்டு வந்திருக்குன்னு சும்மா எனக்கு தெரிஞ்ச வடிவத்துல நான் சொல்றேன்.. மாற்றுக்கருத்துக்கள் தாராளமாக வரவேற்கப்ப்டுகின்றன..


”அலைக்கற்றைகளை குறைந்த விலைக்கு தங்களுக்குப் பிடித்தமான கம்பெனிகளுக்கு விற்றுவிட்டார்கள். அன்றைய மார்க்கெட் விலைக்கு விற்கவில்லை. அதனால் அரசுக்கு 1.76லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி குறைந்த விலைக்கு விற்றதற்கு அவர்கள் 30000கோடி ரூபாய் வரை பணம் லஞ்சமாக வாங்கியிருக்கலாம்” என்பது தான் குற்றச்சாட்டு..

சரி, அவர்கள் சொல்வது போலவே ஒரு வேளை ராசா, அன்றைய மார்க்கெட் விலைக்கு விற்று, நமது அரசாங்கத்திற்கு 1.76லட்சம் கோடி வருவாயைப் பெற்றுத்தந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அந்தப்பணம் ஊழலின் காற்றே படாமல் மக்கள் சேவைகளுக்காக செலவிடப்பட்டிருக்குமா? அந்தப் பணத்தில் இன்னொரு காமென்வெல்த் விளையாட்டு, இன்னொரு ஆதர்ஷ் கட்டிடம் கட்ட ஆரம்பித்திருப்பார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் ரோடும் மேம்பாலங்களும் கட்டுவார்கள். கட்டிவிட்டு சும்மா இருப்பார்களா? மக்களுக்காக கட்டிய ரோடுக்கு மக்களிடமே காசு வாங்குவார்கள். அல்ரெடி ரோடு டாக்ஸ், இன்கம் டாக்ஸ்னு கட்டிட்டு, இந்த ரோட்டுல போறதுக்கு ஒரு ஸ்பெஷல் டாக்ஸ் வேற கட்டணும் நாம.. இல்லேன்னா ம.பி., உ.பி. போன்ற வட மாநில முன்னேற்றத்துக்கு ‘ஒதுக்குவார்கள்’.. அது என்னவென்றே தெரியவில்லை, நேரு காலத்தில் இருந்து இந்த உ.பி, ம.பி, பிகார் போன்ற மாநிலங்களுக்குத் தான் நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதி எல்லாம் எங்கே ஒதுங்குகிறது என்றே தெரியவில்லை.. அதுவும் இல்லையென்றால் ராணுவத்துக்கு அந்தப்பணம் போகும். அங்கே மட்டும் என்ன ஒழுங்காகவா பயன்படும்? சின்னப்புள்ள மாதிரி “மிஸ் மிஸ் அவன் வயச நோட்டுல தப்பா எழுதிருக்கான் மிஸ்”னு சண்ட போட்டுக்கிட்டு இருப்பாய்ங்க.. பக்கத்து நாடெல்லாம் ராணுவத்த எப்பவுமே தயார் நிலையில வச்சிருந்தா, நம்ம பசங்க ஒவ்வொரு பட்ஜெட்டுலயும் இவ்வளவு பணம் ஒதுக்கியும், இன்னும் ’துப்பாக்கிக்கு குண்டு இல்ல, டைம் பாம்புக்கு எலெக்ட்ரிக் வாட்ச் கெடைக்கல’ன்னு அடுத்தவன் மேல பழி போட்டே காலத்த ஓட்டிக்கிட்டு இருப்பாய்ங்க.

ஆனால் நாட்டின் வருமானத்தை குறைத்த ராசாவின் செயல் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகத்தான் எனக்குப்படுகிறது. தெரிந்த கம்பெனியோ, தெரியாத கம்பெனியோ, லஞ்சம் வாங்கிவிட்டு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார்களோ இல்லையோ, அது பிரச்சனை இல்லை. அவர்கள் அப்படி செய்ததால் நிறைய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் அடி எடுத்துவைத்தன.. ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல், வோடஃபோன் போன்ற ஜாம்பவான்கள் 'கர்டெல்' (cartel) என்னும் முறைப்படி தங்களுக்குள் கூடிப்பேசி மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டிருந்தது நிற்க ஆரம்பித்தது. பல கம்பெனிகள் உள்ளே நுழைந்ததால் போட்டியின் காரணமாக மக்களால் குறைந்த விலைக்கு தொலைத்தொடர்பு சேவையைப்பெற முடிந்தது. 4,5 வருடங்களுக்கு முன் ஒரு செகண்டுக்கு ஒரு பைசா, ஏர்டெல் to ஏர்டெல் 10பைசா, டோகோமோ to any mobile 10hrs ஃப்ரீ போன்ற ஸ்கீம்களை நாம் எதிர்பார்த்திருக்க முடியுமா?

செல்ஃபோன் என்னும் ஆடம்பரப்பொருள் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நம் பொருளாதார மேதை, புது பொருளாதார கொள்கை கொடுத்து கார், பைக், ஏ.சி, கேஸ் போன்ற பல ஆடம்பரப்பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் லிஸ்டில் கொண்டுவரும்படி கொள்கை அமைத்தார். முட்டாள் மக்களும் அனைத்தையும் வாங்கினர். ஆனால் மெதுவாக பெட்ரோல், கேஸ் போன்றவையின் விலையைக்கூட்டி, முதலாளிகளுக்கு சேவகம் செய்து மக்களின் வயிற்றில் அடித்தனர். ஏன்? பெட்ரோல் கேஸ் நிறுவனங்கள் இங்கே மிகவும் குறைவு. இருக்கும் முதலாளிகள் புதிதாக யாரையும் உள்ளே வரவிடுவதில்லை. அதனால் இஷ்டத்துக்கு கொள்ளை லாபம் வைக்கலாம். போதா குறைக்கு அரசும் வரி போட்டு நம் கழுத்தை நெறிக்கும். இவர்கள் சொல்வது போல், அதிக விலைக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கியிருந்தால், இன்று தொலைத்தொடர்புத் துறையில் இத்தனை நிறுவனங்கள் வந்திருக்காது. நமக்கும் விலை மலிவாக செல்ஃபோன் சேவை கிடைத்திருக்காது. 

நம் அரசியல்வாதிகளின் ஆசை, நாட்டு கஜானாவில் பணம் இருக்க வேண்டும். கஜானாவை மக்களிடம் கொள்ளையடித்தாவது நிரப்ப வேண்டும். சேவை நிறுவங்களின் மூலம் கூட லாபம் பார்க்க நினைக்கும் அரசு தான் நம்மளுடையது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் நல்வாழ்வை முதல் குறிக்கோளாக கொண்டிருப்பதே நல்ல அரசாங்கமாகும். ஆனால் இங்கே கிட்டத்தட்ட அரசும் ஒரு முதலாளியைப்போல, வியாபாரியைப்போலத் தான் நடந்து கொள்கிறது 2G விஷயத்தில். மக்கள் குறைவான விலையில் நல்ல சேவையைப்பெறுகின்றனரே என்கிற சந்தோசம் இல்லாமல், அரசுக்கு வருமானம் போய் விட்டதே என்கிற கவலை தான் அவர்களுக்கு. அரசுக்கு வருமானம் வந்தால் மக்கள் தான் அதனால் பயன்படப்போகிறார்கள். இப்போது தான் மக்களே நேரடியாக பயன்பெற்றுவிட்டார்களே, இன்னும் ஏன் 2G, 2G என்று கூப்பாடு போட வேண்டும்?

அடுத்த குற்றச்சாட்டு, கிட்டத்தட்ட 30000கோடி ரூபாய் லஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன என்று. இந்தியா போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையில் லஞ்சத்துக்கு என்று சில ரூபாய்களை தினமும் ஒதுக்கி வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில், லஞ்சத்தைப் பெரிய குற்றம் போல் பேசுவது லூசுத்தனமாக உள்ளது. லைசென்ஸ் எடுக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டும், ஹெல்மெட் போட்டு சாலையில் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பு இல்லாமலும், கையில் 100ரூபாய் இருந்தால் எந்த சட்டத்தையும் விதியையும் மீறலாம் என்கிற எண்ணத்தில் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் உரம் போட்டு வளர்க்கும் மக்கள் தான் தினமும் சாலையில் சென்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. மக்களே லஞ்சத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் போது, அரசியல்வாதி ஊழல் செய்வதை எல்லாம் இங்கு யாரும் இப்போது பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. ஒரு சின்ன பொறாமை வேண்டுமானால் இருக்கலாம், “இவன் மொகறகட்டைக்கும் இத்தன கோடி காசா?” என்று. மத்தபடி மக்களுக்கு நாட்டின் மீது அக்கரையோ, ஊழல் நடந்துவிட்டதே என்கிற கொந்தளிப்போ கிடையாது. கறை படிந்த மக்கள் வாழும் தேசத்தில் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகப்பேசுவதே மகா முட்டாள் தனம்..

மிக எளிமையாக சொல்லவேண்டுமானால், ராசா அன்றைய அதிகமான மார்க்கெட் விலையிலேயே, விற்றிருந்தால், கண்டிப்பாக இந்நேரம், உங்களால் இரவு முழுக்க உங்கள் காதலியிடமும், ஊரை விட்டு பிரிந்து வந்து வீட்டு ஞாபகத்தில் அம்மாவிடமும், ஆடி மாச பிரிவில் வாடி ஃபோனே கதி என்று புது மனைவியிடமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க முடியாது.
அதே போல அந்த 1.76லட்சம் கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைத்திருந்தாலும் இந்த அரசு நம் நலனுக்கும் எதுவும் செய்திருக்காது. அதனால் மக்களே நம் கையில் idea இல்லேன்னா MTS, அதுவும் இல்லேன்னா uninor, இதுவும் பிடிக்கலேன்னா videocon என்று பல ஸ்கீம்களின் பல ஃபோன்கள் இருக்கின்றன.. கம்மியான விலையில் நாம் செல்ஃபோன் சேவைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த 1.76லட்சம் கோடி வருமான இழப்பு நம் முதலாளித்துவ அரசுக்குத்தான். மக்களாகிய நமக்கு இதனால் ஒரு குறையும் வந்துவிடவில்லை.

பில்லா 2 விமர்சனம் - தமிழின் Die hard, Mission Impossible

$
0
0
கிட்டத்தட்ட மொத்த தமிழ்நாடுமே ட்ரைலர் பார்த்துவிட்டு எதிர் பார்த்துக்கொண்டிருந்த படம் எந்திரனுக்குப் பிறகு அநேகமாக பில்லா2 ஆகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ட்ரைலர் மாஸாக இருந்தது. படம் சுமார் தான் என்று பலரும், சூப்பர், கேவலம் என்று சிலரும் காலையில் இருந்தே சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி கலந்துபட்ட விமர்சங்களின் தாக்கத்தோடும் ஒரு வித பயத்தோடும் தான் தியேட்டருக்கு சென்றேன். ‘தல’ நிரூபித்து விட்டார் - ரஜினிக்கு பிறகு anti-hero என்றால் அது தமிழ் சினிமாவில் தன்னைத்தவிர வேறு யாரும் இல்லையென்று.


ஒரு சாதாரண பையன், ரவுடியாக முறுக்கேறி, கேங்க்ஸ்டராக மாறி, டானாக உருவாவதே படம். இதில் நீங்கள் எதிர்பார்ப்பது போல் காமெடி, குத்துப்பாடல், மரத்தடி டூயட் எல்லாம் இருக்காது. Mission Impossible, Die Hard, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பியர்ஸ் ப்ராஸ்னனோ, ப்ரூஸ் வில்லிஸோ சந்தானத்தோடு காமெடி செய்வது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அது போல் இருக்கும் இது போன்ற கதையில் காமெடி, நடனம் எல்லாம் சேர்ப்பது. எல்லா பாத்திரங்களுமே கதைக்கு மிகவும் தேவையான சரியான பாத்திரங்கள். லாரி ஓட்ட வாய்ப்பு கொடுக்கும் பாயில் இருந்து, சைவ ஹோட்டல் அண்ணாச்சி, மொழி மாற்று கூட்டாளி என்று எல்லாமே கதைக்கு தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்கின்ற பாத்திரங்கள்.

”நாம வாழணும்னா யார வேணும்னாலும் எத்தன பேரனாலும் கொல்லலாம்”னு பில்லா முதல் பாகத்தில் சொல்லும் அஜித், இதில் அதை செயலாக செய்திருக்கிறார். ஒரு டானாக உருவாக அவர் கடந்து வரும் பாதைகள் தான் பில்லா 2. ஹீரோ என்றாலே பேட்டை வில்லனை அடித்து துவைத்து ஒரு தத்துவப் பாடலோடு என்ட்ரியானால் தானே ரசிகர்களுக்கு பிடிக்கும்? ஆனால், அடியாட்கள் முன் அடிவாங்கி மண்டியிட்டு “டேய் என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்....” என்கிற அந்த மாஸ் டயலாக்கை மிகவும் அசாதாரண சூழலில், வெறியோடு பேசி அஜித் என்ட்ரியாகும் அந்த காட்சி நிஜமாகவே மாஸ் தான். ப்ளாஸ்பேக்காக கதை செல்கிறது.

ஒவ்வொருவரும் செய்ய யோசித்து பின்வாங்கி விலகும் செயல்களில் தானாக முன்வந்து அஜித் இறங்குகிறார். கடத்தல் லாரியை உரியவரிடம் சேர்த்து, அவர் மூலம் வரும் பழக்கத்தில் கொஞ்சம் பெரிய இடம், அந்தப் பழக்கத்தில் இன்னும் பெரிய இடம், அந்தப் பழக்கத்தில் ஆயுத பேர வர்த்தகத்தின் தலைவனின் பழக்கம் என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் அஜித் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது மிகவும் கோர்வையாக, விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள், வசனமும், யுவனின் பின்னணி இசையும் தான். மிகவும் கூர்மையான, அஜித் என்னும் பிம்பத்திற்கும் பில்லா என்னும் பாத்திரத்திற்கும் கெத்து ஏற்றும் வசனங்கள். இன்டர்வலுக்கு முன் அவர் பேசும் வசனமும் அப்போது வரும் இசையும் மாஸ் & கிளாஸ். இன்டர்வலுக்கு பிறகு வரும் சண்டைக்காட்சியும் தரம். சண்டைக்காட்சிகளையும் சும்மா சொல்லக்கூடாது, ஹாலிவுட்டுக்கு இணையான காட்சியமைப்புகள். அந்த கோர்ட்டு சீன் எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் என்றாலும், அதையும் ரசிக்கும் படி காட்சி அமைப்புகளும் எடிட்டிங்கும், இசையும், நடிப்பும் அமைந்துள்ளன. கடைசி அரை மணி நேரம், ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, வசனங்கள், முடிவில் அந்த பில்லா பின்னணி இசையோடு அஜித் ப்ளைட்டில் ஏறுவது என்று ரசிகர்களுக்கு தீனி போடும் விசயங்கள் படம் முழுவதும் உண்டு.



இரண்டு முக்கிய வில்லன்கள். இருவருமே நல்ல நடிப்பு. ஒருவருக்கு சரியாக வசன உச்சரிப்பு வராததால் தான் இன்னொருவரை புரியாத பாஷை பேச வைத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு வில்லனின் பேச்சு வில்லத்தனம் என்றால், இன்னொருவனின் செயல் வில்லத்தனம். ஹீரோயினும் இருவர். பார்வதி ஓமனக்குட்டன் மட்டும் ஓரளவு நடிக்க முயற்சிக்கிறார். நடிப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகியும் விட்டார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். அவரது மூக்கும் பல்லும் என்னை என்னமோ செய்கிறது. ப்ரூனா அப்துல்லா கல்யாணம் ஆகிவிட்டதாக கேள்வி, அதனால் அவரை நான் சரியாகக் கூட ‘கவனிக்க’வில்லை. 

ஒரு முக்கியமான ஆளைப்பற்றி இன்னும் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் போல இருக்கிறது. ஆம், நம்ம ’தல’ அஜித் பற்றி தான். ஆரம்ப காட்சியில் “மயிர புடிங்கிட்டு இருந்தேன்” என்று சொல்வதில் ஆரம்பிக்கும், அசால்ட்டான எதற்கும் வலைந்து கொடுக்காத, தைரியமான அந்தப் பார்வை படம் முடிந்த பின்னும் உங்கள் மனதுக்குள் இருக்கும். சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களின் கூட தல ஜொலிக்கிறார். இளவரசு கொடுக்கும் ரூபாய் கெட்டை கையில் விரித்து, ஒரு சின்ன பார்வையோடு தலை அசைப்பதில் கூட பெர்ஃபெக்‌ஷன் தெரிகிறது. பெரும்பாலும் வெறும் பார்வை தான். அதில் கோவம், துக்கம், வெறுப்பு, வெறி, ஆத்திரம், ஏமாற்றம் என்று அனைத்தையும் காட்டியிருக்கிறார். இதற்கு முன் இவ்வளவு எக்ஸ்பிரஷ்ன்கள் நான் ‘தல’யின் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை.

இயக்குனர் சக்ரி கதை நடக்கும் கால சூழலை அழகாக கொண்டுவந்திருக்கிறார். இப்போது வரும் பீரியட் ஃப்லிம்களில் எல்லாம் கதை நடக்கும் வருடத்தையோ காலத்தையோ காட்ட காலெண்டரை ஒரு முறையாவது காட்டிவிடுவார்கள், அல்லது அந்தக்கால சினிமா பாடல் டீக்கடையிலோ, ரேடியோவிலோ ஓடுவது போல் காட்டுவார்கள். ஆனால், 1990களின் ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கிறது என்பதை காட்சி அமைப்புகளும் செட்களுமே நமக்கு அழகாக உணர்த்துகின்றன.

”மத்தவங்களோட பயம், நமக்கு பலம்” - இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு மிக அழகான, விறுவிறுப்பான, மாஸான ஒரு மசாலாப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். ‘தல’ ரசிகர்களுக்கு சரியான தீனி தான். ஒரு தல ரசிகனாக நான் மிகவும் ரசித்துப் பார்த்த படங்களுள் இதுவே முதல் இடம் என்று சொல்லுவேன். எனக்கு பெர்சனலாக மங்காத்தா, பில்லா முதல் பாகத்தை விட இது பிடித்திருந்தது..

நான் முதலில் சொன்னது போல,ப்ரூஸ் வில்லிஸும், டாம் க்ரூஸும், ஜேம்ஸ் பாண்டும் ஹாலிவுட்டில் நடித்தால் மட்டும் பார்ப்போம், புகழ்ந்து பேசுவோம், தமிழில் எவனாவது நடித்தால், அதுவும் அஜித் மாதிரி ஒருவர் நடித்தால் பார்க்க மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் பில்லா 2 பிடிக்காது.. உண்மையில் இது ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்‌ஷன் படம்.. தல you are back to form.. பதினோரு வருடங்களாக ‘தல’ தொடர்ந்து இரண்டு வெற்றிகள் கொடுத்ததில்லை என்கிறார்கள். அந்தக்கவலை இப்போது தீர்ந்தது. இந்த பதினொன்றாவது வருடத்தில் தலயின் இரண்டாவது வெற்றி. பெருமையுடன் சொல்கிறேன் I Love You Thala..

அட்டக்கத்தி - நவீன காதலின் டிக்ஸ்னரி..

$
0
0
காதல் தோல்வியின் பரிணாம வளர்ச்சி எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை ”அட்டக்கத்தி” படத்தில் மிகவும் நக்கலாக அணுகியிருக்கிறார்கள். உயிரை விடும் நாயகன், தாடி வளர்ப்பவன், தண்ணி அடிப்பவன், சிகரெட் குடித்து சூடு போட்டுக்கொள்பவன், காதலியை கொன்று தானும் செத்துவிடும் நாயகர்களை பார்த்திருக்கும் நமக்கு “இன்னைக்கு தேதில காதலும் கிடையாது, தோல்வியும் கிடையாது” என்று மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் படிக்கும் காலத்தில் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து (பல பெண்களாகவும் இருக்கலாம்) மனதுக்குள் ஒரு மாதிரி குறு குறு என்று இருப்பதை காதல் என நினைத்து அவள் பின் அலைந்து, அவள் உங்களை கண்டுகொள்ளாமலே அலையவைத்து, நீங்களும் மிகவும் சோகமா இருக்க ட்ரை பண்ணி, அது ஒரு லவ்வுன்னு அதுக்கு ஃபீல் ஆகி,  பாஸ் பண்ணி டிகிரி வாங்குவதை விட ‘லவ் ஃபெயிலியர்’ என்னும் பட்டம் கிடைப்பதை பெருமையாக நினைத்துக்கொண்டிருந்த காலம் ஒன்று இருக்கும்ல? அதை அப்படியே உங்ககிட்ட உங்க ஊர் தகுதிக்கேற்ப 40 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை வாங்கிட்டு ஸ்க்ரீன்ல படம் போட்டு காட்டுறது தான் “அட்டக்கத்தி”.. படத்தின் இடைவேளை வரை அந்த தீனா என்னும் கதாநாயகனின் பாத்திரத்தில் என்னையும் எனது பல பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களையும் பார்த்தேன்..



கதைன்னு ஒன்னும் பெருசா இல்ல.. ஹீரோ லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான், ஃபீல் பண்ணுறான்.. திரும்பவும் லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான் ஃபீல் பண்ணுறான்.. கடைசி ஒரு சீன் மட்டும் தான் அவன் லவ் பண்ணல.. ஆனா அதுலயும் பல்ப் வாங்குறான்.. இது தான் மொத்த படமும்.. கேக்க ஒரு மாதிரி இருந்தாலும், எடுத்திருக்கும் விதம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.. தினகரன் @ தீனா @ அட்டக்கத்தி @ ரூட் தல யாக நடித்திருக்கும் தினேஷ் அபாரம்.. அந்த உடல்மொழி, ஒவ்வொரு முறை பல்ப் வாங்கும் போதும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாமே சூப்பர்.. அவரின் உடல்மொழியில் ஒன்றையாவது படிக்கும் காலத்தில் நாம் செய்திருப்போம்.. கராத்தே மாஸ்டரிடம் ஊமைக்குத்து வாங்கி புலம்பிக்கொண்டே வரும் போது, நண்பர்கள் “டேய் அவ வராடா” என்றதும் ‘டக்’கென்று முகத்தை துடைத்து ஈஈ என்று இளித்தவாறு திரும்பும் ஒரு சீன் போதும் இவரின் நடிப்பையும் பாத்திரப்படைப்பையும் சொல்ல..

கதாநாயகி பூர்ணிமாவாக நந்திதா.. பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் ஈரம் படத்தில் நடித்த சிந்துமேனன் போல் இருக்கிறார்.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். அட்டக்கத்தி அவரிடம் காதலை சொல்ல பின் தொடரும் போது “அண்ணா” என்பதும், கல்லூரியில் வாலண்டியராக பழகுவதும், கடைசியில் வழக்கம் போல பல்பு கொடுப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டாம் பாதியில் இவர் எப்படியும் அட்டக்கத்தியை லவ் பண்ண மாட்டார் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால் அந்த கடைசி பேருந்து காட்சியில் அப்படி ஒன்றும் சுவாரசியம் இல்லை.. இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்..

படத்தின் பல இடங்களில் கானா பாடல்களை சேர்த்திருப்பது புதுமையாக இருக்கிறது.. ‘ஒரு தலை ராகம்’ பார்த்து விட்டு பேருந்தில் ஹீரோ சலம்புவது கானாவை விட டாப்டக்கர்.. சென்னை பக்கம் கிராமமும் இருக்கும் என்பது இந்தப் படம் பார்க்கும் போது தான் எனக்கு தெரிகிறது. கிராம மக்கள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாக, மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாத கோவமும் நக்கலும் நிறைந்த நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.



அட்டக்கத்தியின் அப்பா & அம்மா பாத்திரங்களும் நம்மைக் கவர்கின்றன.. “நைனா உன் ஜட்டினு தெரியாம கரித்துணிக்கு எடுத்துட்டேன், அப்பா ஜட்டிய வாங்கி போட்டுக்கோ” என்று சொல்லும் தாயும், “டேய் நாங்க வீரப்பரம்பரடா” என்று தண்ணி அடித்துவிட்டு தினமும் யாருக்கோ சவால் விடும் அப்பாவும் கொஞ்சம் புதுசு தான்..

அன்றாடம் நண்பர்களுடன் நாம் பேசுவதை வசனமாகவும், தேர்ந்த ஒளிப்பதிவும், நல்ல பின்னணி இசையும் படத்தை இன்னும் கொஞ்சம் தூக்கி நிறுத்துகின்றன.. மொத்தத்தில் அட்டக்கத்தி, இன்றைய இளசுகள் பலவும் (என்னையும் சேர்த்து தான்) காதல் என்றால் என்னவென்றே சரியாக புரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக ஒரு பெண் பார்ப்பதையும் பேசுவதையும் பழகுவதையும் காதலாக புரிந்து கொள்ளும் ஆண்களை பகடி செய்யும் சிறந்த பொழுது போக்கு திரைப்படம். நீங்கள் சிறு வயதில் காதல் என்ற பெயரில் செய்த கிறுக்குத்தனங்களில் ஒன்றையாவது இந்தப்படத்தில் பார்ப்பீர்கள்.



எனக்கு மிகப்பிடித்த காட்சி - ஹீரோ காதலிக்கு ரத்தத்தால் லெட்டர் எழுதுவதும், அதற்கு வார்த்தைகளை காதலுக்கு மரியாதை பாடல் புத்தகத்தில் தேடுவதும், பின்னணியில் ‘மெல்லினமே மெல்லினமே’ பாடல் இசைத்துக்கொண்டிருப்பதும் நவீன காதலில் இயல்பை மீறிய சினிமாத்தனமும் செயற்கையும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.. அதே காட்சியில் சாராயம் குடித்துவிட்டு சாப்பிட முடியாமல் இருக்கும் அப்பாவுக்கு அம்மா சோறு ஊட்டி விடுவார். எனக்கு தெரிந்து டைரக்டர் இந்தப்படம் மூலம் சொல்ல வரும் கருத்து இது தான்..

முகமூடி - சூடு போட்ட பூனை..

$
0
0
ஹாலிவுட்காரர்கள் பறந்து பறந்து சண்டை போடும் படங்களை சூப்பர் ஹீரோ படங்களில் மட்டுமே காண்பது சாத்தியம். அவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கோ முன்றாண்டுகளுக்கோ ஒரு முறை வரும் ஸ்பைடர்-மேன், சூப்பர்-மேன், பேட்-மேன், அவெஞ்செர்ஸ் போன்ற படங்கள் போதும்.. இது போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு கெத்தே அவர்களை எதிர்த்து போட்டியிடும் வில்லன் தான்..  வில்லன் பாத்திரம் மிகவும் கொடூரமானவனாக பயம்கொள்ள வைப்பவனாக இருந்தாலே போதும், படம் பாதி ஹிட். பெரும்பாலும் அவன் அறிவியல் சம்பந்தப்பட்ட்வனாகவோ அல்லது மிகுந்த பலசாலியாகவோ இருப்பான்.. ஹீரோவே அவனிடம் கடைசி வரை அடியும் மிதியும் பட்டு தான் ஜெயிப்பார். இந்த மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ படம் வந்தாலே அங்கு ஹிட்டு தான்.

ஆனால் நமக்கு அப்படி இல்லை. இங்கு நமக்கு விவரம் தெரிந்ததில் இருந்து பல கொடூர வில்லன்களையும், அவன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவனை துவம்சம் செய்து மக்களை காக்கும் பல உன்னத சூப்பர் ஹீரோக்களை காலகாலமாக நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.. என்ன தான் சூப்பர் - மேன், ஸ்பைடர் - மேன் வந்தாலும், நம்மால் ரஜினியை தானே ரசிக்க முடிகிறது? கிட்டத்தட்ட நம் சினிமாவில் வரும் பாதி ஹீரோக்கள் சூப்பர் ஹீரோக்கள் தான்.. பறப்பார்கள், கட்டிடத்தில் இருந்து ரயிலுக்கு தாவுவார்கள், துப்பாக்கி குண்டாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது, ஊரே அவரை நம்பி தான் இருக்கும்.. இந்த மாதிரி நம்முள் ஒருவரையே சூப்பர் ஹீரோவாக்கி, தனியாக சூப்பர் ஹீரோ என்று யாருமே தேவைப்படாத ஒரு சூழலில், ”முகமூடி” என்று ஒரு சூப்பர் ஹீரோ படம் வந்திருக்கிறது. 



பொதுவாக மிஸ்கின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிற மொழிப்படங்களை காப்பி அடிக்கிறார் என்று. இந்த முறை அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க ‘சூப்பர் ஹீரோ’ சப்ஜெக்ட் என்று சொல்லி ‘முகமூடி’ எடுக்க ஆரம்பித்தார். இதிலும் அவரது வழக்கமான தரையோடு ஒட்டிய கேமரா ஷாட், டாஸ்மாக் காட்சிகள், ஒரு அடியாள் அடி வாங்கி விழும் வரை காத்திருந்து விட்டு அடுத்த அடியாள் குடுகுடுவென ஓடிப்போய் ஹீரோவை அடிப்பது, போலீஸ் காட்சிகள், மீன் மார்கெட், ஆஸ்பத்திரி சண்டை போன்ற க்ளீஷேக்கள் உண்டு.  சரி படம் எப்படி? கதை என்னவென்று கேட்கிறீர்களா?

ஊரில் வயதானவர்கள் மட்டும் வசிக்கும் பங்களாக்களில் கொள்ளையடித்து அந்த வயதானவர்களையும் மர்ம கும்பல் ஒன்று கொன்று குவிக்கிறது. இதை கண்டு பிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி நாசர். அந்த கொள்ளை கூட்ட தலைவன் நரேன். குங்ஃபூ பள்ளி நடத்து போல் வெளியில் காட்டிக்கொண்டு அவர் கொள்ளையடிக்கிறார். வீட்டில் வெட்டியாக இருக்கும் ஜீவா அந்த வில்லனை எப்படி அழிக்கிறார் என்பதே கதை. இதில் ஜீவாவின் குங்ஃபூ மாஸ்டராக 90களின் கிராமிய நாயகன் செல்வா நடித்திருக்கிறார்.

நாம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கேள்விப்பட்ட கதை தான். பொதுவாக சூப்பர் ஹீரோ கதைகள் மிகவும் வழக்கமானவையாக தான் இருக்கும். ஆனால் திரைக்கத்தை நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடும். இண்டர்வெல் பாப்கார்ன் படம் முடிந்த பின்னும் மிச்சம் இருக்கும், அந்த அளவுக்கு காட்சியோடு ஒன்றி விடுவோம். லாஜிக் இல்லையென்றாலும் நம்மால் அதை எல்லாம் கவனிக்க முடியாத அளவுக்கு காட்சிகள் நம்மை கட்டிப்போட்டு விடும். ஆனால் ‘முகமூடி’ திரைக்கதை படு சொதப்பல். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ”இதெல்லாம் எப்படிப்பா நடக்கும்?” என்கிற கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்போம்..



காதல் காட்சிகளும் படு சொதப்பல். இது வரை ஹீரோயின்களை கண்ணியமாக காட்டிய மிஸ்கினும் ஹீரோயினின் தொப்புளை காட்ட ஆரம்பித்துவிட்டார் ஃபாரின் லொகேஷனில். 

வழக்கமான மிஸ்கின் படங்களில் நமக்கு ஒரு பரபரப்பு இருக்கும். வில்லன் கோஷ்டி மீது ஒரு வெறுப்பும் கோவமும் இருக்கும். இந்த படத்தில் அந்த மாதிரி ஒரு காட்சியும் கிடையாது. ஜீவா ஹீரோயின் ஏரியாவில் போய் சீன் போடும் ஒரே ஒரு காட்சி மட்டும் தான் படத்தில் நல்லா இருக்கு.. இந்த படத்திற்கு ஹீரோயின் தேவையா? 

வில்லன் தன்னிடம் இருக்கும் 10,20 பேரை வைத்துக்கொண்டு அப்படி அத்தனை பேரை சிறை பிடிக்கிறார்? ஆஸ்பத்திரி சண்டையில் 4,5 பேர் மட்டும் தான் வருவது போல் காட்டுவார்கள், ஆனால் ஜீவா அடிக்க அடிக்க ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள், கரண்ட் வந்தவுடன் 4,5 பேர் மட்டும் ஓடுவது போல் காமிப்பார்கள். ரெண்டாவது முறை முகமூடியை பார்க்கும் போதே ஹீரோயின் அவனுக்கு லிப்கிஸ் கொடுக்கும் அளவுக்கு காதலில் எப்படி கசிந்துருகுவாள்? கடைசி காட்சியில் வில்லனோடு சேர்த்து வெறும் 3பேர் மட்டுமே சண்டைக்கு வருகிறார்கள். மீதி ஆட்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? தமிழ்நாடே “முகமூடி, முகமூடி” என்று சொல்வதாக நாசர் கூறுவார். அப்படி யார் எப்போது கூறினார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம். முகமூடியும் ஊருக்கு அப்படி ஒன்று நல்லது செய்திருக்க மாட்டார். கடைசி வரை போலீஸ் தான் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறது. ஜீவா அந்த இடங்களில் இருக்கிறார் அவ்வளவு தான். கிளைமாக்ஸில் கூட முகமூடியை விட அவரது தாத்தா தான் பலரை ஒழிக்கிறார். பின்ன சூப்பர் ஹீரோன்னு என்ன இதுக்கு ஒருத்தர் இருக்கணும்? - இப்படி உங்களுக்கு படம் பார்க்கும் போதே பல கேள்விகள் தோன்றும்.

மிக முக்கியமான ஒன்று, மிஸ்கின், நரேனின் வேடத்திற்கு கொடுத்த பில்ட்-அப். ”நரேனின் பாத்திரம் பலரை பயமுறுத்தும்” என்று. ஆனால் நரேனை பார்த்தால் ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த மாதிரி பார்வை மட்டும் தான். மற்றபடி ஒன்றும் இல்லை. க்ளைமேக்ஸ் காட்சியில் அவரின் டயலாக்கும் அதை அவர் சொல்லும் விதமும் - சோ சேட் நரேன்.. வில்லன் வேடம் பயமுறுத்துவதற்கு பதில் நம்மை நக்கலாக சிரிக்க வைக்கிறது.  முதலிலேயே சொன்ன மாதிரி வில்லன் பாத்திரம் தான் சூப்பர் ஹீரோவின் மாஸை உயர்த்தும். நரேனின் பாத்திரம் மிகவும் சோடை போயிருப்பதும் படம் நம்மை கவராததற்கு ஒரு முக்கிய காரணம். 

இசை, கேமரா என்று எல்லாமே வழக்கமான மிஸ்கின் படங்களை ஞாபகப்படுத்துகின்றன. இந்த கதைக்கு எதற்கு ஒரு சூப்பர் ஹீரோ? சாதாரண தமிழ் ஹீரோவே போதுமே மிஸ்கின்? சரி, சூப்பர் ஹீரோ வருகிறார். அவர் என்ன தான் செய்கிறார்? உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. போலீஸே எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடுகிறதே? பின்ன என்ன அவசியம் முகமூடிக்கு? இப்படி பல கேள்விகள் நம்மை கேட்க விடாமல் செய்திருந்து, பலமான வில்லன் பாத்திரத்தையும் அமைத்திருந்தால் படம் ஒரு வேளை நன்றாக இருந்திருக்கலாம். மிஸ்கின் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இனிமேலாவது பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள்.




முகமூடி - புலியை பார்த்து சூடு போட்ட பூனை தீக்காயத்தால் இறந்து போனது..

சிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..

$
0
0
’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாதுகாப்போ சரியான சம்பளாமோ இல்லை’ - கடந்த ஒரு மாதமாக நாளிதழ்களின் எதாவது ஒரு பக்கத்தில் இது போன்ற ஒரு செய்தி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.. சிவகாசி வெடி விபத்துக்கு பின் மீடியாவில் இருந்து ஃபேஸ்புக் குரூப் வரை அனைவரும் அவரவருக்கு தெரிந்த எங்கிருந்தோ அறிந்த பல விசயங்களை எழுதித்தள்ளுவது வாடிக்கையாகிவிட்டது. அதில் பலவும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவையாகவும், உண்மையை எடுத்துரைப்பதாய் இல்லாமலும் இருப்பதால், சிவகாசிக்காரன் என்கிற உரிமையிலும், என் தகப்பனார் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார் என்கிற தகுதியோடும் இங்கிருக்கும் உண்மையை சொல்கிறேன்.. 



இங்கு யாரும் வேண்டுமென்றே உயிர் போக வேண்டும் என்று வேலை செய்வதுமில்லை, ஃபயர் ஆபிஸ் கட்டி ஆட்களை வேலைக்கு அமர்த்துவதுமில்லை. சிவகாசி என்றால் அச்சு, தீப்பெட்டி, வெடி தொழில் தான் என்று எங்கள் தலையில் எழுதி வைத்து படைத்துவிட்டான் ஆண்டவன். இங்கிருக்கும் எல்லோர் வீட்டிலும் குறைந்தது ஒருவர் இது சம்பந்தப்பட்ட ஆலையில் வேலை செய்துகொண்டிருப்போம். ‘எத்தன நாள் தான்டா கூலிக்கு மாரடிக்குறது?’ என்று எண்ணும் சிலர் தாங்கள் பிறந்ததில் பார்த்து வளர்ந்த அந்த தொழிலில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

அச்சுத்தொழில் என்றால் மிசின் வாங்க வேண்டும், முடிந்தால் ரெஜிஸ்ட்ரேசன் செய்து டின் நம்பர் பெற வேண்டும் என்று மட்டும் தெரியும். தீப்பெட்டி, பட்டாசு ஆலை என்றால் லைசன்ஸ் வாங்கி இடம் கட்டினால் போதும் தொழிலை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்து ஆரம்பிப்பவர்கள் தான் அதிகம். அதிலும் பலர் ஏற்கனவே லைசன்ஸ் பெற்றிருக்கும் ஃபேக்டரியை லீசுக்கு எடுத்து தொழில் செய்வர் (இது சட்டப்படி தவறு). தொழிலை முறையாக கற்றுக்கொண்டோ, அல்லது தலைமுறை தலைமுறையாக தொழில் செய்வதற்கு இங்கு யாரும் அய்ய நாடார், சண்முக நாடார் பரம்பரை இல்லை. உங்கள் ஊரில் உங்களுக்கு எலெக்ட்ரிக் கடை, செல்ஃபோன் கடை, மளிகை கடை வைக்கும் ஆசை இருப்பது போல் எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு பட்டாசு ஆலை ஆரம்பிக்கும் ஆசை இருக்கும்.




இந்தியாவின் 75% அச்சு தேவைகளை பூர்த்தி செய்யும் சிவகாசியில் ஒரே ஒரு அச்சுத்துறை சம்பந்தப்பட்ட கல்லூரி தான் இருக்கிறது. 80% தீப்பெட்டி தேவையையும், 90% பட்டாசு தேவையையும் பூர்த்தி செய்யும் சிவகாசியில் அது சம்பந்தமான படிப்பையோ அறிவுரையோ வழங்கோ ஒரு கல்லூரியோ அரசு மையமோ கிடையாது என்பது வேதனையான விசயம். இவ்வளவு சிறு தொழில் மிக்க ஊரில், மக்களுக்கு விழிப்புணர்வும் சிறு தொழில் முனைவோர்க்கு அறிவுரையோ சொல்லும் அளவுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லையென்றால், தொழில் தொடங்க நினைப்பவன் நீங்கள் ஆரம்பிக்கும் வரை காத்திருப்பானா? அவனுக்கு அடுத்த வேளை சோறு வேண்டும். லைசன்ஸ் பெற்று (சாதா வெடிகள் செய்யும் கலெக்டர் லைசன்ஸ் மட்டுமே இங்கு நான் குறிப்பிடுவது, வானவெடிகளுக்கு நாக்பூரில் இருந்து லைசன்ஸ் பெற வேண்டும். இங்கு ஒரு சில ஃபேக்டரிகளில் மட்டுமே அந்த நாக்பூர் லைசன்ஸ் உள்ளது), ஏதோ ஒரு ஊர் பேர் தெரியாத காட்டில் இடம் வாங்கி கட்டிடம் கட்டிவிட்டு தொழிலை தொடங்கி விடுவான் அவன்.

தொழில் தொடங்க எந்த விதமான உதவியோ வழிகாட்டுதலோ கொடுக்காத நம் அரசு அவன் தொழிலை ஆரம்பித்தவுடன் மிக வேகமாக வந்துவிடும், அதிகாரிகளின் மூலம். வரும் அதிகாரியாவது சரியானவனாக இருப்பானா என்றால் கிடையாது. “நாளைக்கு உன் ஃபேக்டரிக்கு செக்கிங் வாரோம்” என்று முன்னக்கூடி சொல்லி வைத்துவிட்டு வரும் ‘நல்ல’அதிகாரிகள் அவர்கள். மறுநாள் அவர்கள் வரும் போது பெரும்பாலும் ஃபேக்டரிக்கு லீவு விடப்பட்டிருக்கும், இல்லையென்றால் மேம்போக்காக பார்த்துவிட்டு போய் விடுவார் நல்ல அதிகாரி. அவருக்கு செக்கிங் வந்த அன்றோ அல்லது மாதமொரு முறையோ கவனிப்பு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த மாதிரி ‘நல்ல’ அதிகாரியாய் இருப்பார்கள்.

இன்னும் சில ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்கள் இருக்கிறார்கள். முன்னறிவிப்பு இல்லாமல் ஃபேக்டரிக்கு வரும் அவர்களாவது சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என நீங்கள் நினைத்தால் உங்களை போல் பச்சை மண்ணும் யாருமே இருக்க முடியாது. வேகமாக ஃபேக்டரிக்குள் வரும் அவர்கள் வானவெடிகளுக்கான லைசன்ஸ் இருக்கிறதா என்று முதலில் பார்ப்பார்கள். பெரும்பாலும் அது இருக்காது. “அண்ணாச்சி என்ன நீங்க லைசன்ஸே இல்லாம ஃபேன்ஸி ஐட்டம் தயாரிக்குறீங்க?” என்பார் முகத்தை கொஞ்சம் முறைப்பாக வைத்துக்கொண்டு. அடுத்து  குடவுனில் பார்ப்பார். “அண்ணாச்சி உங்க குடவுன் அளவுக்கு இவ்ளோ ஸ்டாக் வைக்க கூடாதுல?” என்று நம்மிடம் அடுத்த கேள்வி கேட்பார். “யார கேட்டு இவ்ளோ பேர அளவுக்கு அதிகமா வேலைக்கு வச்சிங்க?”, “வெடியெல்லாம் ஏன் இப்படி பாதுகாப்பு இல்லாம வெளியில வச்சிருக்கிங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே போவார். கடைசியில் “உங்க மேல கேஸ் போட்டு லைசன்ஸ் கேன்சல் ஆகுற அளவுக்கு மோசமா இருக்குண்ணாச்சி உங்க ஃபேக்டரி” என்று முடிப்பார். நம்ம ஆள் ’போச்சி அவ்வளவு தான் நம்ம லைசன்ஸ்’ என்கிற பயத்தோடு, “சார் சாரி இனிமேல் எல்லாம் சரி பண்ணிறேன் சார்” என்பார்.. நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசருக்கு சாரி சொன்னால் தான் பிடிக்காதே?!

”என்ன அண்ணாச்சி, இவ்ளோ பிரச்சனைய வச்சுக்கிட்டு அசால்ட்டா சாரினு சொல்றீங்க? இது எவ்வளவு மோசமான விசயம் தெரியுமா? கண்டிப்பா லைசன்ஸ் கேன்சல் ஆகிரும்” என்பார். இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அதோடு கிளம்பியிருக்க வேண்டும். அந்த மோசமான ஃபேக்டரியின் லைசன்ஸை கேன்சல் செய்திருக்க வேண்டும். அப்படி ஓரிருவருக்கு கேன்சல் செய்திருந்தால் இந்நேரம் எல்லா முதலாளிகளும் ஒழுங்காக இருந்திருப்பார்கள். ஆனால் நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அந்த நல்ல ஆபிசர் மாதிரி 2000, 5000ரூபாயோடு கிளம்புபவர் இல்லையே? ஸ்ட்ரிக்ட்டா டியூட்டி பாக்குறதுக்குன்னு ஒரு வேல்யூ இருக்கே? பல்க்கா முதலாளிகளிடம் கறந்து விட்டு, “சரி சரி நான் பாத்துக்குறேன், இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க, என்ன?” என்று வார்னிங் செய்வது போல் வருங்கால உயிர்பலிக்கு தேதி குறித்துக்கொடுப்பார்.. 




அடுத்த முக்கியமான விசயம் இங்கு வீடுகளிலேயே நடக்கும் பட்டாசு உறப்த்தி. ஆலைகளில் ஏற்படும் விபத்து அங்கிருப்பவர்களை மட்டும் கொல்லும். ஆனால் வீட்டில் பட்டாசு உற்பத்தியின் போது விபத்து ஏற்பட்டால், அந்த குடுயிருப்பு பகுதியே முழுவதுமாக அழிந்து போய்விடும். ஆனால் இதை பற்றி எந்த ஒரு அதிகாரியும் இது வரை வாய் திறந்ததாகவோ, ஃபைன் போட்டதாகவோ, அட்லீஸ்ட் லஞ்சம் வாங்கியதாகவோ கூட தகவல் இல்லை. ஏன்? ஏன்னா அந்த மாதிரி வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் எல்லோரும் சேரிப்பகுதிகளில் ஒன்றாக வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் மீது எந்த அரசோ அரசு அதிகாரிகளோ நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டு, அட்வான்ஸை திரும்ப கேட்டால், “என் முதலாளி என்னை ஜாதியை சொல்லி வைகிறான்” என்று புகார் செய்யும் இவர்கள் மேல் யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.

கடந்த ஞாயிறன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பட்டாசு விபத்துக்கு இரங்கல் செய்வது போல் ஒரு கூட்டம் போட்டிருந்தார் சிவகாசியில்.  ஊரில் இருக்கும் பல முதலாளிகளிடம் அந்த கூட்டத்திற்காக பணமும் வசூலிக்கப்பட்டது. பணம் கொடுக்கும் போது பல சிறு முதலாளிகளும் கட்சியினரிடம் “உங்க தலைவர, கவர்மெண்ட் ஆபிஸர பத்தி பேச சொல்லுப்பா, அவங்க முறையா இருந்தா எல்லாம் சரியா நடக்கும்” என்று கூறியிருக்கின்றனர். கட்சியினரும் “என்ன மொதலாளி? அதுக்குத்தானே இந்த கூட்டமே? எங்க தலைவர பாருங்க, நாளைக்கு எப்படி பேசுறாருன்னு.. சும்மா எல்லாரையும் கிழிச்சு எடுத்துருவாரு”னு சொல்லிட்டு போனவங்க தான்.. ஞாயிறு மீட்டிங்கில் கிருஷ்ணசாமி பேசுகிறார், “பணவெறி பிடித்த முதலாளிகளால் தான் விபத்துகள் நடக்கின்றன” என்று. தன் மக்களுக்கு அவர் அறிவுரை சொல்லியிருக்கலாமே, “நீங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாமல் வெடி உற்பத்தி செய்வதை நிறுத்துங்கள்” என்று? சொன்னால் ஓட்டு கிடைக்காதே?!

நான் முதலில் சொன்னது போல் விபத்து நடக்கவேண்டுமென்று யாரும் தொழில் தொடங்குவதில்லை. ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் தொழில் பற்றிய பாதுகாப்பு முறைகளும் சொல்லிக்கொடுக்க அரசு ஒரு அடியும் எடுத்து வைக்காத போது, தொழில் தொடங்க வேண்டுமென நினைப்பவன் எங்கு டியூசன் போய் கற்றுக்கொள்வான் இதையெல்லாம்? கிருஷ்ணசாமி போன்று விளம்பரத்துக்கு ஊருக்கு வரும் அரசியல்வாதிகளாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுவார்கள் என்றால், அவர்களும் தொழிலாளி முதலாளி என்று சண்டை மூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு குழந்தை தொழிலாளர் குழந்தை தொழிலாளர் என்று கூவுகிறது. சிவகாசியிலும் மற்ற ஊர்களில் இருப்பதை போல டீக்கடையிலும், சிறு அச்சகங்களிலும், ஹோட்டல்களிலும் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் முறை எங்கிருந்தாலும் அதை போக்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வகையில் பட்டாசு ஆலைகளில் 95% குழந்தை தொழிலாளர்கள் கிடையாது.. அதற்கு காரணம் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று முதலாளிகள் உணர்ந்து கொண்டதால். இந்த மாதிரி மற்ற விசயங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சென்ற வார விகடனில் காளீஸ்வரி ஃபயர் வொர்க்ஸ் குரூப் முதலாளி திரு.A.P.செல்வராஜ் அவர்கள் சொன்னது தான் நூற்றுக்கு நூறு உண்மை. நல்ல வசதியான மருத்துவமனைக்கு அரசின் நிதித்துறை அனுமதி மறுத்துள்ளது, தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் பட்டாசு தொழில் பற்றிய சட்டங்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்த சரியான Institute வேண்டும் போன்ற நல்ல தகவல்களை சொல்லியிருந்தார். மற்றபடி அந்த கட்டுரையில் அவர்கள் போட்ட படங்களும் குறிப்பிட்ட செய்திகளும் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தன.. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அரசின் மீது யாரும் குற்றம் சொல்ல கூடாது என்பதற்காகவே எல்லோரும் முதலாளி என்றும், குழந்தை தொழிலாளர் என்றும் மேம்போக்காக பேசிக்கொண்டிருக்கின்றனர். 

எல்லா பிரச்சனைகளுக்கும் முதலாளிகளே காரணம் அல்ல. கவனக்குறைவான தொழிலாளர்களும் காரணம். அவர்களுக்கு தாங்கள் சார்ந்த வேலையில் சிறு தவறு கூட என்ன மாதிரி விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை புரிய வைக்க வேண்டும். மற்றபடி ஏற்படும் எல்லா விபத்துக்களுக்கும் அரசின் மெத்தனமும், எங்கள் மக்கள் மீது அக்கறை இல்லாததும் தான் காரணம். எங்கள் ஊர் விபத்தில்லாத அமைதியான, பட்டாசுத்தொழில் பாதுகாப்பான சந்தோசத்தை கொடுக்கும் தொழிலாக அமையும் - அரசும் அதிகார்களும் தங்கள் கடமையை சரியாக செய்தால். சிறந்த பட்டாசு துறை சம்பந்தப்பட்ட வல்லுனர்களை கொண்டு இங்கு முகாம் ஆரம்பிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி சம்பந்தப்பட்ட கல்வியும் வர வேண்டும். லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும். ஜாதியை மீறிய கண்டிப்பு வேண்டும் கடமையில். தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் செய்யும் எல்லா தவறுகளையும் கண்டும் காணாமல் இருக்க கூடாது. ஃபேன்ஸி வெடிகளுக்கு லைசன்ஸ் கொடுப்பதை சில வருடங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். 





ஒரு சின்ன வேண்டுகோள். ஏதோ பெரிய புரட்சியாளன் போல் “இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மாட்டேன்” என்கிற உறுதிமொழியெல்லாம் எடுக்க வேண்டாம். பட்டாசு விபத்தால் எங்கள் உயிர் ஒரு நொடியில் போகும் என்றால், நீங்கள் பட்டாசு வாங்கவில்லையென்றால் பசியில் கொஞ்சம் கொஞ்சமாக போகும். அவ்வளவு அக்கறை உள்ள புரட்சிக்காரன் என்றால், மரங்களை அழிக்கும் பேப்பரையும், இயற்கையை பாழ்படுத்தும் பெட்ரோல்/டீசல் வண்டிகளையும், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களையும் நிறுத்துங்கள். எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லிக்கொடுத்தால், முறையான பயிற்சி கொடுத்தால், சட்டங்களை சரியாக அதிகாரிகள் பின்பற்றினால் வருடம் முழுதும் எங்கள் மனதில் சிரிப்பும், தீபாவளியன்று உங்கள் மனதில் சிரிப்பும் என்றும் இருக்கும்..

தான் உயிரை பணயம் வைத்து தயாரித்த ஒரு பொருள் சுக்குநூறாக உடைந்து அழிந்து போவதை பார்த்து சந்தோசப்படும் ஒரே ஆள் எங்கள் ஃபயர்வொர்க்ஸ் ஃபேக்டரி தொழிலாளி தான். அவன் தயாரிக்கும் பொருள் மட்டும் வெடித்து சிதறட்டும், அவன் குடும்பமும் வாழ்வும் சந்தோசமாய் இருக்கட்டும்..

என் தாத்தா சிவாஜி...

$
0
0
”ஒரு ஜீப்ல ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் காட்டுக்கு வேட்டையாட போனாங்களாம்” - என்னை தூங்க வைக்க கதை சொல்ல ஆரம்பித்தார் எங்கள் அப்பா..
“ம்.. சரி” - இது நானு..
“ரெண்டு பேரும் ட்ரெஸ்ல பாம், கத்தி, துப்பாக்கி எல்லாம் மாட்டி வச்சிருந்தாங்க”
“யாருப்பா வண்டி ஓட்டுனாங்க?”
“நேத்து யாரு ஓட்டுனா?” - என்னை செக் பண்ண கேள்வி கேட்கிறார் என நினைப்பேன். பின்பு தான் புரிந்தது அவர் நேற்று சொன்னதை மறந்து கேட்கிறார் என்று..
“நேத்து ரஜினி மாமா ஓட்டுனாங்க”
“அப்படின்னா இன்னைக்கு சிவாஜி தாத்தா தான் வண்டி ஓட்டுறாங்க. காட்டுக்குள்ள வண்டி வேமா போகுது”
“வேமா போனா வண்டி வுழுந்துறாதாப்பா?”
“ரஜினி மாமா போற வண்டி விழுமா? எதுத்தாப்லா யாராவது வந்தா தான் பயந்து ஓடிருவாங்க”
“சரி பெறகு என்ன ஆச்சி?”
“.....”
“ப்பா... எப்பா...” - அப்பா கண் அயர்ந்திருப்பார்.. “எப்பா எந்திரிங்கப்பா.. அடுத்த என்னப்பா ஆச்சி?” - தட்டி எழுப்ப ஆரம்பித்துவிடுவேன் அவரை..
மெதுவாக கண் விழித்து, எனக்கு கதை சொல்வதை உணர்ந்து, “அப்போ எதுத்தாப்ல ஒரு யான வந்துச்சி”
“பெரிய யானையாப்பா?”
“ம் ஆமா பெரிய காது, நீளமா தந்தம் எல்லாம் இருக்கும்.. அப்படியே வேமா காருகிட்ட வருது”
“வந்து?”
”காருகிட்ட அப்டியே வந்து நிக்குது” - இதை சொல்வதற்குள் மீண்டும் ஒரு முறை கண் சொக்கி தூங்க ஆரம்பித்திருப்பார் என் அப்பா.. நான் வழக்கம் போல ‘எப்பா எப்பா’ என்று கத்திக்கொண்டிருப்பேன்..
”இப்ப கத்தாம தூங்க போறியா நாளைக்கு மிஸ்கிட்ட சொல்லவா?” - அம்மாவின் குரல் வரும் போது என் குரல் நின்றுபோகும்.
என் அப்பா கதையை முழுதாக சொல்லாமல் முடித்திருந்தாலும் எனக்கு என்ன நடக்கும் என தெரியும். அந்த யானையை ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் தூக்கி போட்டு பந்தாடியிருப்பார்கள். எத்தனை தடவை கேட்டிருப்பேன் இந்த கதையை? ஆனால் தினமும் புதிதாக கேட்பது போல் என் அப்பா அவ்வளவு அழகாக சொல்லுவார்.
 


நான் அப்போது பார்த்திருந்த ஒரே சிவாஜி படம் வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டும் தான். ஒரு சில ரஜினி படங்கள் பார்த்திருந்தேன். எங்கள் சொந்தக்காரர்கள் தான் வெளியூரில் தங்கி சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே பல காலம் நினைத்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி அப்பாவிடம் “எப்பா ரஜினி மாமா எப்ப நம்ம வீட்டுக்கு வருவாங்க?” என்று அம்மா இல்லாத சமயம் கேட்டதுண்டு. அம்மா இருக்கும் போது கேட்டால் எனக்கு நல்லா வசவு விழும் அதான். அப்பாவும் “அவங்க வேலயெல்லாம் முடிஞ்சதும் கண்டிப்பா வந்துருவாங்க” என்பார். நானும் நம்பிக்கொண்டிருப்பேன் என்றாவது ஒரு நாள் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை மடியில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று.

என் அப்பா ஒரு தீவிரமான சிவாஜி ரசிகர். என் பெயர்க்காரணம் கூட அதனால் அமைந்தது தான். என் பெரியப்பாவும் என் அண்ணனுக்கு கணேசன் என்றும் அக்காவுக்கு சாந்தி என்றும் பெயரிட்டு அழகு பார்த்தார். நல்ல வேளை என் தம்பி பிரபு என்னும் பெயரில் இருந்து தப்பித்துவிட்டான்.

எனக்கு ரஜினி மாமா அளவுக்கு சிவாஜி தாத்தாவை பிடிக்காது. நான் பக்கத்து வீட்டு டிவியில் பார்த்த பல படங்களில் சிவாஜி தாத்தா கஷ்டப்படுவார், கடைசியில் இறந்து போய்விடுவார். “ச்சே என்ன இப்பிடி இருக்காரு நம்ம தாத்தா? மாமா மாதிரி ஜாலியாவே இருக்க மாட்றாரே?! நம்ம வீட்டுக்கு வரப்ப கேக்கணும்” என நினைத்துக்கொள்வேன்.


கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தது.. சிவாஜி நமக்கு சொந்தக்காரராய் இருக்க முடியாது என்பது புரிந்தது. ஒரு பத்து வயது இருக்கும். அதே பக்கத்து வீட்டில் அதே டிவியில் ’தங்கப் பதக்கம்’ படம் பார்த்தேன். அப்போது தான் அவர் நடிப்பின் பிரமாண்டம் எனக்கு லேசாக புரிந்தும் புரியாதது போன்றும் இருந்தது.. சௌத்ரியினுடைய பேச்சும் கம்பீரமான நடையும் ஒரு வித பயத்தை கொடுத்தாலும், ஜெகன் மீது அவர் வைத்திருக்கும் பாசமும் அதை அவர் வெளிக்காட்ட துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என் அப்பா தான் கண் முன் வந்தார். சிவாஜி மாதிரி சில நேரம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போடுவதாலோ என்னவோ சிவாஜியை அதற்கு பின் எப்போது பார்த்தாலும் என் அப்பாவின் சாயல் அங்கு இருக்கும்..



ராஜபார்ட் ரங்கதுரை படம் பார்க்கும் போது அதில் எது நாடகம், எது படத்தில் நடப்பது என புரியாமலே படம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிவாஜி அந்த படத்திலும் செத்துப்போவது எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் அதில் வரும்அம்மம்மா தம்பி என்று நம்பிஎன்னும் பாடலை இப்போது கேட்டாலும் பார்த்தாலும் கண் கலங்கிவிடும். நம் கண் முன் நின்று தன் குடும்ப நிலையை எண்ணி அவர் வருந்தி பாடுவது போலவே இருக்கும்.



ஒரு நிமிடம் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு கட்டபொம்மன், வ.உ.சி., சிவபெருமான், ராஜ ராஜ சோழன், அப்பரென்று யாரை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்.. கண்டிப்பாக சிவாஜி எல்லார் போலவும் இருப்பார். நானெல்லாம் சின்ன வயசுல சாமி கும்பிடும் போது கண்ணை மூடியவுடன் சிவபெருமான் ரூபத்தில் சிவாஜி தான் மனதிற்குள் நிற்பார். சிவபெருமானுக்கே கூட டவுட் வந்திருக்கலாம், ‘யாருடா இவன் நம்மள விட நம்ம ரோல அலப்பறையா பண்ணுறான்!’னு..



’பர்ஸ்ட் ரஜினி, செகண்ட் சிவாஜி’ என்று பிடித்த நடிகர்களை வரிசை படுத்தி பேசும் போது சொல்வேன். ஆனாலும் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் ஏன் ஒன்றாக நடிப்பதில்லை என்று ஒரு கேள்வியை எனக்குள் மட்டுமே கேட்டுக்கொள்வேன். ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம், ‘படிக்காதவன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ரஜினியும் சிவாஜியும் வெளுத்துவாங்கியிருப்பார்கள். ரஜினி நடித்த படங்களில் எப்போதும் என் ஆல் டைம் ஃபேவரைட்டில் “படிக்காதவன்”ம் ஒன்று. அந்தப்படம் பார்த்ததில் இருந்து ஃபர்ஸ்ட் செகண்ட் எல்லாம் கிடையாது. பிடித்த நடிகர்கள் என்றாலே ரஜினியும் சிவாஜியும் தான்.

வளர்ந்தவுடன் நண்பர்களிடம் ரஜினி ’மாமா’, சிவாஜி ’தாத்தா’ என்று உறவு முறை சொல்லி கூறுவதை நிறுத்தியிருந்தாலும் மனதிற்குள் அந்த உறவை இப்போது வரை வைத்துக்கொண்டுதானிருக்கிறேன். 'கௌரவம்' பாரிஸ்டர் ரஜினிகாந்தும், ’ஞானஒளி’ கோயில் மணியடிக்கும் அந்தோணியையும், ’பாரத விலாஸ்’ குடும்ப தலைவனையும், ’தில்லானா மோகனாம்பாள்’ சிக்கலையும், ’வசந்த மாளிகை’ சின்ன துரையையும், ’தெய்வ மகன்’ல் ”ஹொட்டேல் ஸ்டார்ட் பண்ணபோறேன் டேட்” என்று நெகத்தை கடித்துக்கொண்டே வரும் அந்த சுட்டி சிவாஜியையும், கர்ணனையும், ’முதல் மரியாதை’ மலைச்சாமியும், ’வியட்நாம் வீடு’ ப்ரெஸ்டிஜ் பத்மனாபன் என்று எத்தனையை சொல்ல? அவர் நடித்த எந்த படத்திலும் அவரது நடைப்பை குறை சொல்ல முடியாது..



‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடகத்தில் நடித்தவர்கள் தான் அப்போது திரைத்துறைக்கு வர முடிந்தது. நாடகத்தில் க்ளோஸ்-அப் காட்சிகள், ஸ்லோ மோசன் காட்சிகள் எல்லாம் கிடையாது. அதிக உணர்ச்சியை காட்டி தான் நடிக்க வேண்டும். சினிமாவிலும் அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர் நடிகர்கள். சிவாஜியே ஒரு பேட்டியில் அவரது ‘ஓவர் ஆக்டிங்’ பற்றி கேட்கப்பட்ட போது, “சினிமாங்குறதே நிஜ வாழ்க்கைக்கும், நிஜத்துக்கும் மீறிய ஒரு விசயம் தானே? அப்போது அதில் இருக்கும் நடிப்பு எப்படி இயல்பாய் இருக்க முடியும்? இயல்பை மீறியது தானே நடிப்பு?” என்பது போல் பதில் சொல்லியிருப்பார். 



எனக்கு 6 வயதாக இருக்கும் போது, அப்பா ‘கர்ணன்’ படத்திற்கு கூட்டிச்சென்றார். வேலையெல்லாம் முடித்து வர லேட்டாகும் என்பதால் நைட் ஷோ தான் கூட்டி செல்வார். அம்மாவிடம் அடிவாங்கி கஷ்டப்பட்டு ஹோம்-வொர்க் செய்த பையனை, அதுவும் 6 வயசு பையனை நைட் ஷோவுக்கு ‘கர்ணன் படத்துக்கு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறது எவ்வளவு கொடுமைனு உங்களுக்கு தெரியாது. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் நான் தூங்கிவிட்டேன். என் அப்பா என்னை அடித்தார், கிள்ளினார், என்னென்னமோ செய்து பார்த்தார். ம்ஹீம் நான் எழவே இல்லை. அவருக்கு ஒரே வருத்தம், நான் அந்த க்ளைமேக்ஸ் போர் காட்சியையாவது பார்த்திருக்க வேண்டும் என்று. எனக்கு என் அப்பா மேல் கோவம் வந்ததே தவிர சிவாஜி மீது அப்போது கோவம் வரவில்லை.15, 16 வயதில் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தலைக்கு ஏறும் அந்த காலத்தில் என் அப்பாவை பயங்கரமாக கிண்டலடிப்பேன், அவர் சிவாஜி ரசிகர் என்கிற ஒரே காரணத்துக்காக. “அவா வீட்டுக்குள்ள கால வச்சதும் இவரு கையி அப்டியே துடிக்குமாம்!! என்னமா ஏமாத்துறாய்ங்க? அவருக்கு நீங்க ஃபேன் வேற?” என்று முதல் மரியாதை க்ளைமேக்ஸில் இருந்து வசந்த மாளிகை, தங்க பதக்கம் என்று நான் கிண்டல் செய்த அனைத்து படங்களையும் இப்போது மீண்டும் தேடித்தேடி விரும்பி பார்க்கிறேன்.

ஏதோ ஒரு வெளிநாட்டு பல்கலையில்  நடிப்பு பற்றிய பட்டிய பாடப்பிரிவிற்குரிய டிக்ஸ்னரியில் சிவாஜியை பற்றி பெருமையாக “முகத்தில் கிட்டத்தட்ட 60 விதமான பாவங்களை காட்டும் திறமை பெற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என ஆனந்த விகடனில் வந்த ‘ஹாய் மதனி’ல் ஒரு முறை சிவாஜியை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை கண்ணாடி முன் கொண்டு சென்று வித விதமாகமுக பாவனையை  மாற்றி பாருங்கள். ஒவ்வொரு பாவனையின் போதும் உங்கள் முகம் இன்னும் இன்னும் கேவலமாக தெரியும். ஆனா அந்த மனுசன் செஞ்ச எல்லா நடிப்பும் நம்மை ஆச்சரியப்படவும் அழவும் மெய்மறக்கவும் வைத்தன.

சுஜாதா, சிவாஜி போன்ற கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களின் மூச்சு கலந்திருந்த இந்த காற்றில் நமது மூச்சும் கலந்திருக்கிறது என்பதே நமக்கு மிகவும் பெருமையான விசயம் தான். இன்றைக்கு நாம் மிகப்பெரும் நடிகர்கள் என்று சொல்லும் எல்லோருமே சிவாஜி சாப்பிடும் போது சிதறிய பருக்கைகளை தான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு பெரிய நடிகர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள். நாளை அக்டோபர் ஒன்று, ’கலைத்தாயின் தவப்புதல்வன்’ சிவாஜியின் பிறந்த நாளுக்காக நான் எழுதிய இந்த பதிவு சிவாஜியின் ரசிகர்கள் அனைவருக்கும், என் அப்பாவிற்கும் சமர்ப்பணம்..

மின்வெட்டு - The Beginning..

$
0
0
நண்பர் இளவரசன் (Don Ashok) அருமையாக எழுதியிருந்த ”மின்வெட்டு இனிமையாய் இருந்த காலம்!”என்னும் பதிவைப் படிக்கும் என் சின்ன வயது மின்வெட்டு ஞாபகங்களும் வந்துவிட்டன.. அவர் அனுமதியுடன் அந்த பதிவிற்கு பார்ட்2 அல்லது என் பாணியில் ஒரு ரீ-ரைட் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..





அப்போதெல்லாம் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையின் போது மட்டும் தான் கரெண்ட் போகும். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தான் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டும், வெயிலும் வாட்டி எடுக்கும். முழுப்பரிட்சை விடுமுறையில் நாங்கள் (தெரு நண்பர்கள்) சின்ன சின்ன அச்சாபிஸ், கட்டிங் ஆபிஸ், தாள் பிரிக்க என்று எதாவது வேலைக்கு செல்வோம். அந்தக்காசில் தான் அடுத்த வருடத்திற்கு ஆகும் புத்தகச்செலவு சுமையில் பாதியை குறைக்க முடியும் அப்பாவுக்கு. சில ‘ஓனர்’கள் ‘மே’ கடைசியில் சம்பளத்திற்கு பதிலாக நோட்டு புத்தகங்களே வாங்கி கொடுத்து விடுவார்கள். சரி, சிவகாசி கதையை இன்னொரு பதிவில் பார்க்கலாம், இப்போது அந்த மின்வெட்டு அனுபவங்களை பேசலாம்.

மின்வெட்டு பெரும்பாலும் மதிய நேரங்களில் தான் இருக்கும்.. 1-3, அல்லது 2-4 மணிக்கு தான் கரெண்ட் போகும். அப்போது தான் எங்களுக்கு மதிய உணவு இடைவேளை விடுவார் கட்டர்/ப்ரிண்டர் (இவர்கள் அச்சாபிஸில் மேனேஜர் கேடர் என்று வைத்துக்கொள்ளுங்கள்). சாப்பிட தெருவிற்குள் நுழைவோம். 6அடி அகலம் தான் எங்கள் தெரு. இரு பக்கத்திலும் பெண்கள் வரிசையாக உட்கார்ந்து கெட்டு (தீப்பெட்டி, மத்தாப்பு பெட்டி) ஒட்டிக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நடந்த விசயம் எல்லா வீட்டிற்கும் தெரியும் நேரம் அது தான். கரெண்ட் இருக்கும் போது பெரும்பாலும் டிவி இருக்கும் வீட்டிற்குள் எல்லா பெண்களும் அமர்ந்து கெட்டு ஒட்டிக்கொண்டு அமைதியாக நாடகத்தை பார்த்து விளம்பர இடைவேளையில் நாடக விமர்சனத்தை செய்வார்கள்.

மதிய நேரங்களில் பிள்ளைகள் வேலையில் இருந்து வருவதை பார்த்ததும் தங்கள் கதைகளை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு பிள்ளைகளுக்கு சோறு போட வீட்டிற்குள் வருவார்கள். ஆண்கள் காலையிலேயே சோறு எடுத்துக்கொண்டு ஃபேக்டரிக்கோ அச்சாபிஸுக்கோ போய் விடுவார்கள். என் ஆச்சிக்கு மதியம் கரெண்ட் போனாலே மிகவும் கோவம் வந்துவிடும். அப்போது நம் மந்திரா பேடி குடும்பப்பாங்காக நடித்த ஹிந்தி டப்பிங் “சாந்தி” என்னும் சீரியல் மிகப்பிரபலம். மதியம் ரெண்டு மணிக்கு போடுவார்கள். சரியாக டைட்டில் கார்டு போடும் போது கரெண்ட் போய் விடும். ‘இனி இரண்டு மாதங்கள் அந்த நாடகம் பார்க்க முடியாதே’ என்கிற கடுப்பில் இருப்பார். 

சாப்பிட்டு விட்டு கரெண்ட் வந்தவுடன் வேலைக்கு போனால் போதும் என்பதால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் நேத்து நைட்டு அப்பா அம்மா போட்ட சண்டை, பரிட்சை ரிசல்ட் என்பது பற்றியே எங்கள் பேச்சு இருக்கும். பரிட்சை ரிசல்ட் பற்றி பேசும் போது எல்லாருக்குமே கண்ணில் ஒரு பீதி இருக்கும். “பெயில் ஆயிட்டேன்னா இந்த கம்பெனிலேயே வேலைக்கு சேந்துரலாம்னு இருக்கேன்”னு என்று வருங்காலத்திற்கும் சேர்த்து யோசித்துக்கொண்டிருப்போம். 



4மணிக்கு வர வேண்டிய கரெண்ட் சில சமயங்களில் 3.30க்கே வந்துவிட்டால் “யுக்” என்னும் சுதந்திர போராட்ட  நாடகத்தை சிறிது நேரம் பார்த்துவிட்டு வேலைக்கு திரும்பிவிடுவோம். நாங்கள் வேலைக்கு புறப்பட்டவுடன் பெண்கள் மீண்டும் கெட்டு ஒட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சாய்ந்திரம் 6 அல்லது 7 மணிக்கு வேலை முடிந்துவிடும். சில நேரங்களில் அவசர வேலை இருந்தால், நைட்டு வேலை பார்க்க விருப்பப்படுபவர்களை இருக்க சொல்வார்கள். அதற்கு தனியாக் O.T கிடைக்கும். நாங்க யாரும் இருக்க மாட்டோம்.. ஏழு மணிக்கே கிளம்பி வீட்டிற்கு வந்துவிடுவோம். அப்போது தான் 8 மணிக்கு கரெண்ட் போகும் போது நிறைய விளையாட முடியும் என்பதற்காக..



மாலை வீட்டுக்கு  வரும் போதும் பெண்கள் தெருவில் ஒட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். தங்கள் கணவன்மார்களும் அப்பாமார்களும் வர வர ஒவ்வொரு பெண்ணாக தங்கள் வீட்டிற்குள் செல்வார். தினமும் ஃபேக்டரி வேலை முடிந்து வரும் என் தாத்தா எங்கள் வீட்டில் இருக்கு அரிக்கேன் லைட்டை அழகாக துடைத்துக்கொண்டிருப்பார். ’இத இப்படி கஷ்டப்பட்டு தொடைக்குறதுக்கு, பேசாம மெழுகுவர்த்தி வாங்கிராம்’னு நினைத்தாலும் பயந்துகொண்டு அவரிடம் சொல்ல மாட்டேன். எப்படா கரெண்ட் போகும் என்று 8மணி வரை காத்துக்கொண்டிருப்பேன். அதற்கு முன் வெளியே போனால் தாத்தாவின் குரல் வரும் “எங்கடா ஆட்டம் போட ஓடுற? ஒழுங்கா வீட்டுக்குள்ள இருக்க முடியலயா?” என்று. இப்போது மணி 8..



கரெண்ட் கட் ஆகும். உடனே தெருவெங்கும் ஓஓஓவென சத்தம் கேட்கும் எல்லா வீட்டிலும் இருந்து. “கரெண்டுக்காரன் போயிட்டான் கரெண்டுக்காரன் போயிட்டான்” என்று கத்திக்கொண்டே ஒவ்வொரு வீட்டில் இருக்கும் சிறுவர்களும் வெளியில் குடு குடுவென ஓடி வருவொம்.. பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கட்டிலை தெருவில் போட்டுக்கொண்டு கையில் ஒரு விசிறியையும் எடுத்து வீசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். எங்களுக்குள் இன்று என்ன விளையாடலாம் என்று விவாதம் வரும். எங்கள் ஃபேவரைட் விளையாட்டுக்கள், ஒளிந்து பிடித்து, பாட்டுக்கு பாட்டு, கழுதைப்பட்டம். கழுதைப்பட்டத்தில் தான் அறிவுக்கு வேலை இருக்கும். சுற்றி அமர்ந்து கொண்டு ஒரு படத்தின் முதல் எழுத்தை ஒருவர் சொல்ல வேண்டும். அடுத்த அடுத்த ஆட்கள் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் படத்தை எல்லாம் மனதில் ஓட விட்டு அந்த படத்தின் பெயர் தன்னோடு முடியாமல் இருக்குமாறு பார்த்து ஒவ்வொரு எழுத்தாக சொல்ல வேண்டும். ஒருவர் ‘கா’ எனறு ஆரம்பித்தால் ரெண்டாவது ஆள் ‘த’ என சொல்கிறார். இப்போது நான்காவதாக இருப்பவனுக்கு லேசாக பீதியாகி விடும். மூன்றாமவன் “ல” என சொல்லிவிட்டால் தான் ‘ன்’ என சொல்லி படப்பெயர் தன்னோடு முடிந்து விடும். அப்படி முடிந்துவிட்டால், கழுதைப்பட்டத்தில் தனக்கு “க” என்னும் பட்டம் கிடைக்கும். அதனால் அவன் எப்படி தப்பிப்பது என யோசிக்க வேண்டும். மூன்றாமவன் “ல” என சொன்னாலும் நான்காவதாக இருப்பவன் “ன்” என சொல்லி ’தொடரும்’ என சொல்லி விட்டால் அந்தப்படத்தின் பெயரில் இன்னும் மிச்சம் இருக்கிறது என அர்த்தம். நான்காவது ஆள் தப்பித்தான். ஆனால் அந்த வட்டத்தில் இருக்கும் எவனோடாவது படப்பெயர் முடியும். அவனுக்கு “க” எனும் பட்டம் கிடைக்கும். இப்படியே “க”, “ழு” என்று ஒவ்வொரு எழுத்தாக கூடிக்கொண்டே போகும். யார் முதலில் “கழுதைப்பட்ட”த்தை முழுதாக பெறுகிறாரோ அவர் மற்ற எல்லோரையும் கழுதை போல் சுமந்து கொண்டு தெருவில் செல்ல வேண்டும். என்ன ஒரு அற்புதமான விளையாட்டு?!



விளையாடி களைப்படைந்ததும் எல்லோரும் சாப்பிட தயாராவோம். ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தும் நேற்று எரிந்து மிச்சமான மெழுகுவர்த்தியும் வட்டிலில் சோறும் எடுத்து வருவோம். பெரும்பாலும் இரவு யார் வீட்டிலும் குழம்போ பொறிக்கறியோ கிடையாது. வெறும் பாலும், தெரு முக்கில் இருக்கும் தள்ளுவண்டியில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய பக்கோடாவும் தான். நாங்கள் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்கும் போது வீட்டு பெரியவர்கள் தங்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள். கரெண்ட் கட்டுக்கு காரணமான முதல்வரில் இருந்து தெரு கவுன்சிலர் வரை எல்லாருக்கும் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை விழும். அந்த அமைதியான இரவுக்கும் வெள்ளந்தியான பேச்சுக்கும் எங்கோ தூரத்தில் ஓடும் அச்சாபிஸ் ஜெனரேட்டர் தான் பின்னணி இசை. 


ஜெனரேட்டர் என்பது EBக்காரர்கள் கரெண்ட்டை தங்கள் ஆபிஸில் இருந்து வீடுகளுக்கு கொண்டு வருவதற்காக கண்டுபிடித்திருக்கும் இயந்திரம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இப்படி என்று மணி பத்தை நெருங்கும். மணியும் பத்தாகிவிடும். போகும் போது சரியாக எட்டு மணிக்கு போகும் கரெண்ட் வரும் போது கொஞ்சம் முன்னப்பின்ன தான் வரும். 10மணிக்கு மேலும் கரெண்ட் வரவில்லை என்றால் மிகவும் அச்சலாத்தியாகிவிடும். எல்லோரும் தூக்க கலக்கத்தில் மிதக்க ஆரம்பித்துவிடுவோம். விளையாடவும் பிடிக்காது. பத்தே காலுக்கு கரெண்ட் வரும். ஓஓஓ வென்று மீண்டும் தெருவெங்கும் சத்தம் வரும். “கரெண்டுக்காரன் வந்துட்டான், கரெண்ட்டுக்காரன் வந்துட்டான்” என்று கத்திக்கொண்டே வீட்டினுள் ஓடிச்சென்று படுத்துவிடுவோம். மீண்டும் அடுத்த நாள் அதே அச்சாபீஸ், கட்டிங் ஆபிஸ் என்று வேலைக்கு போய், அதே உணவு இடைவேளை, இரவு அதே கரெண்டுக்காரன் போயிட்டான், வந்துட்டான் கத்தல்கள் என்று இருந்தாலும் வாழ்க்கை என்றுமே போரடித்ததில்லை. விளையாடும் போது சண்டை வந்தாலும் மறுநாள் விளையாட்டு எங்களை ஒன்று சேர்த்துவிடும்.



பள்ளி ஆரம்பிக்கும் வரை இப்படியே தான் தினப்படி வாழ்க்கை. பள்ளி ஆரம்பித்தவுடன் கரெண்ட் கட் என்பது வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து இருந்தாலும் ஆசிரியரிடம் இருந்து தப்பிப்பதற்கான ஒரு காரணமாகவே இருந்து வந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக பவர் கட் எங்களையும், நாங்கள் ஒற்றுமையான விளையாட்டுக்களையும் மறந்து டிவிக்குள் தஞ்சம் புகுந்திருந்தோம். சக்திமானும், மாயாவி மாரீசனும் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் விளையாட்டுக்களை எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் வீட்டுப்பெண்களும் தெருவில் அமர்ந்து கெட்டு ஒட்டுவதை நிறுத்தியிருந்தார்கள். இரண்டு காரணங்கள் - டிவி, வாகனப்பெருக்கல். வீட்டிற்கு ஒரு சைக்கிள் இருந்தது மாறி, ஆளுக்கொரு சைக்கிள் வீட்டிற்கொரு வண்டி என மாறியது. அதனால் காலை நீட்டி சாவகாசமாக கதை பேசிக்கொண்டு தெருவில் அவர்களால் இருக்க முடியவில்லை. வீட்டிற்குள் கெட்டு ஒட்டும் போது பேச்சுத்துணைக்கு டிவி வந்துவிட்டது. மங்கை என்று ஒருவள் வந்தாள். இன்று வரை வீட்டுப்பெண்களுக்கு அவளைப் போல் மெகா சீரியல் நாயகிகள் தான் பேச்சுத்துணை.



இப்போது மீண்டும் சில வருடங்களாய் மின்வெட்டுக்கு நம் மீது பாசம் வந்திருக்கிறது. ஆனால் நம்மால் அதை சட்டை செய்யக்கூட முடியவில்லை. நேரமும் இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்? அன்பு என்றால் என்ன? சகமனிதரிடம் பழகுதல், எல்லோரும் ஒன்றாக உணவருந்துதல், பேசி களிப்புறுதல் என்று எல்லாவற்றையும் மறந்து இன்வெர்டர் வாங்கி வைத்துக்கொண்டு அதிலும் டிவியை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் உருப்படியாய் ஒன்றும் இல்லாவிட்டாலும் ரிமோட்டில் வேகமாய சேனலை மாற்றிக்கொண்டு..

சித்தன்னவாசல் - வரலாற்றின் ஆச்சரியம்..

$
0
0
சமீபத்தில் வேலை மாற்றலாகி புதுக்கோட்டை சென்றேன். புதுக்கோட்டை என்றதும் நண்பர்கள் அங்கிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பற்றி சொன்னார்கள். ஆவுடையார்கோவில், சித்தன்னவாசல், செட்டிநாட்டு கட்டிடங்கள் என்று புதுக்கோட்டையை சுற்றி இவ்வளவு இடங்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன். இதுமட்டுமல்லாமல் அமைதியான கடற்கரை, நண்டும் ஆமையும் ஓடும் வயல்வெளிகள் என்று சிவகாசி மாதிரி காய்ந்து கருகிப்போன இடத்தில் இருந்து அங்கு சென்ற எனக்கு பல விசயங்களும் குளு குளுவென மனதுக்கு இனிமை தருவதாக இருந்தன.

நான் ரசித்த செட்டிநாட்டு கட்டிடங்களையும், கடற்கரையையும், சித்தன்னவாசல் படங்களையும் ஃபேஸ்புக்கில் போட்ட போது, என் பெருமதிப்பிற்குரிய  ஐயா திரு.ரத்தினவேல் அவர்கள், எனது ப்ளாக்கில் சித்தன்னவாசல் அனுபவங்களை பற்றி எழுத கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட பெரும்பாலான விசயங்களை நான் செய்ய முயற்சி செய்வேன் (அவரிடம் வாங்கிய புத்தகங்களை திரும்ப கொடுப்பதை தவிர). அந்த வரிசையில் இந்த சித்தன்னவாசல் அனுபவ & பயணக் கட்டுரை.




 புதுக்கோட்டையில் இருந்து 16கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தன்னவாசல். 5ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால் யாரும் உள்ளே செல்லலாம். பூங்கா எல்லாம் கட்டி வைத்து அழகாக பராமரிக்கிறார்கள். பூங்காவில் தமிழன்னை சிலை போல் ஒன்று இருக்கிறது. என்னால் பூங்காவினுள் படம் எடுக்க முடியவில்லை. சாலை ஆரம்பத்தில் இருந்து டோக்கன் வாங்கி உள்ளே செல்லும் வரை வழிநெடுக பள்ளி கல்லூரி காதல் ஜோடிகள் தோள் மீது கையை போட்டுக்கொண்டு திரிகிறார்கள். இதில் பூங்காவில் நான் படம் எடுக்க, “என் ஆள ஃபோட்டோ எடுக்குறான், மாப்ள” என்று எவனாவது அடியாளை கூப்பிட்டால் என்ன ஆவது? பிழைக்க போன எடத்துல வம்பு வேண்டான்டா ராம்கொமாரு என்று கிளம்பிவிட்டேன் ஓவியப்பாறைக்கு. இங்கு வரும் பலரும் காதல் ஜோடிகளாகவே இருப்பதால் பார்க்கோடு தங்கள் சில்மிஷங்களை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். மேலே இருப்பது தான் ஓவியப்பாறைக்கு செல்லும் வழி.

அங்கு மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பார். எனக்கு பல அரிய விசயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் சொன்னவர் அவர் தான். அங்கிருக்கும் ஓவியங்களை பாருங்கள்.

இவை அனைத்தும் மேல் சுவரில் வரையப்பட்டிருக்கும் 3ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள். சுண்ணாம்பு பூசிய சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். குளத்தில் நிறைய தாமரைகள் மலர்ந்துள்ளன, கொக்குகளும், மீன்களும், முதலையும் யானையும் இருக்கின்றன.. முனிவர் ஒருவர் குளத்தில் பூ பறிக்கிறார். அத்தனையும் அச்சு அசலாக தத்ரூபமாக இருக்கின்றன.. இந்த மாதிரி ஒரு ஓவியத்தில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? 





  முனிவர் நின்று பூ பறிப்பதும் யானை ஒன்று நிற்பதும் இதில் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது பாருங்கள். பூவிதழ்களின் வண்ணம், தண்டு, இலைகள், என்று ஒவ்வொன்றும் தங்களின் நிஜமான வண்ணங்களில் இந்த ஓவியத்தில் இருப்பதை பாருங்கள்.




இந்த ஓவியத்தை நான் இன்னும் தெளிவாக எடுப்பதற்குள் அந்த ஊழியர் என்னை தடுத்துவிட்டார். படங்கள் எடுக்க கூடாதாம். இந்த ஓவியத்தில் ஒரு பூ மொட்டாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரும்பி மலர்வதை மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார்கள். தங்க வண்ண பின்புலத்தில் வரைந்திருக்கிறார்கள்.



இது போன்ற ஓவியங்களும் இதை விட இன்னும் அழகான மாடர்ன் ஆர்ட்டும் நம்மில் பலர் பார்த்திருக்கலாம். ஆனால் இதில் என்ன சிறப்பு என்றால், நாம் இது வரையப்பட்ட காலத்தை கொஞ்சம் மனதில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும். 1700 ஆண்டுகளுக்கு முன் சமணர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவை வரையப்பட்ட காலத்தில் பெயிண்ட்டோ, வண்ணங்களை கொண்டு படம் வரையும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் சிற்பங்கள் மட்டும் தான் அப்போதைய காலத்தில். எப்படி இவர்கள் வண்ணங்களை கண்டுபிடித்தார்கள்? மூலிகைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் அப்போதைய காலத்தில் பெயிண்ட் அடிக்க பிரஷ் எதுவும் கிடையாது. பின் எப்படி இவ்வளவு நேர்த்தியாக, சரியான அளவில் படம் வரைந்து வண்ணங்களை பரவ விட்டிருக்கிறார்கள்? இதுவும் மிகப்பெரிய கேள்வி தான். இந்தப்படங்கள் எல்லாம் மேல் சுவரில் வரையப்பட்டவை. அண்ணாந்து பார்த்துக்கோண்டே இந்த ஓவியங்களை எத்தனை நாட்கள், எத்தனை பேர்கள் வரைந்திருப்பார்கள்?

ஒரு சின்ன தவறு நேர்ந்தால் அதை மாற்றி வரைய முடியாது. எவ்வளவு கவனமும் உழைப்பும் நேர்த்தியும் தேவைப்பட்டிருக்கும்? இத்தனை காலம் அழியாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள்? இத்தனை கேள்விகளையும் உங்கள் மனதில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த ஓவியங்களை பாருங்கள். காணக்கண்கோடி வேண்டும் என்று நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதை எத்தனை பேர் உணர்வோம்? நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் வந்தனர். அந்த சிறுவன் அவ்வளவு ஆச்சரியமாக பார்த்தான். ஆனால் பெற்றோர், “என்ன இவ்ளோ சின்ன இடம் தானா? ஒன்னுமே இல்ல?’ என்று சலித்துக்கொண்டு தங்கள் மகனையும் வம்பாக இழுத்து சென்றனர். இன்னும் பலர் தங்கள் காதலை காதலன்/காதலியிடம் சொல்ல துப்பில்லாமல் இங்கு சுவர்களின் காதலை கொட்டுகின்றனர். ஒரு வரலாற்று விந்தையின் மீது அக்கறை இல்லாத இதுகள் எல்லாம் காதலில் என்ன அக்கறையுடன் இருந்துவிட போகின்றன? வெயில் பட்டால் கூட வண்ணமும் ஓவியமும் உரிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் வெயில் கூட படாமல் அரசாங்கம் இதை பராமரிப்பது மிகவும் நல்ல வரவேற்கத்தக்க செயல்.

இந்த ஓவியங்கள் மட்டுமல்லாமல் சமண மத தலைவர்கள் இருவரின் சிற்பங்களும் உள்ளன.. இது மஹாவீரரின் சிற்பம். இங்கு இப்போது ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்து இதை ஒரு கோவிலாக வழிபட்டு செல்கிறார்களாம்.




இது சமணர்களின் 23வது தீர்த்தங்கரர் பர்ஷவர். இவர்கள் இருவரும் தான் சமணர்களின் கடைசி இரண்டு தீர்த்தங்கரர்கள். 


ஓவியங்கள் இருக்கும் அதே இடத்தின் பக்கவாட்டில் தான் இந்த சிற்பங்கள் இருக்கின்றன.. இதை தாண்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. அங்கே மூன்று சிற்பங்கள் இருக்கின்றன. அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களும் சமண மத துறவிகளாக இருக்கலாம்.




இந்த அறையின் சிறப்பு என்னவென்றால், இங்கு அடிவயிற்றில் இருந்து ‘ம்ம்ம்ம்’ என்று நீண்ட சப்தம் எழுப்பினால் அது ஒரு வித அதிர்வை உங்கள் உடம்பில் உண்டு பண்ணி சிலிர்க்கவைக்கும்.. நல்ல அனுபவம் அது. சித்தன்னவாசல் ஓவியமும் இந்த சிறப்ங்களும் ஒரு பாறையை குடைந்து அமைக்கப்பெற்றவை என்பது அச்சரியத்தில் இன்னொரு ஆச்சரியம். 

அடுத்ததாக இங்கேயே இருக்கும் சமணர் படுகைக்கு சென்றேன். மணி மதியம் 3. மாலை வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. அங்கும்5ரூ.க்கு டோக்கன் எடுத்தேன். டோக்கன் எடுக்கும் போதே ஊழியர் சொன்னார், “நீங்க தான் சார் மத்தியானத்துல மொத  ஆளு”.. கேட்டதுமே பீதியாகிவிட்டது எனக்கு. அந்த மலை மீது நான் மட்டும் தனியாக ஏற வேண்டும் என்னும் நினைப்பே வியர்க்க வைத்துவிட்டது. துணைக்கு யாரும் கிடையாது.  ஒரு முறை அந்த குன்றை மீண்டும் பார்த்தேன். கடவுளின் மீதும் அம்மா அப்பாவின் புண்ணியங்கள் மீதும் சுமையை ஏற்றி விட்டு மலையேற ஆரம்பித்தேன்.



மெதுவாக அடி மேல் அடி வைத்தேன். இது சமணர்கள் கி.மு.3ம் நூற்றாண்டில் பாண்டிய சைவ சமய மன்னர்களுக்கு பயந்து இங்கு வந்து ஒளிந்து வாழ்ந்ததாக கூறுகிறார்கள். மலை ஏறும் போதே நீங்கள் நினைப்பீர்கள், ‘தப்பி பிழைக்க வரும் பாவி இங்கு வந்தா ஒளிய வேண்டும்? இதுக்கு இவைங்க பாண்டிய மன்னன் கையால செத்தே போயிருக்கலாம்” என்று. அந்த அளவுக்கு உங்களை கஷ்டப்படுத்தும். மேலே ஏறி உச்சியை அடைந்து மீண்டும் அந்தப்பக்கம் கீழே இறங்க வேண்டும்.




மேலே படத்தில் இருக்கும் இந்த இடத்தில் நிற்கும் போது எனக்கு பயங்கரமாக மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. கொளுத்தும் வெயில். கையில் தண்ணீரும் இல்லை.  கீழே இறங்கலாம் என்றால் மேலே ஏறியதை விட இறங்குவது இன்னும் டெரராக இருந்தது. உதவிக்கு கூப்பிடக்கூட ஆள் இல்லை. செல் ஃபோனில் டவரும் படுத்துவிட்டது. இந்த வள்ளலின் குரங்குகள் வேறு.. கிளைகளின் அங்கும் இங்கும் தாவிக்கொண்டும் நம் வழியில் குறுக்கே வந்து கொண்டும் மயான அமைதியில் பயமேற்றும் சல சலப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சியை கிட்டத்தட்ட தவழ்ந்தே அடைந்துவிட்டேன்.



ஏறிச்செல்லும் பாதையை பாருங்கள். கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் உங்கள் வீட்டிற்கு சொல்லி அனுப்பிவிடலாம் (யாராவது உங்களை கண்டுபிடித்தால் மட்டுமே). உச்சிக்கு வந்தாகிவிட்டது, சரி எங்கப்பா சமணர் படுகை என்று தேடினால் பாதை மீண்டும் கீழே இறங்கியது. என்னங்கடா இது கொடுமை என்று கைப்பிடியை பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கி செல்ல ஆரம்பித்தேன். பலமான காற்று வேறு. குரங்குகளும் ‘இவன்ட்ட எதாவது இருக்காதா?’ என்று என்னை ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்தன.

பிறந்ததில் இருந்து நான் இவ்வளவு தைரியமாகவும் பயத்துடனும் ஒரே நேரத்தில் இருந்ததில்லை. கூட்டமாக நண்பர்களோடு சென்றால் இந்த பயமெல்லாம் இருக்காது. தனிமையும் மதிய வெயிலும் குரங்கு சேட்டைகளும் பீதியை கிளப்பத்தான் செய்யும்.


இப்படியே கொஞ்ச தூரம் சுத்தி சென்றால் ஒரு நுழைவு வாயில் மாதிரி கட்டிவைத்திருக்கிறார்கள். செல்லும் போதே அணில்களின் சத்தமும் வௌவால்களின் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். கொஞ்சம் தூரத்தில் கம்பிகள் போட்டு பாதுகாப்பாக “நான் தான் சமணர் படுகை” என்று நின்று கொண்டிருக்கும் சமணர் படுகை. முழங்கால் வரை தான் தடுப்பு இருக்கும். கொஞ்சம் லம்பினாலும் கீழே விழுந்துவிடுவோம். கடவுள் மேல் பாரத்தை போட்டுக்கொண்டு மெல்ல மெல்ல அருகில் சென்றேன். சமணர் படுகைக்கு அருகில் சென்றுவிட்டேன்.




திடீரென்று பட படவென்று சத்தம் எழுப்பிக்கொண்டு வௌவால்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இவ்வளவு தூரம் தைரியமாக வந்த என்னை இந்த வௌவால்கள் மொத்தமாக சாய்த்துவிட்டன. ஆள விட்டா போதும் என்று வேக வேகமாக திரும்பிவிட்டேன். தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பது தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை? ஆனால் பயம் என்பது ஒரு முறை லேசாக வந்துவிட்டால், மனதை மூடுபனி போல் மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். கீழே இறங்கியதும் நினைத்துக்கொண்டேன், அடுத்த முறை நண்பர்கள் அல்லது உறவினர்களோடு வந்து கண்டிப்பாக சமணர் படுகையையும் பார்க்க வேண்டுமென்று.


எதிலும் மெத்தனமாக இருக்கும்  நம் அரசாங்கம் சித்தன்னவாசலை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல். அரசை எவ்வளவோ விசயங்களில் குறை  சொல்லும் மக்கள், தொல்லியல் துறையில் அரசின் இந்த அக்கறையில் ஓரளவாவது தாங்கள் செய்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வேண்டும். காதல் கதைகளை கிறுக்குவதற்கும், காதலிகளோடு அசிங்கம் செய்வதற்கும், கலைச்செல்வங்களை பாழ்படுத்துவதற்கும் இந்த இடங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். 

இன்னொரு முக்கியமான விசயம், நீங்கள் இங்கு செல்வதாக இருந்தால் கண்டிப்பாக கையில் தண்ணீரும் துணைக்கு உங்கள் மனதொத்த ஆட்களும் இருக்க வேண்டும். வயதானவர்கள் பெரும்பாலும் ஓவியத்தை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம். சமணர் படுகை வயதானவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் தான். வரலாற்றின் ஆச்சரியங்களை அறியும் ஆசை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நல்ல தீனி போடும் இடம் தான் இந்த சித்தன்னவாசல். நான் மீண்டும் ஒரு முறை செல்லலாம் என்று இருக்கிறேன். என்னோடு யாரெல்லாம் வரப்போகிறீர்கள்? அதே போல் அடுத்த முறை குடுமியான்மலை பற்றி எழுதவிருக்கிறேன். அடுத்த வாரம் குடுமியான்மலை விசிட்.. வெகு விரைவில் படங்களுடன் பதிவு..

மழை நேர புலம்பல்கள்..

$
0
0


     இந்த மழை தான் எவ்வளவு விசால மனதுடையது? சரியாக பெய்யவில்லை என்று நாம் வைதாலும், கோவித்துக்கொண்டு மறுமுறை வராமல் இருப்பதில்லை.. அதிகம் பெய்கிறதே என்று ஏசினாலும் பெய்வதை நிறுத்துவதில்லை. வில்லனால் துரத்தப்படும் கதாநாயகியை கடைசியில் கதாநாயகன் காப்பாற்றுவது போல், பஞ்சத்தால் நாம் துரத்தப்பட்டால், நம்மை காப்பாற்றும் கதாநாயகன் மழை தான். தேவை இல்லாத நேரத்தில் தொந்தரவு செய்தாலும் காதலியை வெறுக்க முடியுமா? தாமதமாக வரும் காதலனை தான் மறுக்க முடியுமா? அதே போல் தான், தேவை இல்லாத நேரத்தில் வந்தாலும், தாமதமாக வந்தாலும் நாம் மழையை வெறுப்பதுமில்லை, மறுப்பதில்லை..
 
  
  

     இன்று நாம் ஒவ்வொரு பெயரில் அழைக்கும் ஏரி, குளம், கண்மாய், ஆறு, ஓடை, கால்வாய், வாய்க்கால், கடல், அருவி எல்லாவற்றுக்கும் ஒரே தாய் மழை தான். தன்னை பற்றி எத்தனை பாடல்கள் எழுதினாலும், எத்தனை கதைகளை சொன்னாலும் இன்னும் இன்னும் நிறைய நிறைய எழுத புதுப்புது வார்த்தைகளை கொடுக்கும் சக்தி மழைக்கு உண்டு. மழை மட்டும் தான் ஆச்சரியமா? வானத்தில் நிகழும் இடி மின்னலின் ஒலியும் ஒளியும் எத்தனை சிலிர்ப்பூட்டும் விசயங்கள்? ஒரு மின்னலில் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரு ஆண்டு தொடர்ந்து கரெண்ட் தரளாம் என்று சொன்னாலும், சிறு வயதில் “சாமி வீட்ல டியூப் லைட் சரியா எரியல, அதான்” என்று மின்னலுக்கு என் மொழியில் அப்பா கொடுத்த விளக்கம் தான் பிரமாண்டமாய் இருக்கிறது இன்றும் எனக்கு.

         


           ஆனால் இந்த மழை சில விசயங்களில் மிகவும் மோசமானது.. அடர்ந்த குளிர் காற்றில் யாரோ புகைக்கும் சிகரெட் மனம் நம் நாசியை தொடும் போது, தன் சாரலை நம் மீது தெளித்து, சிகரெட்டின் மேல் கூட காதல் கொள்ள செய்கிறது. வாழ்வில் நாம் மறந்து விட்ட மிக மிகிழ்ச்சியான சம்பவங்களும், மறக்க நினைக்கும் மிக துக்கமான நினைவுகளும் மழையின் வடிவில் மீண்டும் மனதை தட்டும். கஷ்டப்பட்டு மறக்க நினைக்கும் பல விசயங்களை முதலில் இருந்து தெளிவாக ஞாபகப்படுத்திவிட்டு, இரவு நேர தவளைகளுடன் கள்ளச்சிரிப்பு சிரிக்கிறது இந்த நல்ல மழை. நாமும் அன்று அழுததை இன்று நினைத்து சிரிப்போம், அன்று சிரித்ததை இன்று நினைத்து அழுவோம்.





        நாயகியை பார்க்காமல் அவளின் நினைவுகளுடனே வாழ்க்கையை நகர்த்தும் சினிமா காதலன் போல், ‘மழை கூட வேண்டாம். எங்கோ பெய்த மழையின் மண் வாசம் மட்டும் போதும், அந்த மனத்தோடே நாட்களை கடத்திவிட’ எண்ணும் நான் மழையின் நிஜக்காதலன். மழை பலருக்கு தண்ணீரை கொடுக்கும், சிலருக்கு விவசாயம் கொடுக்கும், ஆனால் எல்லோருக்கும் முதலில் மகிழ்ச்சியை கொடுக்கும். நாள் முழுதும் சூடாக எரிந்து விழும் கணவனை, ஒரே ராத்திரியில் வசியம் செய்திடும் மனைவியை போல, வருடம் முழுதும் சூரியனால் வெந்துகொண்டிருக்கும் பூமியை தன் தூரல் விழுதுகளால் சட்டென குளிர்வித்துவிடுகிறது சாரல் மழை..





        பள்ளி காலங்களில் வரும் மழை தான் எவ்வளவு சுகமானவை? விருப்பப்பட்டு கடைசியாக மழையில் நனைந்தது எப்போது என்கிற கேள்விக்கு எல்லோரும் சொல்லும் ஒரே பதில், “பள்ளி காலம்” தான். வகுப்புக்குள் மழையின் போது வரும் ஒரு இருட்டும், அழுத்தமான அமைதியும், சளிப்பிடித்தவனின் குரல் போல மெது மெதுவாக ஆரம்பித்து வரும் மழையின் சத்தமும் நமக்கு பிடித்த ஆசிரியரின் வகுப்பில் தான் பெரும்பாலும் நடக்கும். அல்லது மழை வரும் போது பாடம் நடத்தும் ஆசிரியர் நமக்கு பிடித்துப்போய்விடுகிறாரோ? ’மழையால் இன்று பள்ளி விடுமுறை’  - பள்ளி அறிவிப்பு பலகை கூட நமக்கு சிநேகம் ஆகிவிடும் பரிட்சை அன்று வரும் காலை வேளை மழையால். தேச தலைவரின் பிறந்த நாள் போல், ஒரு பண்டிகை போல் விடுமுறை விட்டு மழையை கொண்டாடுவது பள்ளிகள் மட்டும் தான். மழையை பார்த்தாலே துள்ளி ஓடி நனையும் பால்யம், மழையை பார்த்தாலே அலறி ஓடி ஒளியும் “பொறுப்பான வாழ்க்கையை” ஏளனம் செய்கிறது.





        மழை வானத்தில் இருந்து மலையில் விழுந்து அருவியாகி, பள்ளத்தில் இறங்கி நதியாகி, சம்வெளியில் ஓடி ஓடையாகி, கடலில் கலந்த காலம் எல்லாம் புவியியல் புத்தகத்தில் மட்டும் தான். இன்று வானத்தில் இருந்து பெய்யும் மழை நேராக நம் தெரு சாக்கடையில் தான் கலக்கிறது. மனிதன் சென்று வரவே இடம் பத்தாத இந்த பூமியில் மழைக்கு இடம் கொடுப்பார் யாரோ? மழையில் குழந்தைகளை நனையவிடும் பெற்றோர்கள் கூட அரிதாகிவிட்டார்கள். குழந்தைகளும் கதவுக்கு பின் நின்றோ, கார் கண்ணாடிக்கு மறுபுறம் நின்றோ மழையை ஒரு கூண்டுக்குள் இருக்கும் மிருகம் போல பார்க்க பழகிக்கொண்டார்கள். ஊருக்கே பொதுவாக எல்லோருக்குமே சமமாக பெய்தாலும் மழை ஒரு அநாதை தான், சீண்டுவார் யாரும் இல்லாமல் அழுதுகொண்டே சாக்கடையில் ஓடுகிறது.

பீட்சா - தைரியம் ஒடஞ்சு போச்சு பீஸ் பீஸா..

$
0
0



உருவம், துருவ நட்சத்திரம், மைடியர் லிசா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சிறு வயதில் நாம் பார்த்த பேய்ப்படங்கள் நம்மை எப்படி பயமுறுத்தின என்று கொஞ்சம் கொசுவர்த்தி சுருளை கண் முன் சுற்றி ப்ளாஸ்பேக் விட்டுப்பாருங்கள். வெள்ளை உடையுடன் ஒரு உருவம், தலை முடி விரிந்து பறக்கும், ஊஊஊ என்னும் ஓநாயின் ஊளை, காற்று, கடைசியில் பேயை காமிக்கும் போது முகமெல்லாம் ஈரமான பவுடரை அப்பியிருப்பார்கள். கொஞ்சம் அறிவாளி இயக்குனர் அதில் சில கோடுகளை போட்டிருப்பார். இப்போது பார்த்தால் காமெடிப்படமாக இருக்கும் இவைகள் தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பேய்ப்படம். 



ஆனால் சமீபமாக வரும் “யாவரும் நலம்”, “ஈரம்” போன்ற படங்களை அறிவார்த்தமான பேய்ப்படங்கள் என்று சொல்லலாம். கொடூர மேக் அப் இல்லாமல், ஊஊஊ ஊஊ சவுண்ட் இல்லாமல், முக்கியமாக வெள்ளை புடவையில் பேயை காட்டாமல், காட்சிகள் மூலமும், இசையின் மூலமுமே  நம்மை பீதியடைய வைப்பது தான் இப்போதைய படங்களின் யுக்தி. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் தான் “பீட்சா”..



பீட்சா கடையில் டெலிவெரி பாயாக இருக்கும் விஜய சேதுபதியும், பேய்க்கதைகளில் ஆர்வம் இருக்கும் பேய் நாவல் எழுத நினைக்கும் ரம்யா நம்பீசனும் லிவிங் டுகெதர் ஜோடிகள். ஒரு இரவில் பீட்சா டெலிவரிக்கு போகும் போது பங்களா ஒன்றில் மாட்டிக்கொள்கிறார் ஹீரோ. அங்கிருக்கும் பெண், அவளின் கணவன், குழந்தை என்று ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொருவர் கொல்லப்படும் போதும் ஹீரோ கொண்டு வரும் பீட்சாவில் ஒவ்வொரு பீஸ் காணாமல் போகிறது. பயந்து போன ஹீரோவுக்கு பிறகு தான் தெரிகிறது அந்த மூன்று பேரும் ஏற்கனவே இறந்து போனவர்கள் என்று. அங்கிருந்து எப்படியோ தப்பிவிடுகிறார். ஆனால் அந்த மூன்று பேர் யார், அங்கிருந்த குழந்தைக்கும் பீட்சா ஓனரின் பேய் பிடித்திருக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம், ரம்யா நம்பீசன் யார் என்று ஒவ்வொரு முடிச்சாக அவிழும் இடம் தான் உச்சம். க்ளமைக்ஸ் ட்விஸ்ட் செம..




விஜய் சேதுபதியின் நடிப்பு உண்மையான பயத்தையும், நாமும் அவரருகில் இருப்பது போன்றதொரு பதைபதைப்பையும் கொண்டுவருகிறது. ‘தென்மேற்கு பருவக்காற்று’ பார்த்ததில்லை என்றாலும், ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருப்பார். கரெண்ட் இல்லாத பெரிய பங்களாவில் வெறும் டார்ச் லைட்டை மட்டும் வைத்துக்கொண்டு அவர் படும் பாடு அருமை. ரம்யா நம்பீசன் - தமிழகம் கொஞ்ச வருடங்களாக மறந்திருக்கும் பப்ளி ஹீரோயின் ட்ரெண்ட் மீண்டும் இவர் மூலம் வந்தால் தேவலை. எல்லாமே வத்தலும் தொத்தலுமாக இருக்கின்றார்கள். நடிக்க பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்.





முதல் அரை மணி நேரம் ரொம்ப ரொம்ப நார்மலாக போகும் கதை, சேதுபதி தன் ஓனரின் மகளை பார்க்கும் காட்சியில் இருந்து சில்லிட வைக்கும் அழுத்தமான காட்சிகள் மூலம் பறக்க ஆரம்பிக்கிறது. இன்டர்வலுக்கு முந்தைய அரை மணி நேரமும், அடுத்த அரை மணி நேரமும் நம் மயிரெல்லாம் நட்டுக்கொள்ளும் அளவுக்கு டெரர் காட்சிகள் இருக்கின்றன. அந்த குழந்தை “அங்க இருக்கு” என்று கையை காட்டும் திசையில் சேதுபதி திரும்பிவிட்டு மீண்டும் அந்த குழந்தை பக்கம் திரும்பும் காட்சி, முதுகுத்தண்டை ஐஸ் ஊசியால் குத்துவது போல் இருந்தது. கொஞ்சமான பாத்திரங்கள் தான் என்றாலும் அனைத்துமே கதைக்கு தேவையான, தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கும் பாத்திரங்கள்.




வசனங்களும் வத வதவென்று இல்லாமல் சிம்பிளாக, சமயத்தில் நக்கலாக, சில நேரங்களில் மிரட்டலாக (கடைசியில் அந்த பாட்டி “நித்யா வந்து பீட்சா எடுத்துட்டு போ” என்று சொல்லும் வசனம்) இருக்கின்றன. “நான் எப்பையாவது கேர்லெஸ்ஸா இருந்திருக்கேனா?” என்று ஹீரோயினிடம் கோவப்படும் ஹீரோவை மெதுவாக பார்த்து “நான் ப்ரெக்னண்ட்டாக இருக்கேன்” என்று ஹீரோயின் சொல்லும் காட்சியும், “கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகும்” என்று ஹீரோ சொல்ல, நண்பன் “கல்யாணாத்துக்கு காரணமான கம்பெனி மேல கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்ரலாமா?” என்று கேட்பதும் சரியான நக்கல்கள்.



சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சில நேரங்களில் கொஞ்சம் தலைவலி கொடுப்பது போல் இருந்தாலும், அந்த பங்களா காட்சியில் ஃபோன் மணி அடிக்கும் போதும், குழந்தையின் அறைக்கு ஹீரோ செல்லும் போதும் ஏற்கனவே மனதிற்குள் இருக்கும் திக் திக்கை இன்னும் கூட்டிவிடுகிறது. சில சமயங்களில் காட்சியோடு சேர்த்து பார்ப்பவர்களையும் அலற செய்து விடுகிறது. பேய் படங்களில் கேமராமேனின் பங்கு மிக மிக முக்கியம். ‘யாவரும் நலம்’ல் பி.சி.ஸ்ரீராமின் காட்சிகள் படத்தின் பெரும் பலம். இதிலும் கேமரா காட்சிகள் நம்மை அந்த பங்களாவின் அறைகளுக்குள் இன்ச் பை இன்ச்சாக திகிலுடன் உடன் அழைத்து செல்கிறது. அந்த பங்களாவின் மேப்பை மனப்பாடமாக நாம் சொல்லும் அளவிற்கு பிரித்து மேய்கிறது கோபியின் கேமரா.




க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க ஒரு வேளை ‘குடைக்குள் மழை’ போல் இருக்குமோ என்று நினைக்க தோன்றினாலும் இயக்குனர் ஜெயித்திருப்பது அந்த ட்விஸ்ட்டில் தான். சரி அந்த ட்விஸ்டோடு விட்டாரா என்றால் அதற்கு அடுத்தும் கடைசி காட்சியில் டிவியில் ”தில்லு முள்ளு தில்லு முள்ளு” பாடலை காட்டி அடுத்த உச்சகட்ட ட்விஸ்ட்டையும் வைத்து படத்தை முடிக்கிறார்.




ஒரு முழுமையான திகில் படம் பார்த்த உணர்வு கிடைக்கும் உங்களுக்கு “பீட்சா” மூலம். படம் பார்த்துவிட்டு ரூமுக்கு போக கொஞ்சம் பயமாக இருந்ததால் ஊரை சுற்றி விட்டு நண்பர்களிடம் ஃபோனில் மொக்கை போட்டுவிட்டு கொஞ்சம் பயம் மறைந்தவுடன் தான் அறைக்கு திரும்பினேன். கதவை திறந்தேன். கட்டிலில் யாரோ தின்றது போக மீதி பாதி இருந்தது ஒரு பீட்சா.. கதவு மூடிக்கொண்டு என் வீட்டு டிவியில் தில்லு முள்ளு பாடல் ஓட ஆரம்பிக்கிறது..
Viewing all 124 articles
Browse latest View live